செவ்வாய், 18 டிசம்பர், 2012

தலைநகரில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு!

தலைநகரில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு!

"நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம்
கிடைத்ததாகச் சொல்ல முடியும்'' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி.
ஆனால் மத்திய, மாநில போலீஸôர் பாதுகாப்பு அதிகம் நிறைந்த நாட்டின் தலைநகரான தில்லியில் இரவில் பெண்கள் தனியாக மட்டுமல்ல, துணையுடன்கூட செல்ல முடியாத  பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது நண்பருடன் பஸ்ஸில் சென்ற கல்லூரி மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இதை நிதர்சனமாக்கியுள்ளது.
பெண் முதல்வரைக் கொண்ட தில்லியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது குறித்து பெண்ணிய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
நாட்டின் தலைநகர் அந்தஸ்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா, வர்த்தகம், கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் வந்து செல்லும் பெருநகராக தில்லி விளங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவம் தங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளதாக, பன்னாட்டு நிறுவனங்கள், வெளியூர்களில் இருந்து தில்லியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் கூறுகின்றனர். 
கடந்த ஆண்டு தில்லி காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தில்லியில் 18 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவமும், 14 மணி நேரத்திற்கு ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதாகவும் நடைபெறுகிறது. 
சில மாதங்களுக்கு முன், கேளிக்கை விடுதியில் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக, கால் சென்டரில் பணியாற்றிய பெண் இரவு நேரத்தில் பணி முடிந்து காரில் வீடு திரும்பிய சமயத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானார். 2010-ம் ஆண்டில் மட்டும், தேசிய தலைநகர் வலயத்தில் 414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாயின.
அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் என்ற அளவில் மோசமான நிலை. நாட்டில் உள்ள 35 பெரிய நகரங்கள் எவற்றிலும் இந்த  அளவுக்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லை.
தில்லியில் ஸ்பெயின், ருவாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக