திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

 16

 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)
 ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே தம்பி தூங்காதே” என்றுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னதுபோல், நீண்ட நேரம் ஆள்வோர் உறங்குவதும் தவறுதான். என்றாலும் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருக்கும் தீப்பண்பு ஆள்வோரிடம் இருக்கக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். பின்னரும் திருவள்ளுவர், “தூங்கற்க தூங்காது செய்யும் வினை”(குறள் 672) என வலியுறுத்துகிறார்.
நாமக்கல் இராமலிங்கம்,  “அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறியவேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும்” ஆள்வோர்க்குத் தேவை என விளக்குகிறார்.
கற்கவேண்டியவற்றைக் கசடறக் கற்றறியும் கல்வி உடையவனாக இருக்க வேண்டும். அஃதாவது அறவியல், ஆட்சியியல், நீதியியல், குடிமையியல் முதலான நல்லாட்சி நடத்துவதற்குரிய துறைகளில் தேவையான கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்.
எதிர்ப்பு எது வரினும் அஞ்சாது மக்களுக்கு நல்லனவற்றை ஆற்றும் துணிவும் தேவை. ஏனெனில் நல்ல செயல்களையும் அரசை எதிர்ப்பதற்காகவோ தன்னலத்தின் காரணமாகவோ எதிர்ப்போர் இருப்பர். அவர்களை அடக்குவதற்குத் துணிவு தேவை. நாட்டில் பல்வகைக் குழுக்கள் இயங்கி வன்முறைகளில் ஈடுபடலாம். அவற்றில் ஈடுபடுவோர் அல்லது அவற்றிற்கு ஆதரவாக இருப்போர், வேண்டியவராக அல்லது துணை நின்றவராக இருக்கலாம். அதற்காக விட்டுக் கொடுக்காமல் அவற்றை ஒடுக்குவதற்குத் துணிவு தேவை. அயல்நாட்டுச் சிக்கல் வரும்பொழுது அல்லது போர் உருவாகும் பொழுது நாட்டு மக்களின் ஆதரவையும் பெற்று அவற்றை எதிர்நோக்கத் துணிவு தேவை.
துணிவு என்பது அரசு வழி தவறும் பொழுது மக்கள் எதிர்த்தால் அரச வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குவதோ “இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்”  என்று பாரதியார் சுட்டிக்காட்டிய கொடு நிலையை உருவாக்குவதோ அல்ல. நல்ல செயல்களை நிறைவேற்றுவதற்கான துணிவையும் தீயவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகார மீறலையும் ஒன்றாக எண்ணக் கூடாது.
ஒவ்வொருவருக்குமே காலந்தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவுடைமை தேவை என உணர்ந்து நாம் செயல்படுவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 09.08.2019

புதன், 31 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

 10

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334)
“நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர்.
இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர்.
நாள் என்பதைத் திருவள்ளுவர் 20 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். வாள் என்பதை 6 குறட்பாக்களில் குறிப்பிடுகிறார்.
இரவுப்பொழுதும் பகற்பொழுதும் இணைந்த கால அளவே நாள் என்பது. இந்த நாளே வாரமாகத், திங்களாக, ஆண்டாக அளப்பதற்கு அடிப்படையாகிறது. எனவே, நாள் என்பதைக் காலத்தை அளக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். இந்தச் சிறு அளவுகோலே வாழ்நாளைச் சிறுகச் சிறுக அறுத்துக் குறைக்கிறது எனத் திருவள்ளுவர் விளக்குகிறார்.
நாள் என்பதை இரவு எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர். செ.சொ.பி.பேரகரமுதலியில் ‘நடுநாள் யாமம்’ முதலான சொற்கள் அடிப்படையில் நடுநாள் இரவு என்று விளக்கம் உள்ளது. இவர்கள் மாலை 6.00 முதல் மறுநாள் காலை 6.00 வரை நாள் எனத் தவறாகக் கணக்கிடுகின்றனர். நாவலர் சோமசுந்தரபாரதியார் விளக்கியுள்ளதுபோல், முன்னைத்  தமிழர்கள் நண்பகல் 12.00 தொடங்கி மறுநாள் நண்பகல் 12.00 வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் பாதிப்பொழுதாகிய இரவை அரைநாள் எனக் குறித்துள்ளதை – முழுநாளில் பாதி எனச் – சரியாகப் புரிந்து கொள்ளாமல்  அரை நாள் என்றால் இரவில் பாதி, நாள் என்றால் இரவு என்று தவறாகச் சொல்லி விட்டனர்.
மேற்குறித்த குறள்போல் நாள் கணக்கைக் குறிப்பிடும் மற்றொரு குறளும் உள்ளது.
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்ந்த விரல் (திருக்குறள் 1261)
“அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து கண்களும் ஒளி இழந்து அழகு கெட்டன; அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்தன” எனக் கணவன் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கவலைப்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளில் வாள் என்பது ஒளி என்னும் பொருளில் வந்துள்ளது.
பால்கணக்கை எழுதுவற்குச் சுவரில் கரிக்கோடு கிழித்து எண்ணும் பழக்கம் இன்று கூடச் சிற்றூர்களில் உள்ளது. தாள்கள் அல்லது மாதச்சீட்டு உள்ள நாட்காட்டிகளில் ஏதேனும் கணக்கைக் குறிக்கக் கோடு போட்டுக் கணக்கு பார்க்கும் பழக்கம் நகரிலும் உள்ளது.  கால அறிவியலின் கூறாகிய நாளைக் கணக்கிடுவது பற்றித் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலஅறிவியலைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்கு நிலையாமையை உணர்த்தியுள்ளார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 31.07.2019

ஞாயிறு, 28 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

 7

 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306)
 சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதன் இயல்பில்  நெருப்பு உள்ள இடத்தையும் நெருப்பு பரவும் இடத்திலுள்ள அனைத்தையும் அழிக்கும். இதுதான் நெருப்பின் தன்மை. இத்தகைய நெருப்பின் அறிவியல் வரையறைதான் சேர்ந்தாரைக் கொல்லி என்பது. சினத்தைச் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ எனச் சொல்வதன் மூலம், கொள்பவரை மட்டுமன்றிச் சேர்ந்துள்ள பிறரையும் கொல்லும் சினத்தீக்கு இடங்கொடுக்காதே என்கிறார் திருவள்ளுவர்.
“சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்” என்கிறார் உரையாசிரியராகிய மணக்குடவர். ஏமப்புணை என்றால் பாதுகாப்பான படகு அல்லது கரையேற்ற உதவும் கப்பல். தன்னைத் துன்பக்கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்கும் நலம் விரும்பிகளாகிய கப்பலையும் சினம் அழித்து விடும் என்பதன் மூலம் “சினத்தால் நீ மட்டுமல்ல, உன்னைச் சார்ந்து இருப்பவரும், உனக்குப் பாதுகாப்பாக நின்று துணைபுரிவோரும் அழிவர். எனவே, சேர்ந்தாரைக்கொல்லியாகிய சினத்திலிருந்து விடுபடு” என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு கட்டடத்தில் ஏற்படும் சிறு தீப்பொறி கட்டடத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள உயிர்களையும் பொருள்களையும் கட்டடங்களையும் அழித்து விடுகிறது. காட்டில் ஏற்படும் நெருப்புப் பொறி காட்டிலுள்ள மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள் என அனைத்தையும் அழித்து விடுகிறது. நெருப்பு, தான் சேர்ந்துள்ள இடத்தை அழித்து விடும் கொடுமையான ஒன்று. அக்கொடுமைக்கு இணையானதுதான் சினம் என்கிறார் திருவள்ளுவர்.
திருவள்ளுவர், பிறிதொரு குறளில்,
இன நலம் எல்லாப் புகழும் தரும்” (குறள் 457)
என்கிறார்.  தான் எடுத்த செயல்களைச் சிறப்பாக முடித்து வெற்றியையும் புகழையும் தரும் இனத்தாரும் சினத்தைக் கொண்டவரால் அழிவர் என அதன் பெருந்தீமையை உணர்த்துகிறார் திருவள்ளுவர்.
இதற்கு முந்தைய குறட்பாவில்,
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (திருக்குறள் 305)
 என்று சினம் தன்னையே கொல்லும் என்றார் திருவள்ளுவர்; இக்குறட்பா மூலம், “உன்னை மட்டுமல்ல, உன் அரவணைப்பில் உள்ளவர், உன்னைத் துன்பத்திலிருந்து மீட்டு உதவுநர் என அனைவரையும் சினம் அழிக்கும்” என்று பெரு எச்சரிக்கை விடுக்கிறார். ஒருவர் கேட்டிற்கு ஆளாகும் பொழுது அவரை நம்பியிருப்பவர்க்கும் கேடு வரும் என்பது இயற்கைதான். ஆனால் சினத்தால் வரும் கேடு அவருக்கு உதவியாக இருப்பவரையும் அழிக்கும் கொடுமை வாய்ந்தது என இதன் மூலம் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.
தன்னல நோக்கில் சினம் கூடாதுதான். ஆனால் பேரளவு இன அழிப்பு நடந்த பின்னரும் அறச் சீற்றம் கொள்ளாமல் அமைதி காக்கும் இன்றைய  தமிழர்களைப்பற்றி இன்றைக்குத் திருவள்ளுவர் இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 28.07.2019

சனி, 27 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல



திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

6

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(திருவள்ளுவர், திருக்குறள் 298)
“புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர்.
உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத நீரைப்பற்றி இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தண்ணீர் இன்றியமையாதது. அதனை மாசுபடாமல் காப்பது நம் கடமையாகும்.. தண்ணீர் மட்டுமின்றிச் சுற்றுப்புறத்தில் நமக்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் மாசுபடாமல் காத்தல் வேண்டும். சுற்றுப்பறத் தூய்மைக்கும் நீரே அடிப்படையாக அமைகிறது.
 வாய்மையைப்பற்றிக் கூறும்பொழுது திருவள்ளுவர், பிறருக்குத் தீங்கு விளைவிக்காத சொல்லே வாய்மை, பிறருக்குக் குற்றம் இல்லா நன்மை தரும் பொய்ம்மையும் வாய்மையே, நெஞ்சறிந்து பொய்கூறும் பொய்யரை அவர் நெஞ்சே சுடும், உள்ளத்தில் பொய் இல்லாதவர் உலகத்தார் உள்ளத்தில் உள்ளார், வாய்மையிற் சிறந்தது யாதுமில்லை,  உண்மை பேசுதல் தவத்தையும் தானத்தையும்விடச் சிறந்தது, பொய்யாமை எல்லா அறமும் தரும், வாய்மையுடன் திகழ்ந்தால் பிற அறங்கள் தேவையில்லை,  பொய்யாமையே சிறந்த ஒளிவிளக்கு, அகஇருள் நீக்கும் விளக்கு பொய்யாமையே என   வாய்மையின் தன்மை, எது வாய்மை, வாய்மையின் சிறப்பு எனப் பகுத்துத் தெளிவுபடுத்துகிறார்.  அவ்வாறு கூறும்பொழுது நீருடன் ஒப்பிட்டுக் குற்றமற்ற தன்மைக்கு வாய்மையே அடிப்படை என வலியுறுத்துகிறார்.
மேற்குறித்த குறளுக்கு விளக்கம் தரும் பெரும்பாலோர் புறம் என்பதை உடலின் வெளிப்பகுதி எனக் கருதிக் கொண்டு உடல் அழுக்கைப் போக்க நீர் வேண்டப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர். உடல் அழுக்கை மட்டும்போக்க நீர் உதவவில்லை. உணவு மூலப் பொருள்களைத் தூய்மை செய்யவும் உணவை ஆக்கவும் சமையல் பாண்டங்கள், அறைகள், கழிப்பிடங்கள் என யாவற்றையும் தூய்மை செய்யவும் நீர் தேவைப்படுகிறது. அல்லது நன்னீாின்மையால் அல்லது கழிவு நீரால் அல்லது நீரை முறைப்படி பயன்படுத்தாமையால் தூய்மையின்மை என்ற நிலை உண்டாகிறது. எனவே, சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை நீர். இதையே திருவள்ளுவர் புறந்தூய்மை எனக் குறிக்கின்றார்.
கழிவுநீர் கலப்பதால் நீர் கேடுறுகிறது. இதனால் நாம் நோய்க்கு ஆளாகிறோம். தொற்றுநோய்க்கு ஆளானால் பிறருக்கும் நோய் பரவித் துன்பம் தருகிறது. நோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மையான சூழல் தேவைப்படுகிறது. இதற்கு நீர் அடிப்படையாய் அமைகிறது. ஆகப் “புறந்தூய்மை நீரால் அமையும்” என்பதன் மூலம் நன்னீரால் தூய்மையும் மாசுற்ற நீரால் கேடும் விளையும் என இரு நிலையையும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் என்பதே சரியாக இருக்கும்.
எனவே, உடலிலுள்ள அழுக்கைப் போக்க மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் சேரும் அழுக்கை அகற்றித் தூய்மையான சூழலில் வாழவும் நீரே தேவை என்பதையே திருவள்ளுவர் ‘புறந்தூய்மை’ என்பதன் மூலம் உணர்த்துகிறார்.
இன்றைய சுற்றுப்புற அறிவியல் வலியுறுத்தும் புறத் தூய்மையை அன்றே திருவள்ளுவர் சுட்டிக் காட்டி உள்ளார் என்பது சிறப்பல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 27.07.2019

வெள்ளி, 26 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

5

 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271)
ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல்.  இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார்.
வஞ்சக மனம் கொண்டு  அதனை மறைத்து வெளியில் ஒன்றுமாய் உள்ளுக்குள் வேறுமாய் இருப்பவனைப் பார்த்து ஐம்புலன்களும் உள்ளுக்குள் கேலி செய்து சிரிக்கும் என்கிறார். அஃதாவது போலித்துறவியரைப் பிறர் குறை சொல்லாவிட்டாலும் அவர்களின் மனச்சான்றே அவர்களைக் கண்டு எள்ளி நகையாடும் என்கிறார் திருவள்ளுவர். (படிற்று ஒழுக்கம் என்றால் பொய் ஒழுக்கம்.)
நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகியவை ஐம் பெரும் பூதங்கள்.
மெய் (காற்று), வாய்(நீர்), கண்(தீ), மூக்கு(நிலம்), செவி (வான் ) ஆகியன ஐம்பூதங்கள் உணர்த்தும் பொறிகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன ஐம்பொறிகள் உணர்த்தும் குணங்கள்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (திருக்குறள் 27)
என அவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சுவை முதலான ஐம்புலன்களின் வகைகளை ஆராயும் வல்லமையாளரிடம் உலகம் உள்ளது என்கிறார். வகைகளை ஆராய்தல் என்றால், ஐம்புலன்கள், அவற்றிற்கு முதலாய் அமைந்த ஐம்பூதங்கள், வகைப்பாடுகள் முதலியவற்றை ஆராய்தல்.
எடுத்துக்காட்டாக ஊறு என்றால் தீண்டுதல் உணர்ச்சி. வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, வழமை(வழுக்கும் தன்மை), கரண்மை(கரடுமுரடு) என இஃது எட்டு வகைப்படும். இவ்வாறு இவற்றையும் ஐம்பூத வழிவகைகளையும் ஆராய்தல்.
நிலத்திற்கு(மண்ணிற்கு) மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் ஐந்து குணங்களும் உள்ளன. நீருக்குச்  சுவை, ஒளி, ஊறு, ஓசை ஆகிய நான்கு குணங்கள், நெருப்புக்கு ஒளி, ஊறு, ஓசை ஆகிய மூன்று குணங்கள், காற்றுக்கு ஊறு, ஓசை என்ற இரண்டே குணங்கள், வானிற்கு  ஓசை என்ற ஒரே குணம் எனக் குணங்கள் அமைந்துள்ளன.
இதைப் பற்றி 
           மண்ணதனில் ஐந்தை
           மாநீரில் நான்கை
           வயங்கெரியில் மூன்றை
          மாருதத்து இரண்டை
          விண்ணதனில் ஒன்றை
என்று திருநாவுக்கரசர்  தேவாரத்தில்(திருமுறை , 6:60:3) பாடியுள்ளார்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன உண்ணல், காணல், மெய்உறுதல், கேட்டல், முகர்தல் என்பவற்றைக் குறிக்கும்.
எனவேதான் திருவள்ளுவர் பின்னர், ஐம்புலன் உணர்வுகளால் பெறும் இன்பங்களையும் ஒரே நேரத்தில் தலைவியிடம் தலைவன் காண்கிறான்  என்கிறார்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள (திருக்குறள் 1101).
என்பது அத்திருக்குறள்.
இவ்வாறு ஐம்பூதங்கள் பற்றியும் அவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பு பற்றியும் குணங்கள் பற்றியும் உள்ள அறிவியல் குறிப்புகளை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
காலந்தோறும் போலித்துறவியர் குறித்து எச்சரித்தாலும் அவர்கள் மீது மயக்கம் கொண்டு அவர்கள் காலடியில் வீழ்வோர் குறையவில்லையே!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 26.07.2019

வியாழன், 25 ஜூலை, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

4

 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 )
மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு.
நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால் சூடாக்க அல்லது உருக்க உருக்கத்,  தேவையில்லாப் பொருள்கள் அகற்றப்படுகின்றன. கழிவுகள் நீங்கியதும் தங்கம் ஒளி விடுகிறது.
இவ்வாறு பொன்னைச் சுட்டு அணிகலன்கள் செய்து தருவதைச்  சங்க இலக்கியம்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்       
(மதுரைக் காஞ்சி 512)
எனக் கூறுகிறது.
இவ்வாறு தங்கத்தை நெருப்பிலிட, நெருப்பிலிட அதன் ஒளி மிகுதியாகிறது என்னும் உண்மையை மக்கள் நன்கறிந்துள்ளனர். எனவேதான் திருமணத்தை முன்னிட்டு மணமகளுக்குத் தாலி செய்வதற்காக மணமகன் வீட்டார் பொற்கொல்லரிடம்  தங்கம் தருவதைத் தங்கத்தை உருக்கும் சிறப்பு நிகழ்வாக நடத்துகின்றனர். இவ்வாறு மக்கள் நெருப்பிற்கும் தங்கத்திற்கும் உள்ள அறிவியல் தொடர்ப நன்கு அறிந்துள்ளமையால் திருவள்ளுவர் அதனை உவமையாகக் கொண்டு ஓர் உண்மையை விளக்குகிறார்.
நாம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளப் பொறுத்துக் கொள்ள சுடச்சுட ஒளிரும் பொன்போல் ஒளிவீசலாம் என்கிறார்.
திருவள்ளுவர் ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் இதனைக் கூறுவதால் தவத்தோர்க்கு மட்டும் இது பொருந்தும் எனத் தவறாக எண்ணக் கூடாது. அனைவருக்குமே பொருந்தும். துன்பம் வர, வர அஞ்சாது எதிர்கொண்டால் வாழ்வில் பொன்போல் ஒளிவிடலாம் என்று நாம் உணரவேண்டும்.
நெருப்பு அறிவியலும் மாழை(உலோக) அறிவியலும் உணர்த்தும் அறிவியல் செய்தியைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்குத் துன்பத்தைத் தாங்கும்  ஆற்றலுடன் திகழ அறிவுறுத்தும் சிறப்பைப் பின்பற்றுவோமாக!
மக்களுக்கு எதிரான ஆள்வோரின், ஊழல்வாதிகளின் துன்புறுத்தும் செயல்களையும் நாம் இப்படித்தான் பொறுத்துக் கொள்கிறோமோ?!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 25.07.2019