புதன், 8 மே, 2013

2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கருத்தோவியங்கள்

கார்ட்டூன் ஓவியங்கள்!

கார்ட்டூன் போன்ற குகை ஓவியத்தை, 2,300 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வரைந்ததை கண்டுபிடித்த, நாராயணமூர்த்தி: நான், தொல்லியல் ஆய்வாளராக இருக்கிறேன். தர்மபுரியின் அமராவதி அணைக்கு அருகில், குழுமம் என, அகநானூற்றில் குறிப்பிடப்பட்ட பழமையான ஊர், தற்போது கொழுமம் என, அழைக்கப்படுகிறது. அங்கு ஆடு மேய்க்கும் ஒரு பாட்டி, "இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் மிக பழமையான, "அளை' இருக்குது' என, அங்கு செல்லும் வழியை காட்டினார். குகையை, அளை, பொடங்கு என, வட்டார மொழியில் அழைப்பர். செல்லும் வழியில் மலைப்பாம்பு, யானை என, காட்டு விலங்குகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தார். எனினும், நண்பர்களுடன் துணிந்து சென்றேன். பாழடைந்த அக்குகையை கண்டுபிடித்து நுழைய, மிக சிரமப்பட்டோம். குகையின் உள்தாழ்வாரத்தில், மலைத் தேனீக்கள் கூடுகட்டி இருந்தன. மிக பழமையான ஓவியங்களை பார்த்த சந்தோஷத்தில், ஆராய்ச்சியை துவக்கினோம். குகையின் தாழ்வாரத்தில், 10க்கும் மேற்பட்ட ஓவியங்கள், தனித் தனி தொகுப்புகளாக சுண்ணாம்பு, மூலிகை, மரப்பிசினால் வரையப்பட்டிருந்தன. இது, சங்ககால தமிழர்கள் வீரத்தையும், காதலையும், இரு கண்களாக நினைத்து வாழ்ந்த அற்புதத்தை பிரதிபலித்தன. இந்த ஓவியத்தை ஆராய்ந்ததில், 2,300 ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டிருக்க வேண்டும் என, கண்டுபிடித்தோம். குகை ஓவியங்கள் கரும்பச்சை, காவி மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும். இதை வைத்தே, காலக்கட்டத்தை தீர்மானிக்கலாம். இக்குகையின் வெள்ளை ஓவியங்கள், தூரிகையால் தீட்டப்பட்டிருந்தன. ஓவியத்தில், அகழி வெட்டி, ஒரு யானையை பிடித்து, பழக்கப்படுத்திய பின், அரசனுக்கு பரிசளித்து, அதில் அவர் மகிழ்ச்சியாக ஊர்வலம் வருவது போன்ற காட்சிகள், கார்ட்டூன் போல, தொடர்ச்சியாக வரையப்பட்டிருந்தன. ஒரு தொல்லியல் ஆய்வாளன் என்ற முறையில், தொன்மையை நேசிக்கும் எனக்கு, 2,300 ஆண்டுகளுக்கு முந்திய நம் முன்னோரின் ஓவியங்கள் பெருமிதத்தை தந்தன.

1 கருத்து: