திங்கள், 8 பிப்ரவரி, 2010

விரைவில் தனி ஈழம் அமையும் – புலவர் புலமைப்பித்தன்

பதிந்தவர்_வன்னியன் on February 7, 2010
பிரிவு: முதன்மைச்செய்திகள்

தமிழ்நாட்டின் கோவை கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து ஆற்றிய உரை….

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நிதி திரட்டுவதற்காக கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எனது நண்பர் கலைஞர் கருணாநிதி நடத்துகிறார். ஆனால், நீதியை நிலைநாட்ட இங்கு மாநாடு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்ற படிகட்டுகளில் ஏறித்தான் இம்மாநாட்டுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா போராட்டம் நடத்தினார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் ஆயுதப்புரட்சி ஏற்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஆயுதப்புரட்சியை துவக்கிவைத்ததற்கு நானும் ஒரு காரணமானவன்.

எம்.ஜி.ஆரிடம் பேசி தம்பிக்கு ரூ.2 கோடி வழங்கினோம். இந்த பணத்தில் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்டத்துக்கு தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், முடிந்துவிட்டது என யாராவது கூறினால் அவர்கள் முட்டாள்கள். எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது. ஆனால், அதில் இருந்து மீண்டு எழும்பும். அதுபோல தான் ஈழ விடுதலைப் போராட்டமும். இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.

இலங்கை ராணுவம் மட்டும் தனியாக விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தால் 30 நாட்களில் விடுதலைப்புலிகளால் வெற்றிப் பெற முடியும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ராணுவங்களுடன் இலங்கை ராணுவம் இணைந்து போரிட்டதால் தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.

இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது என்பதற்கு பல ஆதாரங்களை கூற இயலும். என்.டி.டி.வி.யின் தலைமை நிருபர் நிதின் கோகலே எழுதியுள்ள புத்தகத்தில் பல சான்றுகளை காண்பித்துள்ளார். 2006-ம் ஆண்டில் 17 ஹெலிகாப்டர்கள், 2 போர் கப்பல்களை இலங்கை ராணுவத்தின் வண்ணம் பூசி இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இதுபோல பல தந்திரங்களை இந்திய ராணுவம் கையாண்டுள்ளது.

உலகில் 10 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழனுக்கென்று தனி நாடு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எனது நண்பர் கருணாநிதி அறிவித்தார்.

அறிவித்தப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் ஈழத்தில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கலாம். அவர் ராஜினாமா செய்தால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இலங்கை ராணுவத்துக்கு இந்திய உதவி கிடைத்திருக்காது.

மிகப்பெரிய களங்கத்துக்கு ஆளாகிவிட்டார் எனது நண்பர் கருணாநிதி. இந்த களங்கத்தை துடைக்க தான் கோவையில் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார். கங்கையில் உள்ள அனைத்து நீரை வைத்து அவர் கைகழுவினாலும் களங்கத்தை துடைக்க இயலாது.

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் 2, 3, 4-ம் தர குடிமக்களாகத்தான் வாழ்கின்றனர். முதல்தர குடிமகனாக, தனிநாடு உடையவராக தமிழர்கள் வாழ்ந்தால் தான் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படும்போது தட்டிக்கேட்க முடியும். தமிழனுக்கென்று தனி நாடு ஈழத்தில் விரைவில் அமையும்

(Visited 136 times, 117 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக