செவ்வாய், 26 ஏப்ரல், 2011

P.M.K.. about counting method: வாக்குச் சாவடி வாரியாக ஓட்டு எண்ணிக்கை: பாமக கோரிக்கை

வாக்குச் சீட்டுப் பயன்பாட்டில் இருந்த பொழுது சாவடி வாரியாக எண்ணிக்கை  இருப்பின் குறிப்பிட்ட பகுதி மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிந்து தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது என்பதற்காகத்தான் அந்த முறையை மாற்றினார்கள். இப்பொழுது அதே முறையை நடைமுறைப்படுத்தினால், செல்வாக்குள்ள வேட்பாளர்களின் கொடுமைகளுக்கு உள்ளாக நேரிடுமே! ஒவ்வொரு வாக்குச்  சாவடி வாரியாக எண்ணிக்கையைச் சரிபார்த்த பின்பு ஒட்டு மொத்தமாக எண்ணுவதே சிறந்தது.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 





வாக்குச் சாவடி வாரியாக ஓட்டு எண்ணிக்கை: பாமக கோரிக்கை

First Published : 26 Apr 2011 05:02:02 AM IST


சென்னை, ஏப். 25: வாக்கு எண்ணிக்கையின்போது புதிய முறையைக் கையாளாமல் வாக்குச் சாவடி வாரியாக எண்ண வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.  பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.  இது குறித்து ஜி.கே. மணி கூறியது: வாக்கு எண்ணிக்கையில் புதிய முறையை கையாளப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாமக சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடிந்ததும் 17-சி என்ற படிவம் வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தரப்படும். அதில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் போன்ற விவரங்கள் தேர்தல் அலுவலர், முகவர்களின் கையெழுத்துடன் இருக்கும். அதில் ஒரு படிவம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  அந்தப் படிவத்துடன், வேட்பாளர்களின் முகவர்களிடம் இருக்கும் படிவத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவார்கள். அப்போதுதான் தவறுகளை தடுக்க முடியும்.  எனவே, புதிய முறையைப் பின்பற்றாமல் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.  ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்களின் முகவர்கள் சந்தேகம் எழுப்பினால் அதற்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களின் தலைமை முகவர் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். இது தொடர்பாக 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்றார் ஜி.கே. மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக