திங்கள், 30 நவம்பர், 2009

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம் நிர்வாக குழுவினர் ராஜிநாமா



கும்மிடிப்பூண்டி, நவ. 29: கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகக் குழுவினர், தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, இலங்கை தமிழர் மறு வாழ்வுத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இம் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலிக்கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முகாமைச் சேர்ந்த சிவக்குமார், நிஷாந்தன், செல்வகுமார் ஆகியோரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு நடத்திய வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முகாம் நிர்வாகக் குழு தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் ஜெகதீஸ்வரன், பொருளாளர் நாகராசா உள்பட நிர்வாகக் குழுவினர் ஒட்டு மொத்தமாக பதவி விலகியுள்ளனர். ராஜிநாமா கடித நகல்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், ஈழ தமிழர் ஏதிலியர் மறுவாழ்வு கழகம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு, கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர். “கைது செய்யப்பட்ட மூவரும் இப் பிரச்னையில் தொடர்பில்லாத அப்பாவிகள் என்று நிர்வாக குழுவினர் எவ்வளவோ கூறியும் அவர்களை சாதாரண விசாரணை என்று அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். வெறும் காட்சிப் பொருளாய் பதவியில் நீடிக்க விருப்பமில்லாமலும், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கி பொறுப்புகளில் இருந்து அனைவரும் விலகுவதாக’ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

தன்மானத் தமிழர்களுக்குப் பாராட்டுகள். உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து விட்டால் எச்சிக்கலும் எழாது என்பதை உணர்ந்து அரச வன்முறையில் காவல்துறை இறங்காமல் இரு்க்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக