ஞாயிறு, 18 நவம்பர், 2012

புல்லூத்திலிருந்து...கெ.. கல்லுப்பட்டி வரை!

புல்லூத்திலிருந்து... ஜி. கல்லுப்பட்டி வரை!

First Published : 17 November 2012 05:20 PM IST
ஜேம்ஸ் கிம்டன் ஓர் ஆங்கிலேயர். நாடு, இனம், மொழி கடந்து இந்திய நாட்டில், தமிழகத்தில் அதுவும் தென்மேற்குப் பகுதியில் வத்தலகுண்டுக்கு அருகே தேனி மாவட்டத்தில் உள்ள ஜி.கல்லுப்பட்டி என்கிற ஊரில் சேவையின் மூலம் ஒரு கிராமத்தையே உருவாக்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 88 வயதில் 60 ஆண்டு காலம் சேவையையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் அவர் தனது சேவை நிறுவனத்தின் செயல்பாடுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
1925ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் நார்த் வேல்ஸ் கான்வே என்ற ஊரில் சார்லஸ் கிம்டன்-டொரிஸ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். உடன் பிறந்தோர் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. மிக ஏழ்மையான குடும்பம். வாடகை கொடுக்க முடியாததால், வீட்டு உரிமையாளரால் விரட்டியடிக்கப்பட்டோம். பின்னர், அங்கிருந்த மாதா ஆலயத்தின் ஒரு பகுதியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. அந்த ஆலயத்தில் தான் என்னை எனது தாய் பெற்றெடுத்தார். ஆலயத்தில் பிறந்ததன் காரணமாக மரியன்னையின் பீடத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டேன். நான்கு மைல் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து செல்லும் போது கன்னியர் மடத்தில் உள்ள ஆலயத் திருப்பலியில் பீடச் சிறுவனாகக் கலந்து கொள்வது வழக்கம். இதன் காரணமாக துறவற சபையில் சேரும் எண்ணம் தோன்றியது.
14-வது வயதில்  துறவற சபையில் சேர்ந்து பயிற்சியை முடித்த பின் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தேன். 1952-ல் கல்விப் பணிக்காக இலங்கைக்கு சபையிலிருந்து என்னை அனுப்பி வைத்தனர். 1964ஆம் ஆண்டில் குடியுரிமை பெறாதவர்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பிய போது மதுரைக்கு வந்தேன். 1964 முதல் 1974 வரை மதுரை நாகமலை புல்லூத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் 16 மாணவர்களுடன் "பாய்ஸ் டவுன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து, 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தச்சுவேலை, டர்னிங், வெல்டிங், பிட்டிங், விவசாயப் பண்ணை போன்ற தொழில் கல்வியை ஆரம்பித்ததன் மூலம் இன்று வரை பல மாணவர்கள் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் வத்தலகுண்டு அருகே பள்ளி செல்லும் மாணவர்களுக்காக பாய்ஸ் வில்லேஜ் என்ற இல்லத்தை ரூ.2 ஆயிரம் முதலீட்டுடன் தொடங்கினோம். இந்த கிராமத்தில் ஆதரவற்ற 100 மாணவர்களுக்கு மேல் தங்க வைத்து அவர்களைப் பராமரித்து பள்ளிக்கு அனுப்பி வந்தோம். விவசாயத்தில் பல நுணுக்கங்கள் மூலம் திராட்சை, நெல், தென்னை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைத்தது. இந்த வருமானத்தின் மூலம் மாணவர்கள் பராமரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, கல்லுபட்டியில் தொழுநோயாளிகளைப் பராமரிப்பதற்காக புஷ்பராணி மருந்தகம் தொடங்கி தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த பணியாளர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். தொழுநோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது இப் பகுதியில் தொழுநோய் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் "ரீச்சிங் தி அன்ரீச்டு' என்ற தொண்டு நிறுவனம் தோன்றியது.
ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமை இருந்த காலம் அது. இன்று இருப்பதைப் போன்ற மகளிர் சுய உதவிக் குழுவினை 1989 ஆம் ஆண்டில் நாங்கள் அப்போதே ஏற்படுத்தினோம். தற்போது 97 மகளிர் குழுக்கள் மூலம் 1,477 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு பலவிதமான விழிப்புணர்வுகளை வழங்கி, வங்கிக் கடன், நிறுவனத்தின் நிதி ஆதாரம் மூலம் உதவிகள் பல செய்ததன் காரணமாக  இன்று இக் குழுவினர் ரூ.76 லட்சத்தை சேமிப்பாக வைத்துள்ளனர். இதன் மூலம் இப் பகுதியில் கந்து வட்டி என்பது ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் போது அவர்களுக்கு தாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற எண்ணம் மனதில் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான்  "சைல்டு கேர் வில்லேஜ்' என்கிற குழந்தைகள் கிராமம். இதன்படி, ஆதரவற்ற பெண் ஒருவர் ஓர் இல்லத்தின் தலைவி மற்றும் தாயாக இருப்பார். அவரிடம் 8 குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்திடுவோம். ஒரு குழந்தையின் பராமரிப்புக்காக மாதம் ரூ.580 அவருக்கு வழங்கப்படும்.
இந்த இல்லத்தில் குழந்தைகள் அனைவரும் தாயின் அரவணைப்பில் சகோதர, சகோதரிகளாக ஒருதாயின் மக்களாக வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 10 வயதை அடைந்த ஆண் குழந்தை பின்னர் சிறுவர் விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர். பெண் குழந்தைகள் பருவ மாற்றம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால், அந்த தாயின் பராமரிப்பில் 13 வயது வரை இருக்கும். அதன் பின்னர் எங்களது சிறுமியர் விடுதிக்கு அனுப்பப்பட்டு, தனது கல்வியைத் தொடருவார்கள்.
ஒரு கிராமத்தில் 20 குடும்பங்கள் வீதம் 4 கிராமங்களை நாங்கள் பராமரித்து வருகிறோம். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலரும் இதுபோன்ற இல்லத்தில் தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
1980ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படாமல் பெற்றோருக்கு உதவியாக வேலைக்குச் சென்று வந்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பல பெற்றோரிடம் கேட்ட போது, ஒருவர் என் பிள்ளை சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் தருவீர்களா? என்றார். ஒரு குழந்தைக்கு வாரம் ரூ.40 என வருமானத்தை பெற்றோருக்கு தந்து குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக பகல்நேரக் காப்பகம் துவக்கினோம்.
1987-ல் புனித பீட்டர் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மேல்நிலைப் பள்ளி வரையிலான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
8 பால்வாடிகள், 3 பகல்நேரக் காப்பகங்கள், 2 தொடக்கப் பள்ளிகள், 1 நடுநிலை, மேல்நிலை, திறந்தவெளிப் பள்ளிகள், வெவ்வேறு கிராமங்களில் 13 மாலை நேர படிப்பகங்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள 90 அரசுப் பள்ளிகளுக்காக 3 நடமாடும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 3 தையல் பயிற்சி பள்ளிகள் நடத்தி வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக