செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

 
கட்டுரைகள்
முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்!


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னைக்கு வெளியே உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வளாகங்களில் உள்ள வீடுகளின் பரப்பளவு மிகக்குறைவு என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அங்குள்ள மக்கும் குப்பைகளின் (ஆம், ஏழைகள்தான்) பிரச்னைகளை அரசியல்படுத்தியமைக்கு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவரது ஆட்சியில் தான், குடிசை மாற்று வாரியம், 10-வது மற்றும் 11-வது நிதிக் கமிஷனிடம் இருந்து நிதி பெற்று, சென்னைக்கு வெளியே ஏழைகள் வசிப்பதற்காக 115 சதுர அடியில் உலகிலேயே மிகச்சிறிய, மட்டமான வீடுகளைக் கட்டத் தொடங்கியது. அவர் தொடங்கிய மோசமான திட்டத்தை விரிவுபடுத்தி, சென்னையின் பல குடிசைப்பகுதிகளைக் காலிசெய்து, அந்த மக்களை சென்னைக்கு வெளியே குடியேற்ற அவசரப்படுகிறது இன்றைய அரசு. பறக்கும் ரயில் திட்டம், கூவம் சீரமைப்பு, உயர்நிலை மேம்பாலங்கள், பூங்காக்கள் அடங்கிய இன்றைய ஆட்சியாளர்கள் கனவு காணும் சிங்காரச் சென்னையின் கொண்டையில் உள்ள ஈரும், பேனும்தான் நகர்ப்புறச் சேரிகள். சந்தைப் பொருளாதாரத்தின் இரக்கமற்ற பேராசைக்கு ஈடுகொடுக்கும் நுகர்வுத்தன்மையும், சக்தியும் பெற்ற மேல்தட்டு, நடுத்தர மக்கள் மட்டுமே சென்னைக்குள் வாழத் தகுந்தவர்கள் எனும் எழுதப்படாத கொள்கையை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பெரு நிறுவனங்களும் இணைந்து, வர்க்கப்போர் போன்று தொடங்கி விட்டதைப் பார்க்கிறோம்.  வளர்ச்சித் திட்டங்களில் புரளும் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவழிப்பதற்குத்  தடையாக இருப்பவை இந்த குடிசைப் பகுதிகள் என்றே கருதப்படுகிறது. குடிசைகளையெல்லாம் ஆக்கிரமிப்புகள் என்றும், அதனால் அவர்களைக் காலி செய்ய வைப்பது சரி என்றும் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்துள்ள வளாகங்களை, அதிகார வர்க்கத்துடன் ஒன்றாகக் கலந்தவர்களை நெருங்கி விடாது. ஏனென்றால், இவர்கள்தான் இந்த வளர்ச்சியின் பங்குதாரர்கள். நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மலிவான பட்ஜெட்டில் அதிகமான ஏழைக் குடும்பங்களை குடியமர்த்திய முன்மாதிரித் திட்டம் என்று கண்ணகி நகர் வளாகத்துக்காக இந்திய அளவில் பரிசுகூட வாங்கியிருக்கிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். ஆனால், இந்த வளாகங்களும், அங்குள்ள பராமரிப்பற்ற சூழலும், மனித உயிர்கள் வாழத்தகுதி இல்லாதவை என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?  தமிழ், தமிழர்கள், திராவிடம், சினிமா என்று கச்சேரி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். மக்களின் உண்மையான பிரச்னைகளை ஆட்சியில் உள்ளவர்களிடம் விவாதிக்காமல், ஆமாம் போடுவதையே கடமையாகக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருப்பது இன்றைய துரதிருஷ்ட நிலை. இரண்டு நாள்கள் இந்த வளாகங்களில் தங்கினால் மட்டுமே, தாங்கள் உருவாக்கியவை பூலோக நரகங்கள் என்பதை இவர்கள் உணர முடியும்.  இதுவரை, இவ்விரு வளாகங்களிலும் 155 முதல் 165 சதுர அடி கொண்ட (குளியலறை, கழிப்பிடம் சேர்த்து)  22,400 கான்கிரீட் பொந்துகளைக் கட்டி, 1,04,000 நகர்ப்புற ஏழைகளை மறுகுடியமர்வு செய்துள்ளது அரசு. மேலும், 8,048 பொந்துகளைக் கட்டுவதை எதிர்த்த பொதுநல வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மஞ்சேரிக்கு அருகில் பெரும்பாக்கத்தில் | 950 கோடி செலவில் ஏழு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது அரசு. வரும் காலத்தில், சென்னையில் உள்ள 36,500 குடும்பங்கள், கிட்டத்தட்ட 2 லட்சம் குடிசைவாசிகள் சென்னைக்கு வெளியே புதிய அகதிகள் முகாம்களுக்குத் துரத்தப்படும் அபாயமும் உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தாத அரசின் குற்றத்தால், கிராமங்களின் ஏழை மக்கள் பிழைக்க வழி தேடி சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். மேலும் பலர், சென்னையிலேயே பல தலைமுறைகளாகப் பிறந்து வளர்ந்தவர்கள். சென்னையின் சேரிகளில், இவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தாலும், இவர்களது குழந்தைகள் பொது சமூகத்துடன் பழக வாய்ப்பிருந்தது. பள்ளிக்கல்வி, மருத்துவம் போன்றவை அருகில் கிடைத்தன. அவர்களின் ஒரே குற்றம் விளிம்பு மக்களாக இருப்பதுதான்.  ஆனால், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் இருக்கும் சூழலைப் பொறுத்தவரை விசித்திரமும் இல்லை, வேடிக்கையும் இல்லை. அது உச்சகட்ட அவல வாழ்க்கை. ஒற்றைச் ஜன்னலும், ஒரே ஒரு தகரக்கதவும் கொண்ட வீடுகள், பாதாளச் சாக்கடைக் குழாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள், குடிநீர் பைப்புகள் என்று ஒவ்வொன்றும் நாலாம் தரம். ஊழல், கஞ்சத்தனம், அலட்சியம், பொறுப்பற்ற ஆளுமை, கேவலமான நிர்வாகம் எல்லாம் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. மழைக்கு ஒதுங்குவதற்கும், தட்டுமுட்டுச்  சாமான்களை வைப்பதற்கும் தவிர, தங்களது வாழ்வை மக்கள் இங்கே திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள். நிரந்தரக் குடிநீர் வசதி இல்லை. கிடைப்பதும் மிகக் குறைவு. கிடைத்தாலும் ஒரே நாளில் புழுத்து நெளிகிறது. பல வீடுகளில் குடிநீருக்காக அலைவதற்கும், அடிபம்புகளை அடித்து ஓய்வதற்கும் ஒத்தாசையாக சிறார்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். வீடுகளின் கழிப்பிடங்கள் மன அழுத்தத்தை வரவழைக்கும் விதத்தில் உள்ளதோடு, நீரும் பற்றாக்குறை. அதனால், பலர் திறந்தவெளிக் கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர்.  22 ரேஷன் கடைகளாவது அவசியமான மக்கள்தொகைக்கு, ஒதுக்கப்பட்டவையோ வெறும் 7 ரேஷன்கடைகள்தான். அதனால், ரேஷன் வாங்குவது பெரிய போராட்டம். ஜங்ஷன் பாக்ஸ்கள் இருந்தாலும், பெரும்பாலான வீடுகளுக்கு மின்வசதி செய்து தரப்படவில்லை. அரசியல் கட்சி குண்டர்களும், மின்சாரத்துறை ஊழியர்களும் இணைந்து வீடுகளுக்கு ஆபத்தான திருட்டு கொக்கி மின் இணைப்புக் கொடுத்து, மாதாமாதம் பல லட்சங்கள்  ஈட்டுகிறார்கள். குழந்தைகளுக்கான அங்கன்வாடிகள் மிகமிகக் குறைவு. போனால் போகிறது என்று இயங்கும் இவற்றின் பராமரிப்பும் மிக மோசம்.  பெரும்பாலானவை அரசுசாரா நிறுவனங்களால் நடத்தப்படுபவை. குடிநீரும், கழிப்பிடங்களும் இல்லாமல் இவை உண்மையில் தொற்று நோய் மையங்கள். இவ்வளாகங்களில் உள்ள 6 சிறிய பள்ளிகளை, பள்ளிகள் என்ற பெயரில் அரசின் மிகப் பெரிய மோசடி என்று தான் கூற முடியும். மறுகுடியமர்வின் காரணமாக மட்டுமே, 10,000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கல்வி இல்லாமல் எதிர்காலத்தைத் தொலைத்து வருகிறார்கள்.  ஆரம்ப சுகாதார மையங்களோ, மருத்துவமனையோகூட அரசு அமைக்காத நிலையில், மக்கள் நிவாரணம் இன்றி ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். பிரசவங்கள், வீட்டு வாசல்களிலும், ஆட்டோவிலும் நடந்துள்ளன.  சென்னைக்குத் தினமும் வந்து வேலை செய்து மீண்டும் வளாகங்களுக்குத் திரும்புவதும் மிகப்பெரிய போராட்டம். ஆகப்பெரும்பாலோர் வேலையை இழந்து, கல்வியை இழந்து, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி, ரேஷன் என்று போராடி, பண விரயம் செய்து, வாழும் வழி தெரியாமல், மன அழுத்தத்தோடும், நோய் நொடிகளோடும் உழல்கிறார்கள். அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் இம்மக்களை அமைதியைக் கெடுக்க வந்தவர்களாகவும் குற்றப் பரம்பரை போன்றும் தவறாகப் பார்ப்பதுதான் நிதர்சனம். இங்குள்ள இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை கொடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வருவது இல்லை.  மிக ஆரோக்கியமற்ற சூழலால், இங்கு தற்கொலைச் சாவுகள் மிக அதிகம். தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானோர் இளம் பெண்கள். செத்தவர்களுக்கும்கூட அமைதியில்லை. புதைப்பதற்கு இருப்பதோ அரைகுறையாக உள்ள பராமரிப்பற்ற மிகச் சிறிய சுடுகாடு. புதைத்த இடத்திலேயே மீண்டும் தோண்டி, புதிய சடலங்களைப் புதைக்கும் அவலம். எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது குடிசை மாற்று வாரியம். ஆனால், மார்ச் மாதம் தலைமைச் செயலகக் கூட்டத்தில், பல துறைச்செயலர்களும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் இந்த வளாகங்களின் இழிநிலையையும், ஏழைகளின் வாழ்வாதார இழப்பையும் பற்றி குற்றஉணர்வுடன் பேசியுள்ளனரே, ஏன்? 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை. கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன? வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள். உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினராக இந்த வளாகங்களுக்கு மூன்று நாள்கள் சென்று ஒவ்வொரு விஷயத்தையும் பேசி, பார்த்து, விசாரித்து, அனுபவித்து வந்த பின்னர், சில நாள்களுக்கு தூக்கமும் வர மறுத்தது, தொண்டைக்குழிக்குள் சோறும் இறங்க மறுத்தது என்பதுதான் உண்மை.  நகர வளர்ச்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு, எல்லா சமூகங்களோடும் இணக்கமாக வாழும் உரிமை இழந்து நலிந்து போவோரில் ஆகப் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர். ஆனால், தலித் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவை இவ் விஷயத்தில் மயான அமைதி காத்து வருகின்றன. நவீன தீண்டாமையை உருவாக்கும் இதே அரசு, ஏழ்மை ஒழிப்புக்காகப் பல திட்டங்களை முழுப்பக்க விளம்பரங்களாக வெளியிடுவதுதான் விசித்திரமான வேடிக்கை.
கருத்துக்கள்

வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.- ஏதோ விடுபாடு உள்ளது. சுருக்கும் பொழுது பொருளை உணராமல் சுருக்கப்பட்டிருக்கலாம். அல்லது கட்டழிக்கப்பட்டவை என இருக்க வேண்டும். கட்டரையாளர் நல்ல தமிழ் நடையிலேயே எழுதலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2010 4:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக