(சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி)
- 38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை. – ஆளுநர் இரவி
& 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்று அறிவிலித்தனமாகக் கூவி வருகிறதே! எத்தனை உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும் மேலை நாட்டுப் பணத்துக்காக மானத்தை விற்ற கூட்டம் செவிப் புலன்களையும் விற்று விட்டது. எதுவும் காதில் ஏறாது. – ச.சண்முகநாதன் முகநூலில்
- இவ்வாறு சனாதனத்தில்/இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று பலர் பிதற்றி வருகிறார்கள். மனுவில் தீண்டாமை என்னும் சொல் இடம் பெறாதிருக்கலாம். ஆனால் அது கூறும் கருத்துகள் எல்லாம் தீண்டாமைதானே!
சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241)
சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி (மனு 8. 22)
தொடாதே என்றால் தீண்டாதே என்றுதானே பொருள். இவையெல்லாம் தீண்டாமை இல்லாமல் வேறு என்னவாம்?
கிமு 300 மற்றும் கிபி 400க்கு இடைப்பட்டவை சாதகக் கதைகள். அவற்றில் தொகுதி 4.391 இல், உயர்சாதிப்பெண்கள் இருவர் தீண்டத்தகாதக் கீழ்ச் சாதிப்பெண்கள் இருவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர்களைப் பார்த்த கண்களைக் கழுவிக் கொண்டார்களாம். பார்வையால் கூடத் தீண்டாக் கொடுமை இந்துமதத்தில் இருந்ததற்கு இதுவே சான்று.
சிலர் இப்போது தீண்டாமை இல்லை என்பார்கள். தீண்டத்தகாதவர்களுடன் உறவு வைப்பதாகக் கூறித்தானே பல காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணப் பெண்கள் பலர் வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் பணிப்பெண் கொல்லைப்புறம் சென்று பாத்திரங்களைத் துலக்கி விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் வீட்டு அம்மா அவற்றைக் கழுவி உள்ளே கொண்டு செல்வார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்த பின் இது குறைந்தாலும் பலர், பணிப்பெண்கள் கழுவிய பாத்திரங்களைத் தீட்டு என்று சொல்லி மீண்டும் கழுவித்தான் பயன்படுத்துகின்றனர்.
- 40. அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தருமம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. – பொருள் புதிது.காம் -இணையத்தளம் – இது சரிதானா?
- ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவு கட்சியினரும் தவறான தகவல்களைத் தெரிவித்துக் குழப்பம் உண்டாக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு அரசாதரவு உள்ளதால், தேர்தல் நோக்கில் கட்சித் தலைவர்கள் சிலரும் அவர்களின் அரட்டல் உருட்டல்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் அல்லது ஒதுங்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், பெருவாரியான தலைவர்களும் மக்களும் சனாதனத்தை இனியும் வளர விடக்கூடாது என உறுதியாக உள்ளனர்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 66-67
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக