வியாழன், 12 செப்டம்பர், 2013

மதிப்பெண்களை நோக்கி ஓடாதீர்கள்!



மதிப்பெண்களை நோக்கி ஓடாதீர்கள்!
சிற்றூர்க் குழந்தைகளுக்கு, ஏட்டு கல்வியுடன், விவசாய கல்வியை களப்பணியாக கற்று தரும், அருண்: எனக்கு சிறு வயதிலிருந்தே, இயற்கை மற்றும்
சுற்றுச்சூழலின் மீது, ஆர்வம் அதிகம். ஆனால், பெற்றோர் நிர்பந்தத்தால், "மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்தேன். பாடப் புத்தகத்தில் படித்த இயந்திரங்களை, நிஜத்தில் இயக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். நான்கு ஆண்டு படிப்பில், என்ன கற்றுக் கொண்டோம் என, யோசித்த போது தான், வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிஞ்சியது. களப்பணி இல்லாமல் படித்தது தான், காரணம் என எண்ணி, அடையாரில் உள்ள, "தி ஸ்கூல்' பள்ளியில், தோட்டக்காரராக வேலைக்கு சேர்ந்தேன். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை கற்று, அங்கேயே, 12 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினேன். மூதாதையர் ஊரான, திருவண்ணாமலையின், கனந்தம்பூண்டி கிராமத்துக்கு செல்லும் போது, அக்கிராம
குழந்தைகளுக்கு, மாற்று வழி கல்வியை கற்பிக்க, ஆர்வம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன், "தி பாரஸ்ட் வே' என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதன் மூலம், 6
ஏக்கர் நிலப்பரப்பில் ஆர்கானிக் பண்ணை அமைத்து, அதில், "மருதம் பார்ம்' தொடக்க பள்ளியை துவக்கினேன். இங்கு, வெறும் ஏட்டு கல்வியுடன் மட்டும் நில்லாமல், இயற்கையோடு கலந்த சூழ்நிலையில், களப்பணி மூலம், விவசாயத்தை பயிற்றுவிக்கிறேன். கிராமத்து குழந்தைகளுக்கு, விவசாயத்தை முக்கிய பாடமாக பயிற்றுவித்தாலும் ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்வது, நடிப்பு கலை, தோட்டக் கலை, கட்டடக் கலை, தையல் என, பலவித கலைகளையும் பயிற்று விக்கிறேன். 2ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், ஒவ்வொரு மாணவருக்கும், வயலில் சிறிதளவு இடம் ஒதுக்கி, செய்முறை வடிவிலான விவசாய கல்வியை, சிறு வயதிலேயே சொல்லி தருகிறேன். அவரவர் விளைவித்த காய்கறிகளை, வீட்டுக்கு எடுத்து செல்லவும் அனுமதி வழங்கியுள்ளோம். எங்களின் மாற்றுவழி கல்வி, மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி ஓட வைப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக