சுட்டுரைகளில் நெடுவாசல்!


  புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதி முதற்கொண்டு இந்தியா முழுக்க 31 இடங்களில் மண்ணுக்கு அடியிலிருந்து நீரகக் கரிமம் (Hydro Carbon) எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது நடுவணரசு.
  தரையைக் குடைந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்கு ஆழ்துளையிட்டு, பல்வேறு வேதிக்கலவைகளைச் செலுத்தி அங்கிருக்கும் எண்ணெய் / இயற்கை எரிவளியை எடுப்பதன் மூலம் குறிப்பிட்ட பகுதி முழுவதையும் வாழத்தகாத இடமாக மாற்றிவிடக்கூடிய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 15 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் பகுதி மக்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இணையத்தில் தொடர்ந்து தங்கள் கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அவற்றுள் தேர்ந்தெடுத்த சில சுட்டுரைகள் (tweets) மட்டும் இங்கே பார்வைக்கு.
   நெடுவாசல்தானே என்று இருந்து விடாதே! நாளை உன் வாசலும் பாதிக்கப்படலாம். விழித்திடு தமிழா!… – கார்த்திகேயன்
(@keyan87c)
காளைக்காக அன்று வாடிவாசல்!
கழனிக்காக இன்று நெடுவாசல்!
திறக்கட்டும் அரசின் இதயவாசல்!
அதுவரை உழவனின் வாழ்வு ஊசல்
– நடிகர் விவேக்கு (@Actor_Vivek)
ஒன்றிணைவோம்!
இனி ஒரு விதி செய்வோம்!!
நெடுவாசல் காப்போம்!
– கடைசி விவசாயி (@The_LastFarmer)
நேற்று வாடிவாசல்! இன்று நெடுவாசல்!
– சாகித்து இராம் (@sureshforuin)
உணர்வுகளுக்காக #வாடிவாசல்
உணவுக்காக #நெடுவாசல்
– பிரவீன் (@Praveennkl333)
நீரகக் கரிமத் (ஐடிரோ கார்பன்) திட்டம் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும் #மத்திய அரசு
நாங்கள் அந்த நிலத்தில் 5000 உழவர்களுக்கு வேலை கொடுப்போம் #நெடுவாசல்
– சோ செல்வா (@joe_selva1)
#நெடுவாசல் தமிழகத்தின் அடுத்த போர்க்களமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது!
– விசய் (@vijaytwitts)
எதிரி நாடுகளை விட நம் நாட்டிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே இங்கு காலமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது! #நெடுவாசல்
– இ.பு.ஞானப்பிரகாசன் (@Gnaanapragaasan)
வேளாண்மையை அழித்து வரும் நீரகக் கரிமத் திட்டத்தை ஆதரிப்பவர்களே! அரிசிக்கு பதில் ஓர் உருளை (சிலிண்டர்) சாணவளி பெற்றுக் கொள்கிறீர்களா?
– மாசுடர் பீசு (@Kannan_Twitz)
காட்டை அழித்து (ஈசா), நிலம்-நீரைப் பாழாக்கி (சாணவளி), கடலை வீணாக்கி (எண்ணெய் கொட்டி) இயற்கையை அழித்து வளர்ச்சி! என்ன வாழ்க்கை வாழ?
– வசந்து (@renvasanth)
  நாளும்  நூற்றுக்கணக்கில் சுட்டுரைகள் கண்டன அம்புகளாகச் சீறிப்பாய்கின்றன. சிலவே இங்கு நம் பார்வைக்குத் தரப்பட்டுள்ளன.  மத்திய அரசு, நெடுவாசல் கதவை நீரகக்கரிமத் திட்டத்திற்குத்  திறந்துவிடுமா?அடைக்குமா?
– இ.பு.ஞானப்பிரகாசன்