ஞாயிறு, 2 ஜூன், 2013

வேளாண் கல்விக்கு த் தேவைப்பாடு!

வேளாண் கல்விக்கு த்  தேவைப்பாடு!
மாணவர்களுக்கு, விவசாயம் தொடர்பான படிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி: ஐ.டி., போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமே, கவனம் செலுத்தி வந்த இளைய தலைமுறையினருக்கு, தமிழகத்தின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு, அது தொடர்பான படிப்புகளில், அதிகம் சேருகின்றனர்.தனியார் விவசாயக் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும், ஒரே மாதிரியான பாடத் திட்டங்கள் மற்றும் வகுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. எனவே, தனியார் கல்லூரிகளில் படித்தாலும், பல்கலைக்கழக முத்திரையோடு தான், மாணவர்கள் வெளியே செல்வர். இதனால், ஒரே மாதிரியான தரமான கல்வியையே, அனைவரும் பயின்றவர்களாக இருப்பர்.விவசாயப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், "ஆன்-லைனில்' வெளியிடப்பட்டு உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பங்களுக்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. விவசாயத்தில், யு.ஜி., படிக்க விரும்பும், எஸ்.டி., - எஸ்.சி., மாணவர்கள், 325 ரூபாயும், மற்ற மாணவர்கள், 625 ரூபாய்க்கான டி.டி.,யை, விண்ணப்பம் மற்றும் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டில் மட்டும், வேளாண் படிப்பு படித்த, 450 இளைஞர்களுக்கு, அரசு பணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும், 58 விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான பணியிடங்கள், காலியாக உள்ளதால், வேளாண் தொடர்பான படிப்புகளுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது.ஐரோப்பிய நாடுகளில், வேளாண் கல்வி பயின்றவர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. குறிப்பாக, வேளாண் படிப்பு முடித்து ஜெர்மன் மொழி தெரிந்திருந்தாலே, அந்நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலையில் சேரும் வாய்ப்பு உள்ளது.
விவசாயக் கல்விக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் விவசாய பாலிடெக்னிக் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்களும், ஏராளமாக இங்கு வந்து வேளாண் கல்வி பயில்கின்றனர்.

சமவெளியில் கேரட் பயிரிடலாம்!
மலை பிரதேசத்தில் மட்டுமே வளரும் செடிகளை, சமவெளியான பெரம்பலூரிலும் அறுவடை செய்து சாதித்த, முகமது ஜின்னா: நான், பெரம்பலூர் மாவட்டத்தின், விசுவக்குடி பகுதியைச் சேர்ந்தவன். கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குவைத் நாட்டில் பணியாற்றிய அனுபவம் உண்டு. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள அந்நாட்டில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற, குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளையும், விவசாயம் செய்து அறுவடை செய்கின்றனர்.பாலைவன பூமியான குவைத் நாட்டிலேயே, மலை பிரதேச காய்கறிகளை வளர்க்கும் போது, சோளம், பருத்தி மட்டுமே விளையும், சமவெளி பூமியான, பெரம்பலூர் மாவட்டத்தில், ஏன் கேரட் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்ய முடியாது என்ற எண்ணம் தோன்றியது. சொந்த ஊர் திரும்பியதும், எசனை என்ற கிராமத்தில், சொந்தமாக இடம் வாங்கி, வேளாண் அதிகாரிகள் உதவியுடன், கேரட் பயிரிட முயற்சித்தேன்.மலை பிரதேசங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தினாலே, கேரட் போன்ற செடிகளை பயிரிடலாம். எந்த வகை மண்ணாக இருந்தாலும், நீரை நன்கு உறிஞ்சும் தன்மையும், எளிதில் இறுகி, கட்டியாகாத தன்மையும் இருக்க வேண்டும். எந்நேரமும் நிலம் சிறிது ஈரத் தன்மையோடு இருக்க வேண்டுமே தவிர, நீர் தேங்கி இருக்க கூடாது. தேவையான குளிர்ச்சி மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் நவம்பர் மாதத்தில், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற, மலைபிரதேச காய்கறிகளை, நம் சமவெளி பகுதியிலேயே பயிரிடலாம்.கேரட்டை சரியான காலத்தில் பயிரிட்டு, தகுந்த முறையில் பராமரித்தாலும், செடிகளில் நோய் தாக்கியது. உடனே, வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, சாதாரண சமவெளி பகுதியிலேயே, கேரட் பயிரிட்டு அறுவடை செய்து சாதித்தேன்.
முதல் முறை என்பதால், 45 ஆயிரம் செலவிட்டு, 70 ஆயிரம் ரூபாய் பெற முடிந்தது. அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டு, இன்னும் அதிக லாபம் பெற முயற்சிப்பேன்.
தொடர்புக்கு: 95855 13312.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக