ஞாயிறு, 18 நவம்பர், 2012

மாற்றுத்திறனாளி செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபடத் தடையா? வீரமணி கண்டனம்

மாற்றுத்திறனாளி செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபடத் தடையா? வீரமணி கண்டனம்

மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில்  ''இறை சன்னதி வரை''  சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது மனித உரிமைக்கு எதிரான போக்கு என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல. அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத்துவங்கள் முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் மதச் சார்பற்ற மற்ற விஷங்களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.
(ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுப்படாத முழு உரிமைகள்(Ansolute rights) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ்வுரிமைகள்.
இந்நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்மந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோவில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் ''இறை சன்னதி வரை''  சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை மனிதநேயத்திற்கும், மனித உரிமைகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும் .
இன்று கோவில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்குகளைப் போடுவதும், பெரிய கோவில்களில் ஏர்கண்டிஷன் அமைத்துள்ளதும், பக்தர்களை மெட்ட டிடெக்டர் வைத்து சோதித்து அனுப்பும் முறையும், திருப்பதி லட்டு, பழனி கோவிலில் இழுவை ரயில் மூலம் கோவிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?
ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறுகின்றனவா?
எல்லா கோவில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?
ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக்கிறதே அதற்கென்ன பதில்?
மாற்றுத்திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள இரிமை மறுக்கப்படக் கூடாது என்ற நியதியின் அடிப்படையிலேயே நான் இதனை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து கேட்கிறேன்.
உடனடியாக பரிகாரம் கிடைக்காவிட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரிசிலித்து நீதி வழங்கிடுமாறு  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுகுறித்து 06.09.2012ல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக