செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஊக்கப்படுத்தினார் அம்மா!

சொல்கிறார்கள்

ஊக்கப்படுத்தினார் அம்மா!
கண் பார்வை இல்லாமல், பனைமரம் ஏறி, ஓலைகளை வெட்டி விற்கும் முருகாண்டி: சொந்த ஊர் வெள்ளரியோடை; ராமநாதபுரத்திலிருந்து, 70 கி.மீ., தொலைவில் உள்ளது. அப்பாவும், அம்மாவும், நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்ததால், பிறவியிலேயே, கண்பார்வை இல்லை. சிறிய வயதிலேயே, அப்பா இறந்து விட்டார்.அம்மா, பனை ஓலையில் பாய் முடைஞ்சு, அதை விற்று வரும் பணத்தில், என்னையும், தங்கச்சியையும், வளர்த்தார். என் குருட்டு தன்மையைக் காரணம் காட்டி, வீட்டிலேயே முடக்க நினைக்காமல், என்ø ன ஊக்கப்படுத்தினார். 10 வயதில், பனை மரம் ஏற்றி விட்டு, மரம் ஏற பழக்கினார்.அதனால், பனை மரங்களில் ஏறி, ஓலை வெட்டும் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். தங்கைக்கும், நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தேன்.என் மனைவி கலாவதிக்கு, சரியாக நடக்க வராது. எந்த குறையுமின்றி, எங்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இருவரையும், பெரிய படிப்பு படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளில், துவக்க பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்.அம்மாவின் மருத்துவ செலவும், பிள்ளைகளின் படிப்பு செலவும் அதிகரித்ததால், மிகவும் கஷ்டப்பட்டேன். ஊரில் உள்ளவர்கள், "இவ்வளவு கஷ்டத்தில், பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கணும்? படிப்பை நிறுத்திடு'ன்னு சொன்னாங்க. யார் சொன்னதையும் காதில் வாங்காமல், படிக்க வைக்க வேண்டும் என்று, வைராக்கியம்.பெரிய மகள் சிம்புரா ஷாலினி, 9ம்வகுப்பும்; சின்ன மகள் லாவண்யா, 7ம் வகுப்பும் படிக்கின்றனர். கண்பார்வை இல்லாமல், மரம் ஏறுவதால், மரப் பட்டைகள், கை, கால்களை கிழித்து, புண்ணாகி வலிக்கும். நான் கஷ்டப்படுவதை, அவர்கள் பார்ப்பதால், படிப்பில் கவனம் செலுத்தி, நன்றாக படிக்கின்றனர். முதல் மூன்று ரேங்குகள் வாங்குகின்றனர்.ஷாலினி கலெக்டராகவும், லாவண்யா டாக்டராகவும் ஆக ஆசைப்படுகின்றனர். அவங்க லட்சியத்தை நிறைவேற்றவே, இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக