பழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூலை, 2013

6000 ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு:

பழனி அருகே 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு: சூரிய ஒளி ஊடுருவிய விந்தை
பழநி: பழநி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' (பெருங்கற்களாலான அமைப்பு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது "சவுக்கை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாராயண மூர்த்தி கூறியதாவது: இங்குள்ள மலைப்பகுதியில் இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர். தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் உள்ளது. சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை தட்சணாயண காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை உத்தராயண காலம் என்றும் கணித்துள்ளனர். இந்தாண்டு தட்சணாயணத் துவக்க நாளான ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடிந்தது. மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம். இதைப்போல் உத்தராயணகால, துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன, இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 28 ஜூன், 2013

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மீட்பு!


Temple images
காஞ்சிபுரம்: ஆரியம்பாக்கத்தில் புதைந்து கிடந்த, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் கால, ஈஸ்வரன் கோவிலை, தொல்லியல் துறையினர் கண்டெடுத்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ளது ஆரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் வடக்குப் பகுதியில், தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்திற்கு, மண் மேடாக இருந்து. இதன் மீது 5 அடி உயரம் கொண்டு சிவலிங்கமும், மூன்றரை நீளமும், ஒன்றரை அடி உயர நந்தி சிலையும் இருந்தது. இதன் அடியில் பழமையான கற்கோவில் இருக்கும் என, கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன், சுரேஷ் ஆகியோர், தொல்லியல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆய்வு பணி நடந்தது. இதுகுறித்து, தொல்லியல் துறை காப்பாட்சியர் லோகநாதன் கூறியதாவது: ஆரியம்பாக்கத்தில் உப்புக்கற்களால் கட்டப்பட்ட சிவன்கோவில் புதைந்து கிடப்பது கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளது. கட்டடத்திற்கு பக்கவாட்டில் கூழாங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. நில நடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் கோவில் கட்டங்கள் சேதமடையாமல் இருக்க, கூழாங்கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இக்கோவில் பல்லவர்கள் காலத்தின் இறுதியிலும், சோழர் காலத்தின் துவக்கத்திலும் கட்டப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.