சனி, 14 செப்டம்பர், 2013

சக்கர நாற்காலியில் ,அருவினையாளர்


சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...

ஊன்றி நடக்கஉறுதி கொண்டால்ஒட்டடை நூல்கூடஊன்று கோல்தான்.


என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன்


நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.
இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.


அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.


பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.
செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.


நான்காம் வகுப்புப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.
வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.


கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.
நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.


புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD,NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD,BUDGET FURNITURE,IMPERIAL INFOTECH,VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.
சூர்யாவின் தந்தை காவல்துறையின் கைரேகைப் பிரிவில் இன்ஸ்பெக்டராக சென்னையில் இருந்தவர். பணி ஒய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டார். சூர்யா தற்போது பொள்ளாச்சியில் இருந்து கொண்டுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறார். தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி, அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி ஆகியோர், ‘எப்படியும் நம்ம சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வற்றாது வழங்கி வருகின்றனர்.


அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளைப் பகலாக்கிக் கடுமையாக உழைத்து, நல்லதொரு வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா தனக்கு உற்றுழி உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ் , மற்றும் பல நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இவ்வளவு திறமையா என்று இவரது வெப் டிசைனைப் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.


ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும் என்று சொல்லும் சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் (creative E studio.com) என்ற வலைதளத்துக்குச் செல்லவும்.
அவரது அலைபேசி எண்: 9790741542.


- எல்.முருகராசு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக