வெள்ளி, 6 ஜூலை, 2012

சொல்கிறார்கள்





"தமிழக பல்கலைஆதரவு தரலே!'தென்னை மரம் ஏற புது வகையான இயந்திரம் கண்டுபிடித்துள்ள வெங்கட்: என் சொந்த ஊர், அவினாசி அருகில் பேரநாயக்கன்புதூர். குடும்ப சூழ்நிலை காரணமாக, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஏதாவது செய்ய வேண்டும் என, மனதிற்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த சமயம், எங்கள் சுற்று வட்டாரத்தில், தென்னை மரம் ஏறும் கூலி ஆட்கள் இல்லாததால், விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரித்தது தான், தென்னை மரம் ஏறும் கருவி.கையில் இருந்த எல்லாப் பணத்தையும், இந்த கருவியை தயாரிக்க செலவு செய்து விட்டேன்.

ஐந்து ஆண்டுகள் உழைத்து, கருவியை ஓரளவு உருவாக்கி விட்டேன். மேலும் இதை உருமாற்றம் செய்து, தமிழக வேளாண் பல்கலையில் சோதனை செய்து தரச் சொல்லி கேட்டேன்; அவர்கள் மறுத்துவிட்டனர். பின், பெங்களூரு வேளாண் பல்கலை உதவியை நாடினேன். கருவியில் சிறு மாற்றங்கள் செய்யச் சொல்லி, அங்கீகாரம் அளித்தனர்.

தென்னை மரம் ஏற, ஏற்கனவே பல வடிவங்களில் கருவிகள் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில், பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, தென்னை மரம் ஏறும் கருவியில், பல் சக்கரம் பயன்படுத்தப்பட்டதால், மரங்களின் மேல்பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதனால், நாளடைவில், மரங்களுக்குப் பாதிப்பு உண்டானது.நான் தயாரித்துள்ள கருவியில், மரங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

மரத்தின் சுற்றளவைப் பொறுத்து, 15 அங்குலம் முதல், 50 அங்குலம் வரை, கருவியை அகலப்படுத்த முடியும். இக்கருவி, 11 கிலோ எடை கொண்டது; 100 கிலோ வரையுள்ள எடையைத் தாங்கக் கூடியது. தற்போது, ஆந்திராவில் பதநீர் பறிப்பதற்கு, நான் தயாரித்த கருவியே பிரதானமாகப் பயன்படுகிறது. இந்தக் கருவியை வெளிநாடுகளிலும் வாங்க ஆரம்பித்துள்ளனர்.தொடர்புக்கு: 99442 84440


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக