திங்கள், 10 ஜூன், 2013

உயர்கல்விக்காகத் தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு ப் பகுதி ப் பெண் சுவேதா



அமெரிக்காவில் உயர்கல்விக்காகத் தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு ப் பகுதி ப் பெண் சுவேதா
நியூயார்க்:மும்பையைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள், அமெரிக்காவில் உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான, காமாட்டிபுராவைச் சேர்ந்தவர், ஸ்வேதா, 18. இவரின் தாத்தா, பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார். இதில் விரும்பமின்றி, ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார். எனினும், சூழ்நிலையின் காரணமாக, அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.

ஸ்வேதாவின் தாய், குழந்தையை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின், பாலியல் தொழிலையும் கைவிட்டார். இருப்பினும், பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில், ஸ்வேதாவும் பல ஆண்களால், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதனிடையே, அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று, அங்குள்ள சிறுமிகளிடம், பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பணிகளை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள, போர்டு கல்லூரி, கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும், ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி, ஆண்டுக்கு, 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான, மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது.

இது தவிர, அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "நியூஸ் வீக்' பத்திரிகையில், "25 உமன்ஸ் அன்டர் 25 டு வாட்ச்' என்ற தலைப்பில், உலகில் கவனிக்கப்பட வேண்டிய, 25 வயதிற்கு உள்பட்ட, 25 பெண்கள் என்ற பட்டியலிலும், ஸ்வேதா இடம் பெற்றுள்ளார். இதில், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, பள்ளி சிறுமி, மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.சிவப்பு விளக்கு பகுதியான, மும்பையின் காமாட்டிபுராவிலிருந்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் முதல் பெண், என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார்.

தற்போது அமெரிக்கா செல்லும் ஸ்வேதாவுக்கு, ஓராண்டுக்கு முன்பே, சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுதல், குறித்த உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. பாஸ்போர்ட் இல்லாததால், அப்போது அமெரிக்க செல்ல முடியாத ஸ்வேதா, சைகாலஜியில் பட்டம் பெற்று, பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப் போவதாக கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக