ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தொண்டி- 100 ஆண்டாக மழைநீர் சேகரிப்பு ப் பழக்கம்


தொண்டி அருகே 100 ஆண்டாக மழைநீர் சேகரிப்பு ப் பழக்கம்: அறுசுவைக்கு அடுப்பு ப் புகை

தொண்டி : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் மழை நீரை சேகரித்து ஓராண்டு வரை பயன்படுத்தி வருகின்றனர். 100 ஆண்டுகளாக இப் பழக்கம் உள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது எஸ்.பி.பட்டினம். இதையொட்டி கடற்கரை என்பதால், கிணறுகளில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. குடிநீருக்காக ஏங்கும் மக்கள், மழைநீரை சேகரிக்க முடிவு செய்தனர். 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் குடிநீருக்காக தனி அறை கட்டி, அதில் 1,000 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்துள்ளனர். மழை பெய்யும் போது மாடியிலிருந்து கீழே குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கின்றனர். தண்ணீர் கெட்டுப்போகாமல் இருக்க சுட்ட செங்கற்களை தொட்டியில் போட்டு வைக்கின்றனர்.

எஸ்.பி.பட்டினம் ஊராட்சி தலைவர் முகமதுகாசிம் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்பழக்கம் உள்ளது. வீடு கட்டும் போதே மழை நீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கின்றனர். இந்த தண்ணீரை, அடுத்தாண்டு மழை பெய்யும் வரை பயன்படுத்துகின்றனர். அடுப்பு மூட்டி எழும்பும் புகை, மண்பானை வைத்து மூடப்படும். சில மணி நேரம் கழித்து மண்பானையில் மழை நீர் ஊற்றி ஆற வைத்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும். கிருமிகள் வராமல் தடுக்க, சுட்ட செங்கற்கள் போடப்படுகிறது. மழை நீரை வடிகட்டி சமையல், குடிக்க பயன்படுத்தி வருகிறோம். மழை காலங்களில் தேவைக்கு ஏற்ப மழை நீரை சேகரித்துவிட்டு, மீதி தண்ணீரை கிணற்றில் விடுகிறோம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக