பட்டதாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டதாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இயற்கை வேளாண்மையை நம்பும் பட்டதாரி

இயற்கை   வேளாண்மையை நம்பும் பட்டதாரி
 
மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு காரணமாக இருப்பது, ஆடு, மாடுகளின் சாணங்கள், வேப்பிலை உள்ளிட்ட இயற்கை உரங்களினால் விளைந்த உணவு பொருட்களுக்கு பதில், நச்சு தன்மை கொண்ட ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் விளையும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது தான்.

இந்த நிலையில், ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால், மாயமான மண் வளத்தையும், விவசாயத்தினை நம்பியுள்ள கிராமப்புறங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், பட்டதாரி இளைஞர்கள் 13 பேர், ‘நல்ல சந்தை’ விவசாய பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற அமைப்பினை துவங்கி நடத்தி வருகின்றனர்.அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த பாக்கம் கிராமத்தில், ‘நல்ல கீரை’ என்ற பெயரில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருவதோடு, அந்த விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

10ஆண்டுகளாக...:

இதுகுறித்து, ‘நல்ல சந்தை’யின் முக்கிய நிர்வாகியான செகநாதன் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம், பாலவேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பேடு கிராமத்தினை சேர்ந்தவன் நான். கிராமப்புற முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்பதே என் நீண்ட கால விருப்பம்.அதை நிறைவேற்ற, முதல் கட்டமாக, எங்கள் கிராமத்தில், ‘சிறகு’ என்ற பெயரில் சர்வதேச தரத்திலான உயர்நிலை பள்ளியை, கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி, கிராமப்புற சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறேன். விவசாயிகளின் வறுமை நிலை தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு முன், மேலப்பேடு கிராமத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டதில், விவசாயிகளின் வருமானத்தில், 60 சதவீதம், ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து, மருத்துவம், ஆல்கஹால் ஆகியவைக்கு செல்வது தெரிய வந்தது.அந்த செலவை கட்டுப்படுத்தினால் கிராம முன்னேற்றம் சாத்தியமாகும் என்பதையும், அதை இயற்கை விவசாயத்தால் சாத்தியமாக்கலாம் என்பதையும் உணர்ந்தேன். காரணம், இயற்கை விவசாயத்தால், ரசாயன உரம், பூச்சி மருந்து செலவு ஏற்படாது.இயற்கை விவசாயத்தால் விளையும் உணவு பொருட்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது. எனவே, மருத்துவ செலவிற்கு வாய்ப்பில்லை. ஆல்கஹால் செலவை தவிர்க்க, மதுவிலக்கை அமல்படுத்த, எங்கள் கிராமத்தில் மது, புகையிலை தீண்டா இளைஞர்கள் சங்கத்தினை நண்பர்களோடு இணைந்து நடத்தி வருகிறேன்.இயற்கை விவசாயத்தினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள தென்மாநிலங்கள் முழுவதும் சுற்றி, சாதனை படைத்த இயற்கை விவசாயிகளோடு தங்கி அவர்களின் அனுபவத்தை பாடமாக பெற்றுள்ளேன்.

அதிக லாபம்:

ரசாயன உரம், பூச்சி கொல்லிகளை தெளித்து மேற்கொள்ளும் விவசாயத்தில், ஓராண்டில், ஒரு ஏக்கருக்கு 25 மூட்டை நெல்தான் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் 80 மூட்டை நெல் கிடைக்கும். அதே போல், கரும்பு சாகுபடியிலும், பூச்சி கொல்லி விவசாயத்தில் ஏக்கருக்கு 40 டன் முதல் 60 டன் வரை தான் கரும்பு கிட்டும். இயற்கை விவசாயத்தில் 100 டன் கரும்பு கிட்டும்.தமிழகத்தில் பெருமளவிலுள்ள குறுவிவசாயிகள், அந்த 2 ஆண்டுகாலம் ஏற்படும் பொருளாதார இழப்பை சுமக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.ஆனால், விவசாயிகள் மண்ணை வளப்படுத்த, இழப்பை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் நிலத்தின் சிறு பகுதியில் இயற்கை விவசாயம் மூலம் கீரையை பயிரிட்டு, அதிக லாபத்தை பெறலாம். பெரும் பகுதியை வளப்படுத்தலாம்.காரணம், 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால்தான், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், அரை ஏக்கரில் கீரையை பயிரிட்டு, 25 ஆயிரம் ரூபாயை பெற முடியும்.இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று, இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ‘நல்ல சந்தை’ அமைப்பு, பட்டதாரி இளைஞர்களான, வில்லிவாக்கம், திருநின்றவூர், நங்கநல்லூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சரவணன், சிவகுமார், திருமலை, புனிதா, விசு, ராமு,அறிவுக்கரசன், கவுதம், சியாம், சலோமி ஏசுதாஸ் ஆகிய என் நண்பர்கள் மற்றும் இயற்கைவிவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் என, 13 பேரோடு துவங்கப்பட்டது.

30 ஏக்கர்:

எங்கள் அமைப்பின் ஒரு பிரிவான, ‘நல்ல கீரை’ என்ற அமைப்பு மூலம், பாக்கம் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். அரிதான நெல் வகைகள், காய்கறி வகைகளை பயிரிட்டு வருகிறோம்.தினசரி, 1,500 கீரைக்கட்டுகளை திருவான்மியூர், அம்பத்துார், அடையாறு, வளசரவாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் விற்று வருகிறோம்.எங்கள் அமைப்பு மூலம், ஊத்துக்கோட்டையில் இருளர் மக்கள், 30 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சமீபகாலமாக, மேலப்பேடு கிராமத்தில் இயங்கும் எங்கள் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.இயற்கை விவசாயம் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்றும் பணியிலும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளிலும், ‘நல்ல சந்தை’ மற்றும் ‘நல்ல கீரை’ அமைப்புகள் தொடர்ந்து இயங்கும்.இவ்வாறு, ஜெகநாதன் கூறினார்.

நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள அரை ஏக்கர் நிலத்தில், சிறுகீரை, காசினி கீரை, புளிச்ச கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, கரிசலாங்கண்ணி, அகத்திக் கீரை உள்ளிட்ட 30 வகையான கீரைகளை பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறோம்.
ஜெகநாதன், ‘நல்ல சந்தை’யின் நிர்வாகி
 

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

வேளாண் பணியில் விறுவிறுப்பு காட்டும் பொறியியல் பட்டதாரி

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_685822.jpg

வேளாண் பணியில் விறுவிறுப்பு காட்டும் பொறியியல் பட்டதாரி

காரைக்குடி :விவசாயத்தை வேண்டாமென ஒதுக்கி வரும் நிலையில், இன்ஜினியரிங் பட்டம் பெற்றும், பாழ்பட்ட நிலத்தை பண்பட்டு உழுது, அறுவடை செய்து வருகிறார், காரைக்குடி முத்துப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

காரைக்குடி முத்துப்பட்டிணத்தை சேர்ந்தவர் சிவபாண்டியன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர்,இன்ஜினியரிங் மெக்கானிக்கல் படிப்பை கடந்த 2010-ல் நிறைவு செய்தார். "ஒயிட் காலர்' வேலைக்காக, சென்னைக்கு பறக்காமல், தந்தை அமல்ராஜ் பார்த்த விவசாயத்தை பார்க்க முற்பட்டார். உடன் பிறந்த சகோதரர்கள் ஏழுபேர், சகோதரிகள் ஐந்து பேர்.காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில், இவர்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில், தற்போது கோடை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

பட்டதாரியான சிவபாண்டியன் கூறும்போது: விவசாயம் செய்வதால் மன நிறைவு பெறுகிறது. கடின உழைப்பு என்பதை, விவசாயத்தில் கற்று கொள்ளலாம். யாரிடமும் கை கட்டி வேலை பார்ப்பதை விடுத்து, நம்மால் 10 பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளதால், நடவு மிஷின், அறுவடை மிஷின், கதிரடிக்கும் மிஷின்என விவசாயத்தில் தற்போது வரை உள்ள, நவீன கருவிகள் வரை இயக்குவேன்.இயற்கை உரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, மாட்டுச்சாணம், மண்புழு உரம் ஆகியவற்றை மட்டுமே போட்டு வருகிறேன். வழக்கமாக முதல் போக அறுவடையில், ஏக்கருக்கு 40 மூடை நெல் கிடைக்கும். கடந்த முறை மழையின்மையால் 20 மூடை கிடைத்தது.தற்போது, இரண்டாம் போகமான கோடை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.கண்மாய் வெட்டுக்கு (நூறுநாள் வேலை) கூலியாட்கள் சென்று விடுவதால், நடவு உள்ளிட்ட வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.உழுதவன் கணக்கு பார்த்தால், உழவுக்கு கூட மிஞ்சாது, என்பது தற்போதைய நடைமுறையில் சாத்தியம். இருந்தாலும் மன நிறைவு, இந்த விவசாயத்தில் தான் உள்ளது,என்றார்.