மிதியூர்தி ஓட்டுநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிதியூர்தி ஓட்டுநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இரக்கமனத்திற்குரியவர்

இரக்கமுள்ள மனசுக்காரன்டா...


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_787295.jpg
பட்டப்படிப்பு ப் படித்துவிட்டு ப் பல்வேறு வேலைகளை ப் பார்த்த ஒருவர் தற்போது மதுரை மக்களின் அன்பைப் பெற்ற மிதியூர்தி/ஆட்டோ ஒட்டுநராக உள்ளார்.
அவர் பெயர் டி.மதன்


மதுரை வக்பு கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பு எடுத்து படிக்கும் போது இதை படித்தால் வேலை கிடைக்காது என்று நண்பர்கள் சிலர் சொல்ல,"நான் வேலைக்காக படிக்கவில்லை என் அறிவை விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன், மேலும் வரலாறு என்பது எனக்கு பிடித்த விஷயம், நாட்டோட வரலாறும் நகரத்தோட வரலாறும் தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் நானே வரலாறு படிக்காவிட்டால் எப்படி'' என்று சொல்லிவிட்டு வரலாறு படித்தவர். தொடர்ந்து வரலாற்று பாடத்தில் முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது வேலை பார்க்கவேண்டிய குடும்ப சூழ்நிலை.
சென்னையிலும், திருப்பூரிலும் பல்வேறு வேலை பார்த்தார் எதுவுமே அவருக்கு மனது பிடிக்கவில்லை சொந்த ஊரான மதுரைக்கே திரும்பினார். பொழுது போக்காக "கிளாரினட் 'எனும் இசைக் கருவியை வாசிக்கப் பழகியிருந்ததால் உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில் கிளாரினட் இசைக் கலைஞராக கொஞ்ச நாள் இருந்தார்.அதில் பணம் வரவில்லை ஆனால் புகழ் கிடைத்தது.


இதிலும் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இவரது சகோதரர் "கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஒட்டிப்பாருப்பா உனக்கு பிடிக்கும்' என்று சொல்லி வழிகாட்ட மதன் ஆட்டோ ஒட்ட துவங்கினார்.
எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன் ஆட்டோ ஒட்டுவதிலும் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தினார், படித்த பட்டப்படிப்பும் இவரது அணுகுமுறையில் பண்பாட்டினை வெளிப்படுத்தியது. இவர் கிளாரினட் வாசித்ததன் மூலம் கிடைத்த புகழும் எளிதில் மக்களை அணுகவைத்தது.


நியாயமான கட்டணம், ஒரு எஸ்எம்எஸ் கொடுத்தால் போதும் உடனே தொடர்பு கொள்வது எந்நேரம் அழைத்தாலும் செல்வது என்பது போன்ற காரணங்களால் மதுரை திருப்பாலை பகுதி மக்களின் அன்பிற்கு பாத்திரமானார், அந்த பகுதி பெண்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன் போல அக்கறை எடுத்து செயல்படுவார். இதன் காரணமாக எங்கே போகவேண்டும் என்றாலும் கூப்பிடு மதனை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
இது மட்டுமின்றி தனது ஆட்டோ சவாரி இல்லாமல் போகும் போது வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால் இலவசமாக ஏற்றிச் சென்று விட்டுவிடுவார், பிரசவத்திற்கு இலவசம், ஆள் இல்லாத பெரியவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கூட்டிக்கொண்டு வருவது, நள்ளிரவு நேரமானாலும் ரயில் பெட்டிக்கே வந்து வாடிக்கையாளர்களை வரவேற்று வீட்டில் கொண்டு போய்விடுவது, அதே போல ஏற்றிவிடுவது என்று தனது ஆட்டோ பணியை பாசத்துடனும், நேசத்துடனும் செய்வதன் காரணமாக, வருடத்தில் 365 நாளும் ஒய்வு ஒழிவின்றி, நேரம் காலம் பார்க்காமல் இரக்கமுள்ள மனசுக்காரனாக ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.


ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து எட்டு வருடமாகிறது.வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டியவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த ஆட்டோ ஒட்டுனராகப்போகிறார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை போன் மூலம் அழைத்தால் அழைத்தவர்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டோ ஏற்பாடு செய்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வேண்டும் என்றாலும் அமைத்து தருகிறார்.


கல்லூரியில் வரலாறு படித்தவர் என்பதால் மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால் தெரியாதவர்கள் ஆட்டோவில் ஏறும்போது மதுரையின் வரலாறை சுவராசியமாக சொல்கிறார். விரும்புபவர்களுக்கு சம்பந்தபட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.
வரலாறு முதுகலை படிக்கவேண்டும் என்ற ஆசையை தற்போது தபால் மூலம் படித்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.


என் தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது எனக்கு அது போதும் வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும் இந்த அளவு நிம்மதியும், உறவும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் ஆட்டோ மதன் உண்மையின் அனைவரின் அன்பை பெற்ற மதன்.
செய்யும் தொழில் எதுவானாலும் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பொன்மொழியின் இலக்கணமாக திகழும் மதனுடன் பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9367792728.


- எல்.முருகராசு,

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

முன்மாதிரியான மிதியூர்தி ஓட்டுநர்!

முன்மாதிரியான  மிதியூர்தி ஓட்டுநர்!

பொதுமக்களை அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில், சற்று வித்தியாசமாக செயல்படும், அண்ணாதுரை: நான், தஞ்சாவூர், பேராவூரணியை சேர்ந்தவன். தற்போது, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். கடந்த, நான்கு ஆண்டுகளாக, திருவான்மியூர் முதல், நாவலூர் வரை, ஆட் டோ ஓட்டுகிறேன். பொதுமக்களை அச்சுறுத்துபவர்களில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என, பொதுமக்கள் கருதுவதாக, அவ்வப்போது கருத்து கணிப்புகள் வெளியாகின்றன. ஆனால், எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் அப்படியில்லை என்றும், மனிதநேயமும், சமூக சிந்தனையும் உள்ள பலர் இருப்பதாக, மக்களுக்கு எடுத்துக்காட்ட முயற்சித்தேன். நான், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறேன். இதனால், "மொபைல் மற்றும் லேப்-டாப்' எடுத்து வரும் பயணிகளின், இலவச இணைய வசதிக்காக, "வை-பை' தொழில்நுட்ப கருவியை, ஆட்டோவில் பொருத்தி உள்ளேன். மற்ற பயணிகளுக்காக, ஒரு பொது லேப்-டாப்பும் உள்ளது. இதில், சந்தா முறையிலான, "டிவி சேனல்கள், வீடியோ கேம்கள், மொபைல்' மற்றும் டி.டி.எச்.,சிற்கு, ரீசார்ஜ் செய்வதற்காக, "மல்டி ரீசார்ஜ்' வசதிகள் உள்ளன. பயணிகளுக்கு பயன்படும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் என, அனைத்து வகை பத்திரிகையையும் வாங்குகிறேன். ஆட்டோவில், "டிவி' வைத்து, அதன் மூலமும் நடப்பு செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை காட்டுகிறேன். "ரெகுலர்' பயணிகளுக்கு, சலுகை டோக்கன் வழங்குகிறேன். மாதம், 25 ஆயிரம் வருமானத்தில், பயணிகளின் தேவைக்காக மட்டுமே, 10 ஆயிரம் செலவிடுகிறேன். ஆண்டிற்கு, 12 ஆயிரம் செலவில், ஒரு ஏழை குழந்தையை படிக்க வைக்கிறேன். இதை பார்த்த என் ஆட்டோ பயணிகளான, மூன்று இளைஞர்கள், மூன்று ஏழை குழந்தைகளுக்கான மொத்த கல்வி செலவையும் ஏற்றனர். என் செயல்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், அவர்களையும் அதுபோல் செய்ய தூண்டுவது, சந்தோஷமாக உள்ளது.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

நீரை அதிகம் உறிஞ்சும் நெல் சாகுபடியைத் தவிர்த்து, மாற்று விவசாயம் பற்றி கூறும் வேளாண் வல்லுனர், கலைவாணன்: கடந்த ஆண்டைபோலவே, குறுவை சாகுபடி சாத்தியப்படாத நிலையில், அதற்கு ஏற்ப, மாற்று விவசாயம் பற்றிய தெளிவு, விவசாயிகளிடம் இருப்பது அவசியம். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின், பருவ மழை சரியாக இல்லாததால், டெல்டா பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்றில், தண்ணீர் இல்லை. இதனால், வரும் செப்டம்பர் மாதம் வரை, ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல்லை பயிரிடுவதற்கு மாற்றாக, குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும், எள், உளுந்து, கடலை மற்றும் காய்கறிகளை பயிரிடுங்கள் என, வேளாண் துறை எவ்வளவோ சொல்லியும், டெல்டா மாவட்டங்களில், பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை உறிஞ்சி,
நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இது தொடர்ந்தால், கடலில் உள்ள உப்பு நீரும் சேர்ந்து,நிலமும், விவசாயமும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இப்போது பொழியும் குறைந்த அளவு மழையை பயன்படுத்தி, மண் வகைகளை பொறுத்து, எள், உளுந்தை பயிரிடலாம். கம்பு மற்றும் சிறுதானிய
ங்களை பயிரிட்டால், அதன் அறுவடையின் போது பருவ மழை துவங்கி, அதிக பாதிப்பு ஏற்பட்டு, தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதனால், எள், உளுந்து அறுவடைக்கு பிறகு, மார்கழியில் காய்கறி, சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை பயிர் செய்யலாம். இப்படி செய்வதால், குறுவையில் ஏற்படும் இழப்பை, சரி செய்யலாம். கடந்த காலத்தை போன்று, அரசுகளை நம்பி, நஷ்டத்தை அனுபவிப்பதில், அர்த்தமில்லை. எனவே, நீரற்ற வறட்சியான காலங்களில், நீரை அதிகம் உறிஞ்சும், நெல் போன்ற குறுவை சாகுபடியில் ஈடுபடாமல், மாற்று பயிர்களை பயிரிடும் விழிப்புணர்வை, விவசாயிகள் வளர்த்துக் கொள்வது, எதிர் காலத்தில் நன்மை பயக்கும்.

மிதியூர்தி ஓட்டுநர்களின் உணவகம்

சவாரி கிடைக்காத ஓய்வு நேரங்களில், ஓட்டல் தொழில் செய்து முன்னேறும், ஆட்டோ சங்கத்தின் தலைவர் சீனிவாசன்: நான், புதுச்சேரியை சேர்ந்தவன். எங்கள் ஆட்டோ சங்கத்தில், 25 ஓட்டுனர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். காலையில், முதல் ஆளாக யார் வருகின்றனரோ, அந்த வரிசைப்படியே சவாரிக்கு செல்ல வேண்டும். ஒரு சில நாட்களில், ஐந்து முதல் ஆறு சவாரிகள் மட்டுமே வரும் போது, மற்ற, 20 ஓட்டுனர்களும், வேலை இன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தற்போது, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், ஆட்டோ தொழிலில், பெரிய லாபம் பார்க்க முடியாத நிலையும் உள்ளது. எந்த சவாரியும் கிடைக்காததால், வரவு ஏதுமின்றி, எங்களின் காசை போட்டே, உணவு உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தோம். எங்கள் சங்கத்தின், 25 ஓட்டுனர்களும் ஒன்றிணைந்து, எங்களுக்கும், மற்ற பொது மக்களுக்கும் பயனுள்ள விதத்தில், குறைந்த விலை சிற்றுண்டி உணவகத்தை, காலையில் மட்டும் நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, புதுவையின் பிரதான சாலையான, காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் அருகே, சாலையோர சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்தோம். ஓட்டல் வேலைக்கு ஆள் வைக்காமல், எல்லா வேலைகளையும், நாங்களே செய்தோம். எங்கள் உணவகத்தில், காலை 10:00 மணி வரை, சிற்றுண்டி கிடைக்கும். பின், ஜூஸ் மட்டுமே விற்போம். குறைந்த விலை என்பதால், விற்பனையும் அதிகரித்து, முதலீட்டுக்காக வாங்கிய கடனையும், அடைத்து விட்டோம். காலை டிபனை, இங்கேயே முடித்து விடுவதால், உணவிற்கு என, தனியாக செலவு செய்ய தேவையில்லை. உணவகத்தில் கிடைக்கும் லாபத்தை, சரிசமமாக பிரித்து கொள்வோம். இதனால், ஆட்டோ வருமானத்தை தாண்டியும், அதிக வருமானம் கிடைக்கிறது. வாய்ப்பு தானாக வந்து, நம் கதவை தட்டாது என்பதால், நாங்களே புதிய வாய்ப்புகளை உருவாக்கினோம்.

வியாழன், 16 மே, 2013

நேர்மையற்ற உரூ. 1.9 கோடி திருப்பியனுப்பிய மிதியூர்தி ஓட்டுநர்

நேர்மையற்ற பணம் வேண்டா: உரூ. 1.9 கோடி  திருப்பியனுப்பிய மிதியூர்தி ஓட்டுநர்
ஆமதாபாத்: தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.
குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. தற்போது ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை.

தற்போது, அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு செக்காக வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த செக்கை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ. அவர் கூறுகையில், "எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று கூறியுள்ளார்.
ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள அவர்கள், வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களுக்கு மிகவும் ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று....

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

காவலர் உடையில் ஒரு புதுமையான மிதியூர்தி ஓட்டுநர்








போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை.


நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
போக்குவரத்து சீர்படுவதாகவும் இல்லை, அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.


அந்த நேரம் போலீஸ்காரர் போல சீருடை அணிந்த ஒரு வயதான ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் இருந்து இறங்கிவந்து, போக்குவரத்து நெருக்கடிக்கு நடுவில் நின்றுகொண்டு, வாகனங்களை சீர் படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை சுமந்து சென்ற வேன் டிரைவர்கள் உள்பட பலர், " நல்லவேளை பெரியவரே, நீங்க வந்தீங்க, ரொம்ப நன்றி'' என்று சொல்லிவிட்டு சென்றனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெரியவரின் தோற்றம் மட்டுமல்ல அவரது கதையுமே வித்தியாசமானதுதான்.
இன்றைக்கு 67 வயதாகும் ஆட்டோ டிரைவர் சந்திரன் வெள்ளந்தியாகவும், வெளிப்படையாகவும் தன்னைப்பற்றி சொல்கிறார்.


பசும்பொன் மாவட்டம் கமுதியில் பிறந்தவன் நான், அப்பாவின் கவனிப்பும், வளர்ப்பும் இல்லாததால் மகா மட்டமானவனாக வளர்ந்தேன், யாருக்கும் அடங்காத சேட்டைக்காரனாக விளங்கினேன், இதனால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, டான்ஸ் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது, ரிக்கார்ட் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து ஊர், ஊராக போய் டான்ஸ் ஆடினேன், டி.ராஜேந்தரின் மனைவியான உஷா ராஜேந்தர் கூட எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கேன்.
ரிக்கார்ட் டான்ஸ் ஆடுறவன்ங்றதால எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை, என்னடாது நம்ம நிலமை இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சு டான்ஸ் ஆடுறதை விட்டுவிட்டு, கார் டிரைவர் ஒருவரை பழக்கம் பிடிச்சு, அவரது காரை கழுவிக் கொடுத்து கார் ஒட்டக் கற்றேன். 35 ரூபாய் செலவழித்து லைசென்ஸ்ம் எடுத்தேன்.


ஆனால் யாரும் கார் ஒட்ட வாய்ப்பு கொடுக்கலை, அப்புறம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டுவோம்னு ஆட்டோ ஒட்டத் துவங்கினேன், அப்படி ஆட்டோ ஒட்டத்துவங்கி கிட்டத்தட்ட 37 வருஷமாச்சு, இப்ப சொந்த ஆட்டோ, சொந்த வீடு, மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என்று நல்லாயிருக்கேன்.
ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சு மனைவியோட நிம்மதியா வாழ்வோம்னு நினைச்ச நேரத்தில எனக்கு மஞ்சள் காமாலை நோய்வந்து பொழப்பேனான்னு ஆகிப்போச்சு, இயேசுவிடம் பிரார்த்தித்ததன் அடிப்படையில் பிழைச்சு எழுந்தேன், சபை சகோதரிகள் , "உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்களை ஒழிச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லைன்னாங்க, அன்னைக்கு வரை எனக்கு பழக்கமாகியிருந்த மது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்ற சகல கெட்ட பழக்கங்களையும், "சீ சனியன்களா'' என்று தூக்கியெறிந்தேன், இன்னைக்கு வரை அதை தொடவில்லை, அதே போல எந்த நோய் நொடியும் அதற்கு பிறகு என்னைத் தொடவில்லை.


சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் நான் ஆட்டோவ நிறுத்தற இடமான அபிபுல்லா சாலையில், காலையில் ஏற்படற போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யலாமேன்னு தோணுச்சு, அதன்படி ரோட்ல நின்னு சரி செய்தேன், எல்லோரும் நன்றி சொல்லி சென்றார்கள். அப்புறம் நான் சவாரி இல்லாம போகும்போது, எங்கே போக்குவரத்து நெருக்கடின்னாலும் உடனே இறங்கி அதை சரி செய்துவிடுவேன்.
இதை அடிக்கடி பார்த்த போக்குவரத்து டிஎஸ்பி ஒருவர், நமக்கு ஒத்தாசையா ஒருத்தன் எப்படி உழைக்கிறான் பாருன்னு சொல்லி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பி பழைய போலீஸ் யூனிபாரம், பூட்ஸ், பெல்ட் போன்றவைகளை கொடுத்துவிட்டாங்க, அதையெல்லாம் போட்டுக்கிட்டதும் ஒரு கம்பீரம் வந்திருச்சு, அப்போதிருந்து என்னோட ட்யூட்டி நேரம் முழுவதும் எப்பவும் இந்த டிரஸ்ஸோடதான் இருப்பேன்.


எனக்குன்னு நிறைய வாடிக்கையாளர் இருக்காங்க, செக்கை கையில கொடுத்து பணமாக்கி கொண்டுவந்து தர்ர அளவிற்கு நான் நம்பிக்கையான ஆளாகிட்டேன், இதுனால ஒருத்தரு மொபைல் போன் கொடுத்தாரு, ஒருத்தரு "ப்ளூ டூத்' கொடுத்தாரு, ஒருத்தரு புதுசாவே காக்கிதுணியில டிரஸ் தைச்சு கொடுத்தாரு. துப்பாக்கி வச்சுக்கிற இடத்துல போன் வச்சுக்குவேன், போலீஸ் ஸ்டார் குத்திக்கிற இடத்துல ஏபிசி என்று சும்மா குத்திக்குவேன். என்னால போலீஸ் உடைக்கு களங்கம் வராம பார்துக்குவேன்.
காலை 8 மணிக்கு ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சா மாலை 6 மணிக்கு வீட்டிற்கு போயிடுவேன், வீட்டில் மனைவி பேரன்களுடன் பொழுதை போக்குவேன், ஞாயிறு முழுவதும் சர்ச்சில் இருப்பேன், என் ஏரியாவில எந்த குழந்தை பார்த்தாலும் குட் மார்னிங் தாத்தான்னு சொல்லாம போகாதுங்க, அந்த அளவிற்கு குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன். பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன் என்ற சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.




- எல்.முருகராசு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மயிலாப்பூர் காரணீசுவரர்கோயில் தெருவைச் சேர்ந்த மிதியூர்திஓட்டுநர்  சங்கத்தினர் சாந்தோம் பள்ளி அருகே முறை வைத்துக் கொண்டு காலையில் நாள் தோறும் இரண்டுமணிநேரம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வந்தனர். ஆனால் போக்குவரத்துக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு இன்மையால் (தொந்தரவால்) இத் தொண்டினை நிறுத்தி விட்டனர். இனியேனும் இத்தகையோர் தொண்டுகளை மதித்து ஏற்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/