புதன், 29 ஜூன், 2011

கருணைத் தொகையல்ல, கழிவுத்தொகை!

முன்பு இந்தக் கருத்தை நானும் தினமணியில் பதிந்திருந்தேன். கட்டுரையாளர் விரிவாக நன்றாகவே எழுதி உள்ளார்.  முகவர்கள் திரட்டித்தரும் தொகை மட்டும் வேண்டும். ஆனால், அவர்களுக்கு உழைப்பிற்குரிய ஊதியத்தைத் தர மாட்டேன் என்னும் முட்டாள்தனமான பிடிவாதத்தில் இருந்து  உரியவர்கள் மாற வேண்டும்.  மக்கள் சேமிப்பிற்கும் நாட்டின் வருவாய்க்கும் பாலமாக உள்ள சிறுசேமிப்பு முகவர்களின் கழிவுத் தொகையைக் குறைக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கருணைத் தொகையல்ல, கமிஷன்!

First Published : 28 Jun 2011 01:19:15 AM IST


சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சில தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் வைப்புநிதி பெற்று, அவற்றைப் பல திட்டங்களில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தில் மக்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறின.இதை நம்பியோருக்குப் பிறகு கிடைத்ததென்னவோ, கோயில் பிரசாதம் போன்ற பங்கீடுதான். அப்போது நடந்தவற்றை யாரும் மறந்துவிட முடியாது. இவையெல்லாம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எதற்கு என்ற கேள்வி எழலாம். காரணம் இருக்கிறது.நம் நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அவற்றை மூட முயற்சிப்பது, ஆள் குறைப்பு செய்வது, தனியாரைப் பங்கேற்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரச்னை ஒருபுறம் என்றால், இப்போது ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளித்துள்ள ஒரு பரிந்துரையும் விவாதத்துக்கு உரியதாக உள்ளது. அதாவது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் முகவர் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதும், குறிப்பிட்ட சில திட்டங்களில் கமிஷன் தொகையை நிறுத்திவிடலாம் என்பதும்தான் அந்தப் பரிந்துரை. காரணம், ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அஞ்சலக சேமிப்புத் திட்டக் கமிஷனாக முகவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அளவு தொடர்ந்து அதிகரித்து, கடந்த நிதியாண்டில் ரூ. 2,400 கோடியாக வழங்கப்பட்டுள்ளது என்பதுதான்.மேலோட்டமாகப் பார்த்தால் இந்தத் தொகை மிக அதிகமாகத்தான் தெரியும். ஆனால், இதன்பின்னால் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் முகவர்களாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பதும், அவர்களின் அன்றாட உழைப்புக்கேற்ப அரசு அளிக்கும் வெகுமதிதான் (மாத ஊதியம் அல்ல) இந்தக் கமிஷன் என்பதும், நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.இந்த 6 லட்சம் முகவர்களும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் குறித்து விளக்கி, இதுவரை 17.5 கோடி மக்களை அஞ்சலகங்களில் சேமிக்க வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அஞ்சலகங்களில் சேமிக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி. அதாவது, 6 லட்சம் முகவர்கள் பல ஆண்டுகளாக உழைத்து, தலா சுமார் ரூ. 60 லட்சம் அளவுக்கு அஞ்சலகங்களுக்கு சேமிப்பைத் தேடித் தந்துள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. இந்த உழைப்புக்குக் கொடுக்கப்படும் சிறிய வெகுமதியைத்தான் ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.குறிப்பாக, அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவர்களாக முடியும். பெண்களிடம் மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றவும் இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆர்.டி. (தொடர் சேமிப்புத் திட்டம்) என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிராமம், நகரம் என வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.அஞ்சலக சேமிப்பில் இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே அதிகபட்சமாக 4 சதவீத கமிஷன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 3 லட்சம் பெண்கள் அஞ்சலக முகவர்களாக உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பெண் முகவர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது இவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதாவது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்சமாக உள்ள 4 சதவீத கமிஷனைப் படிப்படியாக ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, தொடர் சேமிப்புத் திட்டமான ஆர்.டி. போன்றவற்றுக்குக் கமிஷன் தொகையை நிறுத்திவிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம், இந்தச் சேமிப்புத் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் முகவர் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளோடு, இப்போது தனியார் வங்கிகளும் பெருகிவிட்ட நிலையில், அவற்றின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு இடையே, பொதுமக்களிடமிருந்து அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்காக முதலீடுகளைப் பெறுவது சவாலான விஷயம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேநேரத்தில், பொதுமக்கள் முகவர்களைத் தவிர்ப்பதற்கான செயல்பாடுகளில் அஞ்சல் துறையே ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஒரு திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், முகவர் வழியாகச் சென்றால், அதை நாளொன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் பிரித்து, 10 நாள்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், அவர் நேரடியாகச் சென்றால், ஒரே நாளில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இதனால், பொதுமக்கள் தாமாகவே முகவர்களைத் தவிர்க்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒரு சதவீத கமிஷன் (மகளிர் திட்டத்துக்கு மட்டும் 4 சதம்) அடிப்படையிலும், ஆண்டுக்கு ரூ. 2,400 கோடியை முகவர்கள் கமிஷனாகப் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய முதலீடு எவ்வளவாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அதோடு, முகவர்களால் மட்டுமே இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதில்லை என்றால், அவர்களுக்கு ரூ. 2,400 கோடி கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே, அஞ்சலக முகவர்களுக்கு இப்போது வழங்கப்படும் கமிஷன் என்பது உழைப்புக்கேற்ற ஊதியமே.எனவே, அஞ்சலக சேமிப்புத் திட்ட முகவர்களுக்கான கமிஷன் தொகையைக் குறைப்பது அல்லது நிறுத்துவது என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இதன்மூலம், அவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, பொதுமக்களின் முதலீடுகள் தொய்வின்றித் தொடர்ந்து அஞ்சல் துறைக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கருத்துகள்

அஞ்சல் துரை
By avudaiappan
6/28/2011 4:32:00 PM
most of the agents are phemi agents. hence RBI ADVICE IS CORRECT.
By RAJAGOPALAN
6/28/2011 9:33:00 AM
உண்மைதான் சேமிப்பு திட்ட முகவர்களுக்கான கமிஷன்தொகையினை குறைப்பதோ நிறுத்துவதோ ஏற்புடையதல்ல , ஒரு கால கட்டத்தில் அவர்களது உழைப்பினால் தான் அஞ்சலகத்தில் சேமிப்பு சேர்ந்தது .இன்று பலரும் அவர்களாகவே தானே முன் வருகிறார்கள் எண்றால் அந்த பழக்கத்தை விதைத்ததும் அவர்கள் தான் ..முகவர்களுக்கு அஞ்சல் துறை மறைமுகமாக ஒரு குறைந்த தொகையைத் தான் கமிஷன் என்ற பெயரால் வழங்குகிறது ..அவர்களது குடும்பமும் வாழ்கிறது ஓரளவு வேலை இல்லா நிலைமை தவிர்க்கப்படுகிறது ..அவர்கள் வயிற்றில் அடித்து அந்த பாவத்தை ஏற்கவேண்டாம்
By நாகை ஜெகத்ரட்சகன்
6/28/2011 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக