புதன், 24 நவம்பர், 2010

முத்துக்குமாருக்குப் படிமம்

அருமையான தீர்ப்பு. போற்றுதலுக்குரிய முத்துக்குமார் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளமையும் பாராட்டிற்குரியது. கொள்ளைக்காரர்கள்,  கொலைகாரர்கள், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சிலைகளாக நிற்கையில் தன்னுயிரையே தமிழர் எழுச்சிக்காகக் கொடுத்த முத்துக்குமாருக்குப் படிமம் நிறுவ மறுப்பது
அறமற்றது என்பதை இனியும் கூட உரியவர்கள் உணர மாட்டார்கள். வேறு வகையில் தடை வரும் முன் விரைவில் படிமத்தைத் திறநது விடுங்கள். வீரப் போராளி முத்துக்குமார் புகழ்  ஓங்குக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு சிலை வைக்க நீதிமன்றம் அனுமதி

First Published : 24 Nov 2010 03:14:52 AM IST


மதுரை, நவ. 23: இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தஞ்சை அருகே கிராமத்தில் திறக்க அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.  இது குறித்து தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச் செயலர் மணியரசன் தாக்கல் செய்த மனு:  இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்யத் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் முத்துக்குமார் 29.1.2009-ல் தீக்குளித்து உயிரிழந்தார்.   அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது மார்பளவு உருவச் சிலையை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சியைச் சேர்ந்த சாணுரப்பட்டி கிராமத்தில் தனியார் இடத்தில் நிறுவ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டோம். ஆட்சியர், அந்த இடத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டார். அவற்றையும் சமர்ப்பித்தோம். ஆனாலும் அரசிடம் அனுமதி பெறவேண்டும் எனக் கூறி எங்கள் மனுவை நிராகரித்துவிட்டார். எனவே, சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பு:  தமிழக வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த வீரர்களுக்கு நடுகல் நாட்டி போற்றுவது மரபாக உள்ளது. இதற்கு அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர், அவரது இயக்கத்தினர் போற்றுதலுக்குரிய முத்துக்குமாரின் மார்பளவுச் சிலையை, தனியார் இடத்தில் நிறுவ அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.   அரசு அனுமதி இன்றி சிலை திறப்பது சரியானது அல்ல. இருப்பினும் சாதாரணமான இந்த விஷயத்தை அதிகாரிகள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர். மாவட்ட அதிகாரி எழுப்பியுள்ள ஆட்சேபங்கள் சட்டரீதியானவை அல்ல. வருவாய்த் துறை ஆவணங்கள் அதிகாரிகளிடம் இருப்பவை. அவற்றை மனுதாரரிடம் கேட்டது சரியல்ல. மேலும் சிலை களிமண், மரம், உலோகம், கல் ஆகியவற்றால் செய்கிறீர்களா?  வெண்கலத்தினால் மட்டுமே சிலை செய்ய வேண்டும் என அரசு விதி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தேவையற்றது. பொது இடத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கே இந்த விதிகள் பொருந்தும். அரசியல் கட்சியினர் தியாகியாக மதிக்கும் ஒருவருக்கு சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது. முத்துக்குமாரின் சிலை வைக்க மிரட்டல் உள்ளது என அதிகாரிகள் குறிப்பிடவில்லை. எனவே, தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக