வியாழன், 22 நவம்பர், 2012

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

First Published : 22 November 2012 01:17 AM IST
கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை சிறப்பு பணிக் குழு அளித்த 17 பரிந்துரைகளும் எந்தெந்த கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்பதை விரிவாக விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அணு உலைக்கு எதிராக ஜி.சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 27) ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இரண்டாவது நாளாக புதன்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் கூறியது:
அணுக்கழிவு மறுசுழற்சி இடம் முடிவாகவில்லை: ""கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக் கழிவுகளை எந்த இடத்தில் மறுசுழற்சி செய்வது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் நிலத்தடி தொட்டி உள்ளது. அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தேக்கிவைத்துக் குளிரூட்டப்படும்.
மறுசுழற்சியிலும் 3 சதவீத கழிவுகள்: பயன்படுத்தப்படும் எரிபொருளில் 97 சதவீதத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, அணுக்கழிவுகள்தான் மறுபயன்பாட்டுக்குரிய அணுவளங்களாகக் கருதப்படுகின்றன. மீதமுள்ள 3 சதவீதக் கழிவுகளை வெளியேற்ற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளோம். ஆரம்ப நிலையில் உள்ள இந்த வகைத் தொழில்நுட்பத்தை இந்தியாதான் உலகிலேயே முதலாவதாக உருவாக்கி வருகிறது.
கல்பாக்கத்தில் அணுக்கழிவு சேமிப்புத் திட்டம்: அணு உலையில் பயன்படுத்தப்படும் நீரைக் குளிரூட்ட பல ஆண்டுகள் ஆகும். அதேபோல் உயர்அழுத்த எரிபொருள் கழிவைத் தேக்கி வைக்கும் வசதி தாராபூர் அணு உலையில் உள்ளது. கல்பாக்கத்தில் அந்த வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம் : சில நாடுகளில் யுரேனிய வளம் அதிகம் உள்ளது. அதனால் மறுசுழற்சி முறையில் அணு எரிபொருளைத் தயாரிக்க அவை ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் யுரேனிய வளம் குறைவு. அதனால்தான் யுரேனியம், புளூட்டோனியம் ஆகியவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம். ஆனால் அதை நேரடியாக அணுப்பிளவு (நியூக்ளியர் ஃபிஷன்) செய்ய முடியாது. "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை உருவாக்க முடியும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தத் சோதனை நடைபெற்று வருகிறது.
2020-ல் 750 டன் மறுசுழற்சி எரிபொருள்:  இந்தியாவில் டிராம்பே அணுமின் நிலையத்தில் ஆண்டுக்கு 60 டன் மறுசுழற்சி எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். தாராபூர், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களில் உயர் அழுத்த நீர் திறன் கொண்ட எரிபொருளை ஆண்டுக்குத் தலா 100 டன் அளவுக்குத் தயாரிக்க முடியும். 2020ஆம் ஆண்டில் நாட்டின் பல இடங்களில் இந்த வசதியை உருவாக்கி 750 டன் மறுசுழற்சி எரிபொருளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ரோஹிங்டன் நாரிமன் வாதிட்டார்.
தெளிவில்லாத திட்டம்: இதையடுத்து மனுதாரர் சுந்தர்ராஜன் சார்பில் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்:
உலகின் எந்த அணு உலையிலும் எரிபொருளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. எரிபொருளை மறுசுழற்சி செய்த பின் அங்கு கழிவுகள் என்னவாகும் என்பதை அணுசக்தித் துறை தெளிவுபடுத்தவில்லை.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இடத்தை ஆணையம் இதுவரை தேர்வு செய்யவில்லை. அந்த இடத்தைக் கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்? அங்கு எவ்வாறு அணுக்கழிவுகள் தேக்கி வைக்கப்படும்? அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்? போன்ற திட்டங்கள் அணுசக்தித் துறையிடம் இல்லை.
கடல் வளம் பாதிக்கப்படும்: கூடங்குளத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆறு உலைகள் செயல்படத் தொடங்கியதும் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் குளிரவைக்க கடல் நீர் பயன்படுத்தப்படும். பின்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4200 கோடி லிட்டர் சுடு நீர் கடலில் கொட்டப்படும்.
கடல் நீர் ஏற்கெனவே 29 டிகிரி வெப்பநிலையில் இருக்கும்போது அணு உலையில் பயன்படுத்தப்பட்ட 7 டிகிரி வெப்பம் கொண்ட நீரைக் கொட்டுவதால் கடல் நீரின் வெப்பநிலை 36 டிகிரியாக அதிகரிக்கும். இதனால் கடல் வளம் பாதிக்கப்படும்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதன் தலைவராக மத்திய அணுசக்தித் துறையின் செயலர்தான் இருக்கிறார். எனவே அணு மின் நிலையங்களைக் கண்காணிக்க செயல் அளவில் தன்னிச்சையான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும்.
"அணுசக்தி ஆணையம் நியமித்த சிறப்புப் பணிக்குழு அளித்த 17 பரிந்துரைகளும் நிறைவேற்றிய பிறகு அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும்' என மத்திய அரசு ஆரம்பத்தில் கூறியது.
ஆனால், சில மாதங்களில் அந்த நிலையை மாற்றிக் கொண்டு முதலில் 6 பரிந்துரைகளையும் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மற்ற பரிந்துரைகளையும் செயல்படுத்துவோம் என இப்போது கூறி வருகிறது. இந்த முரண்பட்ட நிலைக்கு இந்திய அணுசக்தி ஆணையம் அளிக்கும் விளக்கம் ஏற்கும்படி இல்லை'' என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ""அணுசக்தி குழு பரிந்துரைகளின் அமலாக்கம் எந்த அளவில் உள்ளன? அவை எந்தெந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்படும்? அவற்றை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்?'' என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக