ilakkuvanar thiruvalluvan. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ilakkuvanar thiruvalluvan. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூன், 2025

89. மனுவில் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதியா? 90. உதயநிதி சொன்னது கடுந்தண்டனைக்குரிய குற்றமா? 91 சனாதனவாதிகள் உதயநிதியின் தலைக்கு விலை பேசுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்



((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி)

  •  

மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி பெயர்த்துள்ளார். திருலோக சீதாராம் என்றால் திருவையாறு (உ)லோகநாதய்யர் சீதாராமன். இவர் எழுத்தாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், பன்முக ஆளுமை மிக்கவர். பிராமணரான இவர் எப்படித் தம் வருணத்தாருக்கு எதிராகத் தவறாக மொழி பெயர்ப்பார்? எனவே, மனுவில் உள்ள அறமற்ற செய்திகளை உள்ளபடியே வில்லியம் சோன்சும் திருலோக சீதாராமும் மொழி பெயர்த்துள்ளனர். 

ஆனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மனு கூறும் அறமற்ற செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் சிலர் பிராமணன் என வரும் இடங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் மறைத்து மொழி பெயர்த்துள்ளனர். இது போல் பொருத்தமற்ற முறையில் இடைச்செருகலாக நல்ல செய்திகளைச் சேர்த்துள்ளனர். இந்த நல்ல செய்திகளை எடுத்துக் கூறி மனுவைச் சிறந்த நூலாக உருவகப்படுத்துகின்றனர். இதன் மூலம் மனுவின் கயமைத்தனத்தை மறைத்து விடுகின்றனர். களங்கங்கள் மறைக்கப்படும் மனுவின் பொய்யான தோற்றம் கண்டு மயங்கக் கூடாது.

  • தொற்று நோயை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால்  தொற்று நோயாளியை ஒழிக்க வேண்டும் என்று பொருளல்ல. சான்றாகத் தொழுநோயை ஒழிக்க வற்புறுத்தினால் தொழு நோயாளிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. இந்த இடத்தில் ஒன்றை நான் நினைவுகூர்கிறேன்.  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் என அரசே கொண்டாடியது. அவ்வாறு குறிப்பிட்டால் குழந்தைத் தொழிலாளர்களையே ஒழிப்பதாகப் பொருள். நாம் அவர்களை ஒழிக்கச் சொல்லவில்லை. குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்குப் பயன்படுத்துவதைத்தான் நிறுத்தச் சொல்கிறோம்.  எனவே, குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் எனக் குறிக்க வேண்டினேன். அதனை ஏற்றுக் கொண்டு அவ்வாறே இப்போது குறிக்கிறார்கள்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி தாலின், இந்த மாநாட்டின் தலைப்பைச்  ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருப்பதைப் பாராட்டிப் பேசினார். “  சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, முடக்குச்சுரம்(dengue – டெங்கு காய்ச்சல்), முறைக்காய்ச்சல்(மலேரியா – malaria), மகுடை நோய்(corona – கொரோனா) இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள்.” என்று பேசியுள்ளார்.

  • உதயநிதி, கொசு நோய் முதலானவற்றை ஒழிப்பு போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் சனாதனவாதிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. அவர்களைத் திருத்தி நல்வழி கொணர்வதுதான் நோக்கம். எனவே, சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்றே பொருள். இதைத் திசை திருப்பிக் குளிர் காய்வது தவறாகும்.
  • த.மு.எ.சங்கத்தினர் சனாதன ஒழிப்பு மாநாடு எனக் குறித்த பின்தான் அதனை வழி மொழிந்துள்ளார். எனவே, இதனை முதலில் கூறியவர் அவர் அல்லர். சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பல்வகை விளம்பரங்களையும் செய்திகளையும் படிக்கும் பொழுது வராத கோபம் உதயநிதி பேசியதும் வருகின்றது என்றால் அதற்குக் காரணம் அரசியலன்றி வேறல்ல.  
  • உதயநிதி இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். உலகத்தரத்தில் விளையாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உலகப்போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் இருபால் இளைஞர்களையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். எனவே, தேர்தல் அச்சத்தாலும் வேறு சொல்ல வழி தெரியாமலும் இதனைக் கையில் எடுத்துக் கொண்டு திரித்துக் கூறி வருகிறார்கள். சனாதனத்திற்கு எதிர்ப்பு காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்பொழுது சனாதனம் இடம் பெற்றுள்ள நூல்களுக்கும் எதிர்ப்பு வருவதால் பேரச்சம் கொண்டு பொய்மையை முரசறைந்து வருகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி குறித்தும் அச்சம் வந்துள்ளதாலும் தேர்தல் நெருங்குவதாலும் சனாதன எதிர்ப்பாளர்களை எதிர்ப்பதில் கருத்து செலுத்தி வருகிறார்கள். குறைந்து வரும் தங்களின் சாதி ஆதிக்கம் மேலும் குறைந்து இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும் சனாதனத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். தலைக்கு விலை பேசுவது வன்முறையைத் தூண்டிக் கொலைசெய்யச் சொல்வது. அவ்வாறு பேசியவர் மீது ஒன்றிய அரசோ பேசியவர் வாழும் மாநிலத்தின் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் குற்றச் செயலே.
  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 30 ஏப்ரல், 2025

உயிரறிவியலின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்

 




     

    1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும்  வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.



    தொல்காப்பியர்,


    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனமே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
    (தொல்காப்பியம்: மரபியல் 27)

    என

    ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.
    புல்லும் மரனும் ஓரறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    நந்தும் முரளும் ஈரறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    சிதலும் எறும்பும் மூவறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    நண்டும் தும்பியும் நான்கறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    மாவும் மாக்களும் ஐயறிவினவே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

    மக்கள் தாமே ஆறறி வுயிரே
    பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே


    (தொல்காப்பியம்: மரபியல் )

    என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.

    தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?

    (படம் – சமச்சீர் கல்விப் பாடம்)

    ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

    அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்

     


    https://www.youtube.com/watch?v=g-xrDsIQ4z4&t=2s

    வெள்ளி, 19 ஜூலை, 2024

    ஆளுமையர்உரை 103 & 104 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

     





    தமிழே விழி!                                                                               தமிழா விழி! 

    நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024 

    காலை 10.00

    கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

     முதல்வர்தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கல்லூரி

    இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்பில்

    முத்தமிழ் வடிவில் மணிமேகலை

    வெள்ளி, 28 ஜூன், 2024

    சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை!, இலக்குவனார் திருவள்ளுவன், தாய்

     

    சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை!





    சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

    1972 முதல் தமிழ் வளர்ச்சித்துறை இத்திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணை நிலை எண் 842 கல்வி (த.வ.பிரிவு 2) நாள்: 31-5-1971இல் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. இவ்வாணையின்படி பரிசிற்குரிய நூற்பிரிவுகள் 20 ஆக வகைப்படுத்தப்பட்டன.

    அரசாணை நிலை எண் 49, தமிழ் வளர்ச்சி, பண்பாடு அறநிலையத்துறை நாள்: 27-02-1995இன் படி 23 பிரிவுகளாகக் கூட்டப்பட்டன. அரசாணை நிலை எண் 157, த.வ.ப.அ.துறை நாள்:20-07-2001இன் படி 30 பிரிவுகளாக அமைக்கப்பட்டன.

    அரசாணை நிலை எண் 75, த.வ.ப.அ.துறை நாள்:16-03-2004 இன் படி 31 பிரிவுகளாக்கப்பட்டன. 2011 இல் 33 பிரிவுகளாகக் கூட்டப்பட்டன.

    இவ்வாறு பிரிவுகள் கூட்டப்பட்டாலும் தமிழ் இலக்கியத்திற்கு முதன்மை அளிக்கும் வகையிலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம் முதலானவற்றிற்கு உரிய இடம் அளிக்கப்படாதது வருத்தத்திற்குரியதே.

    இவ்விலக்கியங்களில் கொடுக்கப்பட்ட பிரிவுகள் குறித்த நூல்கள் பரிசிற்குரியன. எனினும் இது போதாது.

    சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், மகளிர் இலக்கியம் எனப் பிரிவுகள் உள்ளமைபோல் 1) தொல்காப்பிய இலக்கியம், 2) சங்க இலக்கியம், 3) திருக்குறள் இலக்கியம், 4) நீதிநூல் இலக்கியம், 5) காப்பிய இலக்கியம், 6) சமய இலக்கியம் என்னும் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும்.

    22 ஆம் வகைப்பாட்டில் சமயம் (ஆன்மிகம், அளவையியல்) இருப்பினும் இப்பிரிவில் இக்காலச்சமய நூல்களே இடம் பெறுகின்றன. இடைக்காலச் சமய இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்கும வகையில் தனிப் பிரிவு தேவை.

    அறிவியல் தமிழ் நூல்களைப் பெருக்கும் வகையில் தனிப்பிரிவு இல்லை. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல் என்பன போன்ற அறிவியல் துறைகள் சில குறிக்கப் பெற்றிருப்பினும்

    7) அறிவியல் தமிழ் என ஒரு பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.

    8) ஒப்பிலக்கியம் என்னும் ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.


    குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது என்பது ஒரு விதி.

    9) பிற அல்லது பல்வகை என்னும் ஒரு பிரிவைச்சேர்க்க வேண்டும். பிரிவு குறிப்பிடப்படாத நூல்களை இப்பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். வ.எண் 20 இல் 30. பிற சிறப்பு வெளியீடுகள் என உள்ளது. இதனைச் சிறப்பு வெளியீடுகள் என்று மட்டும் குறிக்க வேண்டும்.

    பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் பரிசுப் போட்டிக்குக் கருதப்படமாட்டா என்பது ஒரு விதி. மாணவர்களுக்கான பாட நூல்களை விலக்கி வைப்பது சரியே. அதே நேரம் பாடத்திட்டம் அடிப்படையிலான நூல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதுவே தமிழ்வழிக்கல்வி சிறக்க வழி வகுக்கும். ஆதலின்

    10) பாடத்திட்டஅடிப்படையிலான நூல்கள் என ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும்.

    அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பெற்றவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருப்பின் அவை இப்போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. — என்று ஒரு விதி உள்ளது.

    ஆனால், இவ்வகைப்பாட்டில் இடம் பெறக்கூடிய சில நூல்களுக்குப் பரிசளித்துள்ளனர். எனவே, இவ்விதியையும் எடுத்து விடலாம். சொற்பொழிவுகளுக்குப் பணம் பெற்றிருப்பார்கள். மீண்டும் பணம் வழங்க வேண்டா என எண்ணுவது தவறு.

    பரிசு வாங்கி ஊக்கப்படுத்துவதன் மூலம் தரமான சொற்பொழிவுகள் அமைய வழி வகுக்கலாம். வேண்டுமென்றால் அரசிடம் இதற்கான பணம் பெற்றிருப்பின், பரிசுச் சான்றிதழ் மட்டும் வழங்கப் பெறும். பணப்பயன் கிடையாது எனலாம்.

    சொற்பொழிவுகளை விலக்கி விட்டு உரைக்கு விலக்கில்லை என்கின்றனர். இரண்டிற்கும் என்ன வேறுபாடு? உரை என்பது உரை நூலைக் குறிக்காமல் உரையாற்றியதைத்தான் குறிக்கிறது.

    இதில் கவிதைக்கு விலக்களித்து விட்டுக் கட்டுரையை மட்டும் விலக்கி வைப்பது ஏன்? இதுவும் தவறே. இதழ்கள், பிற ஊடகங்கள் வாயிலாகத் தமிழின் சிறப்பை மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டிற்குரியது. அவ்வாறிருக்க இதற்கான பரிசை வழங்க மறுப்பது ஏன்? எனவே,

    11) இதழ்களில் வெளி வந்தவை,

    12) வானொலியில் ஒலி பரப்பி நூல் வடிவம் பெற்றவை,

    13) காட்சி ஊடகங்களில் இடம் பெற்று நூல் வடிவம் பெற்றவை எனத் தனித்தனிப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். ஆய்வேடுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

    இதனால் சேர்க்கத் தயங்குகிறார்களா? அல்லது மாணவ நிலையிலான ஆய்வேடுகள் தரம் வாய்ப்தவையா இருக்கா என மறுக்கிறார்களா? சிறந்த மொழிபெயர்ப்புகள், ஒப்பிலக்கிய ஆய்வுகள் கூட இப்பிரிவில் உள்ளன.

    எனவே,

    14) கல்வியகங்களில் அளிக்கப்பெற்ற ஆய்வேடுகள் என்பதை ஒரு பிரிவாகச் சேர்க்கலாம்.

    மின்னூல் இப்போட்டியில் இடம் பெற இயலுமா என்பது இணைய நேயர்களின் வினா. மின்தமிழ் மடலாடல் குழுவில் இதற்கு இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி மின் நூலை 5 படிகள் அச்சு வடிவில் அளித்து பங்கேற்குமாறு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.




    சின்ன குத்துாசி நினைவுக் கட்டுரைகளுக்கான விருது வழங்கப்படுகிறது.

    இதில் மின்னிதழ்களில் இடம் பெற்ற கட்டுரைகளையும் இணையத்தளங்களில் இடம் பெற்ற கட்டுரைகளையும் கருதிப்பார்க்க முறையிட்டேன். அதனை எற்றுக் கொண்டனர்.

    அடுத்த ஆண்டில் (2019) இருந்து அவ்வாறே அறிவித்தனர். மின்னிதழ்களில் வரக்கூடிய நூல்களைப் பெரும்பாலோர் பொது உரிமையாக ஆக்கி வருகின்றனர். வலைப்பூக்கள் முதலான இணையத்த தளங்களில் சிறப்பான கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. மின்னிதழ்களிலும் தரமான கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

    எனவே இவ்வாறான கட்டுரைத் தொகுப்புகளை மின்னிதழாக வெளியிட்டிருப்பின் அவையும் மின்னிதழாக வெளிவரும் நூல்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    எனவே,

    15) மின்னூல்கள் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

    தமிழ் வளர்த்த நீதி வழுவா மூவேந்தர்கள் குறித்தும் தமிழ் நாகரிகம், பண்பாட்டுச்் சிறப்புகள் குறித்தும் வெளியிடப்படும் நூல்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

    எனவே,

    16) மூவேந்தர் வரலாறும் சிறப்பும்

    17) தமிழ் நாகரிகம், பண்பாடு என இரு பிரிவுளையும் சேர்க்க வேண்டும். இப்போதுள்ள 33 பிரிவுகளுடன் இப்பதினேழு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் 50 பிரிவுகளாகும். இக்கருத்தை ஏற்று அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நூற்பிரிவுகள் தவிர பிற விதிகள் குறித்தும் ஆராய வேண்டும்.

    அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைக்கப் பெற்ற எழுத்துகளில் அச்சிடப்பெற்ற நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும் என்பது ஒரு விதி. இதுபோல் கிரந்த எழுத்துகள் தவிர்த்து எழுதப்பெறும் நூல்கள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும் என விதி வகுக்கப்பட வேண்டும்.


    ஒரு பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றால் அத்தலைப்பில் பரிசு வழங்க இயலாது என்பது ஒரு விதி. இந்த விதியின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவில் ஒரே ஒரு நூல் வந்த எதற்கும், தகுதியிருந்தும் பரிசு வழங்க வில்லை. ஆனால் இது தவறான விதியாகும்.

    குறிப்பிட்ட பிரிவில் ஒருவரைத் தவிர வேறு யாரும் நூல் எழுதவில்லை என்றால் அந்த நூலின் தகுதி போற்றக்கூடியது இல்லையா? அந்த நூல் தகுதியடையதாக இருந்தால் பரிசு கொடுக்கலாம் அல்லவா?

    எந்தக் காரணங்களுக்காகவோ சில ஆண்டுகளில் சில பிரிவுகளில் ஒரே ஒரு நூலுக்கு மட்டும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சான்றாக, 1971-72 ஆம் ஆண்டில், பிற மொழிகளில் தமிழ் என்னும் தலைப்பில் சிலம்பம் என ஒரே ஒரு நூலுக்கு ஒரே ஒரு பரிசாக முதற்பரிசு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல், பொறியியல், தொழில்நுட்பவியல் என்னும் பிரிவில் பற்றவைப்பு என ஒரே ஒரு நூலுக்கு ஒரே ஒரு பரிசாக முதற்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், 1975இல் மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் என்னும் பிரிவில், ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற ஒரே ஒரு நூலுக்கும் குழந்தை இலக்கியம் என்னும் பிரிவில் ‘வள்ளல்கள் வரலாறு’ என்னும் ஒரே ஒரு நூலுக்கும் முதற்பரிசுகள் வழங்கப்பெற்றுள்ளன.

    இவ்வாறு ஒரே ஒரு நூலுக்குப் பரிசு வழங்கிய முன்னெடுத்துக்காட்டுகள் பல உள்ளன. குறிப்பிட்ட பிரிவில் வேறு யாரும் நூல் அனுப்பவில்லை என்றால் அதற்குரிய தகுதியைப் பிறர் பெறவில்லை என்பதுதானே பொருள். எனவே, குறிப்பிட்ட ஒரு பிரிவில் ஒரே ஒரு நூல் வரப்பெற்று, அது பரிசுக்குரிய தகுதி உடையதென்றால் பரிசு வழங்கப்பெற வேண்டும்.

    மைய / மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்நூலும் இப்பரிசுப் போட்டிக்குக் கருதப்பட மாட்டாது என்பது ஒரு விதி. தத்தம் நூலை வெளியிடப் பண வாய்ப்பு இன்மையால் அரசின் பொருளுதவி பெற்று நூலை வெளியிடுகின்றனர். இது வேறு. சிறப்பின் அடிப்படையில் பரிசு வழங்குவது வேறு. ஒரே நூலுக்கு இரு முறை பணம் அளிப்பதாகத் தவறாகக் கருதக் கூடாது. எனவே, இவ்விதியை நீக்க வேண்டும்.

    அதுபோல் ஒன்றிய அரசின் பரிசைப்பெற்றால் தமிழ்நாடு அரசு தருவதும் இரட்டைப் பண உதவி எனக் கருதக் கூடாது. சிறந்த நூலுக்கான பரிசுத் திட்டத்தில் முன்னர்ப் பரிசு பெற்றிருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது என்று இருந்தால் போதும்.

    சிறந்த நூல் பரிசு தொடர்பான அறிவிப்புகளைக் காணாதவர்கள், நாமே கேட்டுப்பெறுதல்ல பரிசு என்று விண்ணப்பிக்க விரும்பாதவர்கள் இருப்பார்கள்.

    எனவே, சாகித்திய அகாதமியைப் பின்பற்றி முன்னரே அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்களிடமிருந்து அவர்கள் கருதும் சிறந்த நூல்கள் குறித்த குறிப்புகளைப் பெற்று, அந்நூல்களை வாங்கி அவற்றையும் பரிசுகள் வழங்கக் கருத்தில் கொள்ள வேண்டும்.


    இது குறித்து அப்போதைய தமிழ் வளர்ச்சிச் செயலர் மரு.செல்வராசு அவர்களை நேரில் சந்தித்து விளக்கி எழுத்து மூலமாக முறையீட்டையும் அளித்தேன்(மடல் எண்101/2023 / நாள் 24.02.2054 / 08.03.2023). நல்ல திட்டம் என மகிழ்வுடன் ஏற்று உடனே உரிய நடவடிக்கை எடுக்க மடலில் குறிப்பையும் எழுதினார்.

    அரசிடமிருந்து தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு இது குறித்து விரிவான கருத்துருவை அனுப்புமாறு கேட்டிருந்தார்கள்(இ-369/ த.வ.1.2/2023-1, நாள் 14.03.2023). த.வ.இயக்குநர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

    எனினும் உரிய பயனில்லை. இதில் குறிப்பிட்டவாறு பரிசிற்காக விண்ணப்பிக்காதவர்களின் தகுதியான நூல்களைக் கேட்டறிந்து தக்க நூலாசிரியர்களையும் பரிசிற்குக்கருதிப்பார்க்க வேண்டும்.

    முதலில் சிறந்த நூல்களுக்கு இரு பரிசுகளும் பின்னர் 1987 முதல் 1999 வரை மூன்று பரிசுகளும் வழங்கப் பெற்றன. அதன் பின்னர் 2000-இத்திலிருந்து பரிசுத் தொகைகளைச் சேர்த்து ஒரே பரிசாகவும் வழங்கப்பெற்று வருகின்றன.

    இக்காலத்திற்கேற்ப பரிசுத் தொகையை உயர்த்த வேண்டும். சிறந்த நூலாசிரியருக்கான பரிசுகள் முறையே 1972இல் உரூ.2000/-,1991இல் உரூ.5,000/- 1998இல் உரூ.10,000/- 2008 இல் உரூ.20,000, பதிப்பகத்திற்கு உரூ.5,000 என அவ்வப்போது உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

    2011, சனவரியில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி இத்தொகையை நூலாசிரியர்களுக்கு உரூ.30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு உரூ.10, 000/- என்றும் உயர்த்தி அறிவித்தார்.கடந்த 15 ஆண்டுகளாக இதில் மாற்றமில்லை.

    சிறந்த நூல்களுக்கு இரு நூல்கள் பரிசு வழங்கிய திட்டத்தை மாற்றி மூன்று பரிசுகளாக உயர்த்தியது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தாம்.

    மூன்று பரிசுகளை ஒரு பரிசாக மாற்றியதை மீளவும் கலைஞரின் திருமகனாராகிய இப்போதைய முதல்வர் மு.க.தாலின் மூன்று பரிசுகளாக வழங்கச் செய்ய வேண்டும்.

    அதையும் இப்போதைய அறிவிப்பில் திருத்தம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

    இதன்படி,சிறந்த நூலுக்கு முதல் பரிசாக உரூ.நூறாயிரமும், இரண்டாம் பரிசாக உரூ.60,000 உம், மூன்றாம் பரிசாக உரூ.40,000 உம் வழங்கப் பெற வேண்டும்.

    பதிப்பகத்தாரால்தான் சிறப்பான நூல்கள் வெளிவந்து தமிழுக்கு வளம் சேர்க்கின்றன. எனவே, பதிப்பகத்தார் பரிசுத் தொகையை முறையே உரூ30,000/, உரூ.20,000/, உரூ.10,000/ என வழங்க வேண்டும்.

    சிறந்த நூல் பரிசுகள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று சென்னையில் வழங்கப் பெற வேண்டும் என்பதே மற்றொரு நடைமுறை விதி. ஆனால், சில ஆண்டுகள் இவை வழங்கப்பெறவில்லை. அடுத்து ஆண்டு சேர்த்து வழங்கப்பெற்றுள்ளது. 2012 இல் சித்திரை முதல் நாளன்று வழங்கப் பெற்றது.





    பல ஆண்டுகள் அரசிற்கு வாய்ப்பான நாளில் வழங்கப்பெற்றது.

    விருதுகள் வழங்கல், நிகழ்ச்சிகளுக்கென குறிப்பிட்ட ஆண்டிற்காள ஆண்டுப் பட்டிகை (calendar for the year) உருவாக்கி அதனைத் தவறாமல் ஒன்றிய அரசு பின்பற்றி வருகிறது.

    தமிழ்நாடு அரசும் தவறாமல் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சிறந்த நூல் பரிசுகளை வழங்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது ஒரு விதி. இந்த விதியின் கீழ் மேற்குறித்தவாறான திருத்தங்களை அரசு கொணர வேண்டும்.

    இக்கருத்துகளில் உடன்பாடு கொண்டுள்ள படைப்பாளர்களும் பதிப்பாளர்களும் அரசிற்கு இதனைத் தெரிவிக்க வேவண்டும்.

    முதல்வர் அலுவலக மின்வரி < cmo@tn.gov.in >

    தமிழ் வளர்ச்சி யமைச்சர் அலுவலக மின்வரி < minister_iandp@tn.gov.in >

    நிதியமைச்சர் அலுவலக மின்வரி < minister_finance@tn.gov.in >

    தமிழ் வளர்ச்சிச் செயலர் மின்வரி < tdinfosec@tn.gov.in >

    ஏதேனும் கருத்து தெரிவித்தால் அரசின் மொழிக்கொள்கை எனத் தட்டிக் கழிக்கும் தமிழ்வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பிப் பயனில்லை என்பதால் அதன் மின் வரிக்கு அனுப்பத் தேவையில்லை. அரசே கேட்டால் விடையிறுப்பார்கள். அது போதும்.

    எனவே, பரிசிற்குரிய நூற் பிரிவுகளை உயர்த்தி 50 பிரிவுகளாக மாற்றியும் மும்மூன்று பரிசுகளை வழங்கியும் பரிசுத் தொகைகளை உயர்த்தியும் விதிமுறைகளைக் காலத்திற்கேற்ப தளர்த்தியும் திருத்தியும் சேர்த்தும் இத்திட்டம் பரவலாகப் பரவும் வகையில் அரசு உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த நூல்களுக்கான பரிசுத்திட்டத்தில் இருந்தே இதனை மேற்கொண்டு சிறந்த நூலாசிரியர்களைப் போற்ற வேண்டும்.

    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

    செல்லும்வாய் நோக்கிச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௭௰௩ – 673)

    இலக்குவனார் திருவள்ளுவன்


    ---- தாய், நாள் 28.06.2024