சனி, 8 ஜூன், 2013

"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்



கோவை :எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு:குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், முதல் பருவ புத்தகத்தில், ஒன்பதாவது பாடமாக, "இப்படி நடந்தால்...' என்ற தலைப்பில், அந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பாடத்திலுள்ள படத்தில், குழந்தையின் வாயை, ஒருவரின் கை இறுக்கமாக அழுத்தியிருப்பது போன்றும், அந்த கையை, குழந்தை இழுப்பது போன்றும், சமூக அவலத்தை, பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த பாடத்தில் இருப்பதாவது:வகுப்பறையில் சுறுசுறுப்பாக, சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா, சில நாட்களாக சோர்வாக இருந்தாள். வகுப்பாசிரியர் விசாரித்தார். நாட்கள் செல்லச் செல்ல, அவளிடம் மாற்றம் மிகுதியானது. படிப்பிலும், நாட்டம் குறைந்தது; யாருடனும் பேசுவதில்லை; வீட்டில் ஏதாவது பிரச்னையா என, அறிய ஆசிரியை, மீனாவின் அம்மாவை பள்ளிக்குவரவழைத்தார்.மீனா பற்றி கேட்டதும், "சில நாட்களாக, அவள் இப்படித்தான் இருக்கிறாள். வீட்டில் அவளுக்கு எந்த குறையும் இல்லை; மருத்துவரிடம் காண்பித்தேன். உடல் அளவில் ஏதுமில்லை என, கூறிவிட்டார். நானும் பலமுறை கேட்டு விட்டேன்; வாயே திறக்கவில்லை' எனக் கூறினார் அம்மா.

மீனாவை, தனியே அழைத்து, ஆசிரியை விசாரித்தபோது, மீனா கண் கலங்கினாள். "ஒருநாள் என் அம்மாவும், அப்பாவும், என்னை, பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, அவசர வேலையாக வெளியே சென்றனர். அந்த வீட்டு மாமா... அவரோட மொபைல் போனில் இருந்த படங்களை காண்பித்து, பார்க்குமாறு வற்புறுத்தினார். தொட்டுத் தொட்டு பேசினார்; இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, மிரட்டினார். எனக்கு பயமாய் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை; நான் தவறு செய்து விட்டேனா?' என, மீனா அழுதாள்.ஆசிரியையின் ஆறுதலால், மீனா, பழைய நிலைக்கு திரும்பினாள்.இப்படிப்பட்ட கருத்துடன், பாடம் முடிகிறது.
மூன்று கேள்விகள்:

இது குறித்து, அரசு பள்ளி தமிழாசிரியர் ஒருவர் கூறியதாவது: சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாடப் புத்தகங்கள் மட்டுமே சிறந்த வழி. எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியற்ற குழந்தைகளுக்கு விருப்பமில்லாத, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குழந்தைகளுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக