implementation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
implementation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

முதலமைச்சர் தனிப்பிரிவில் முன்முறையாகத் தமிழ் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.


பொதுமக்கள் நன்மை பெறுவதற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலப் பயன்பாட்டில் இருப்பதால்  பெருவாரியான மக்களுக்கு என்ன நன்மை? எனவே, தமிழில் பயன்பாடு முழுமையாக இருக்கும் வகையில் வலைத்தளத்தை மாற்ற வேண்டும். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மடல்களும் தமிழில் இருத்தல் வேண்டும். இது குறித்து நான் முன்னரே இப்பிரிவிற்கு முறையிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி இயக்குநரும் மடல் எண் ந.க.ஆ.மொ.3 /5316/2012  நாள் 30 .07 .12  இல் இந்திய அரசால் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உறுதுணை புரியுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவி்ற்கு மடல் அனுப்பி உள்ளது.  எனவே, முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையத் தளம் உட்பட அனைத்திலும் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைமுழுமையாக நிறைவேற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், சென்னை 600004.


முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம்: தொடங்கி வைத்தார் முதல்வர்


Last Updated : 12 Aug 2012 01:08:49 PM IST
சென்னை, ஆக.12: முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..." ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள்  வாயிலாகவும்  நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.  இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு  உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.  சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள  முதலமைச்சர் தனிப்பிரிவின்  ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்  மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம்  மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல்வர் துவக்கி வைத்தார்கள். அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிடிருந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண்,  தொடர்புடைய  அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து  குறுந்தகவல்  மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வர் 11.8.2012 அன்று மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். ”-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.