ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை!

சிற்பங்களில் சிலிர்க்கும் வரலாற்று ச் சிறப்பு மிக்க மதுரை!
Temple images
இந்தியாவின் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. 2,500 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்தியாவின் கலாசார, பண்பாட்டு மையமாக திகழ்கிறது. மதுரையைச்சுற்றி காணப்படும் மலைகளில் வரலாற்று சிறப்பு மிக்க புராதன சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், சமணர்படுகைகள், குடைவரை கோயில்கள், புண்ணிய தீர்த்தங்கள் இன்றும் நகரின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. இவற்றை எல்லாம், மதுரைக்காரர்களான நாம் சென்று பார்த்திருப்போமா? இந்த தொன்மை நகரில் வாழும் நாம், இந்த இடங்களை தெரிந்து கொள்வது அவசியம்.கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாக இந்நகரம் திகழ்ந்ததால், கடம்பவனம் என்ற பெயர் பெற்றது. மருத மரங்கள் நிறைந்திருந்ததால், மருதை எனவும் பெயர் பெற்று, பின் அப்பெயர் மருவி மதுரை என அழைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. கூடல்மாநகர், ஆலவாய், நான்மாடக்கூடல் என இந்நகருக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுடன் மதுரை, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றுவதாகவும் திகழ்கிறது.
மதுரையைச்சுற்றி அமைந்த கரடிப்பட்டி பெருமாள் மலை, கருங்காலங்குடி குன்றுகளில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. யானைமலை, நாகமலை, பசுமலை என மதுரையை சுற்றி அமைந்த ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு கதையும் உண்டு. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் குடைவரை கோயில் அமைந்துள்ளது. மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சமண சிற்பங்கள், நீரூற்றுகள் காணப்படுகின்றன.மூன்று கி.மீ., நீளம், 90 மீட்டர் உயரத்தில் ஒரே பாறையில் அமைந்த யானைமலையில் குடைவரை கோயில்கள், பொய்கை, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், மதுரை தொன்மையானநகர் என காட்டுகின்றன.   சமணர் படுகைகளில் மகாவீரர், யாக்ஷி சிற்பங்கள், பத்தடிஉயரம் கொண்ட தீபத்தூண் இன்றும் அழகு குன்றாமல் உள்ளன. புராதன சிறப்பு மிக்க நரசிங்கம் பெருமாள் குடைவரை கோயில் இங்குள்ளது. அருகில் லாடமுனி கோயில் மலையை குடைந்து அமைந்துள்ளது.மதுரை திருப்பத்தூர் ரோட்டில் அமைந்த மேலூர் கீழவளவில் மூலிகை ஆயில், சந்தனத்தால் பூசப்பட்ட மகாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அரிட்டாப்பட்டி மலையில் விநாயகர், சிவன் கோயில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ளது. மலையில் பல்வேறு இடங்களில் மகாவீரர் சிற்பங்கள், சமணர் படுகைகள் காணப்படுகின்றன.நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் அமைந்த சமணர் மலையில் பழமையான கோயில் அமைந்துள்ளது. அழகர்மலை, வரிச்சியூர், திருவாதவூர் போன்ற இடங்களிலுள்ள மலைகுன்றுகளிலும் புராதன சின்னங்கள் நிறைந்துள்ளன. பெரும்பான்மையானவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.என்ன...புராதன இடங்களை பார்க்க புறப்பட்டு விட்டீர்களா?


- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக