ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா...மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விளங்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.

அதனுள் ஒரு மரப்பலகை.

அந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்.

சந்தையில் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டவன் போல பரிதாபமான தோற்றத்துடன், சட்டை இல்லாத வெற்று உடம்புடன், பார்த்த உடனேயே அள்ளி, அரவணைத்து தூக்கி கொஞ்ச தோன்றும் பால்மணம் மாறாத குழந்தை முகத்துடன் அந்த பாலகன் அமர்ந்து இருக்கிறான்.

கறுப்பு கலரில் கால்சட்டை, தோளில் கந்தலாய், கசங்கிப் போன, அணிந்து கொள்ள பிடிக்காமல் போட்டிருப்பது போல ஒரு லுங்கி.
கையில் பிஸ்கெட் போன்ற ஒன்றை வாயில் வைத்திருக்கிறான் ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை என்பதை பரிதாபமான அவனது முகம் காட்டுகிறது. ஏதோ ஒரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம், அம்மா, அப்பா முகம் கூட வேண்டாம், ஏதாவது ஒரு தெரிந்த முகம் தென்படாத என்ற ஏக்கம் கண்களில் அலை பாய்கிறது.
அடுத்த படத்தில் அவன் கண்களில் ஒருவித பதட்டம் தென்படுகிறது, ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கும் சிறுவனின் அந்த பார்வையே நம்மை திகைக்கவைக்கிறது.
அடுத்த வினாடி அவன் கைநீட்டி தொட்டுவிடும் தூரத்தில் இருந்து வெடித்த சிங்கள சிப்பாயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மார்பை துளைக்க, அப்படியே மல்லாந்து சாய்கிறான், மண்மீது கைகால் இழுத்தபடி சரிகிறான், "இதற்குதான் கூட்டிவந்து பிஸ்கட் கொடுத்தீர்களா?' என்பது போல கையறு நிலைகொண்டு பரிதாபமாக பார்க்கிறான், சிப்பாயின் துப்பாக்கி மீண்டும் சீறுகிறது, மீண்டும் மீண்டும் சீறுகிறது, தொடர்ந்து நான்கு முறை அந்த பாலகனின் உடலை சல்லடையாக துளைக்கிறது, நிறைய கனவுகளுடன் வளர்ந்த அந்த சிறுவன் சின்ன, சின்ன துள்ளலுக்கு பிறகு செத்து போகிறான்.
இறந்து போன அந்த சிறுவன் பெயர் பாலசந்திரன்.
விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன்.
மூன்று நாட்களுக்கு முன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட "கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா' என்ற தலைப்பில் வெளியிட்ட புதிய ஆவண படத்தில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பார்த்தவர்கள் அத்தனைபேர் இருதயத்தையும் வெட்டிப் பிளந்தது போன்ற உணர்வு.
கொஞ்சமும் மனிதாபிமானமற்ற மன்னிக்கமுடியாத இந்த செயலை செய்தததன் மூலம் இலங்கை மன்னிக்கமுடியாத மாபெரும் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை மீது சர்வதேச பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற்ற பிறகே பொருளாதார தடையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மனிதகுலத்தின் மனசாட்சி இன்னுமா விழிக்கவில்லை, உலகத்தில் நீதி மொத்தமாக செத்து விட்டதா? இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா? ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட இவர்கள் நடத்திய இந்த இனப்படுகொலைதான் மிகவும் கொடூரமானது, என்னால் தாங்க முடியவில்லை என் இதயத்தை வெட்டி கூறுபோட்டது போல உணர்கிறேன் என்று மனம் வெதும்பியுள்ளார் வைகோ.
இல்லை இவையெல்லாம் நம்பமுடியாது என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருடன் நான்தான் திருடினேன் என்று எப்போது ஒத்துக்கொண்டுள்ளான், அது போலத்தான் இவர்கள் கூற்றும்.
சில நிமிடங்களே ஒடும் இந்த ஆவண படத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையின் பக்கம் மட்டுமே நின்று தயாரித்துள்ளதாக கூறுகிறார் கெலம் மெக்ரே.
ஆவண படத்தை பார்த்த பல தடயவியல் நிபுணர்களில் ஒருவரான டெரிக் பவுண்டர் இந்த படத்தில் எந்த பகுதியிலும் பொய்யில்லை, சிறுவன் பாலசந்திரன் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பிறகும் எடுத்த நான்கு படங்களுமே ஒரே டிஜிட்டல் கேமிராவில் ஒரே நாளில் ஒரு சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்த இடத்தின் நிறத்தையும், அது உடலை சிதைத்துள்ள விதத்தையும் பார்க்கும் போது மிக அருகில் நின்று சிறுவனை குரூரமாக கொன்றிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது என்று சொல்லியுள்ளார்.
நாங்கள் நடத்தியது மனிதாபிமானப் போர்தான், பிரபாகரன் குடும்பத்தை பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம், போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் காயம்பட்டே பிரபாகரன் இறந்தார். அவரது மனைவி, மகன் பற்றியெல்லாம் எங்களுக்கு தகவல் தெரியாது, பிரபாகரன் உடலையே கருணா அடையாளம் காட்டித்தான் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் ராஜபக்ஷே சொன்னது அத்தனையும் பொய், புளுகு என்பதை இந்த படங்கள் இப்போது உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருதுகிறார்கள்.
இது வெறும் கருத்து மட்டுமல்ல, உணர்வு, ஒரு தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு, ஒரு சின்னஞ்சிறு குருத்து காரணமேயில்லாமல் இனவாத அடிப்படையில் சாய்க்கப்பட்டதே என்ற வேதனை.
மனதிலும், கண்களிலும் ரத்தத்தை வரவழைத்த இந்த சம்பவம் வெறும் அனுதாப அலையோடு நின்றுவிடக் கூடாது, விரைவில் கூடவிருக்கும் ஐ.நா சபையில் எதிரொலிக்க வேண்டும், மன்னிக்கமுடியாத போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று இலங்கைக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் இதில் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய தேதிக்கு அனைவரது கருத்தாகும்.
- எல்.முருகராசு
Bookmark and Share
 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக