வெள்ளி, 28 ஜனவரி, 2011

Seemaan against grantham: செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! – சீமான் அறிக்கை

கணினித் தமிழ் பயன்பாடு – என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற  குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே ஈடுசெய்வது என்பது உலகெங்கும் உள்ள வழக்கம். எடுத்துக்காட்டாக, தமிழிலுள்ள சிற்ப்பு ஒலியையே எடுத்துக் கொள்ளலாம். தமிழின் சிறப்பு ஒலியான ‘ழ’கரத்தை ஈடுசெய்ய  ஆங்கிலத்தில் கூடுதல் எழுத்தைச் சேர்க்கவில்லை. இசட் – என்கிற ஆங்கில எழுத்து ‘ழ’கரத்தைச் சுட்டப் பயன்படுத்தப் படுகிறது. தமிழில் இவ்வளவு வேறுபாடுகூட இல்லை. எந்த மொழியிலிருக்கும் எந்த தனித்த ஒலியையும் தெளிவாகச் சுட்டத் தேவையான எழுத்துக்கள் தமிழில் உள்ளன. அதற்கு ஓர் உதாரணம் தான் – இசட்.
இந்த உலக நடைமுறையை மறந்துவிட்டு, வழக்கிழந்து போன சமக்கிருத ஒலிகளுக்காக தமிழில் கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் தனித்தன்மைக்கு உலை வைக்கும் முயற்சி. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான கிரந்தத்தை – எழுத்துருவை உருவாக்கும் எந்த முயற்சியும், இந்திய தேசிய இனங்களின் மீதும் மொழிகளின் மீதும் தொடுக்கப்படும் மறைமுகப் போர். இந்தியாவின் பெருமைக்குரிய பன்முகத் தன்மையை இது சீரழித்துவிடும்.
சமக்கிருதம் என்பது வழக்கழிந்துவிட்ட ஒரு மொழி. தேவ பாசை – என்று அதைக் குறிப்பிடுவதிலிருந்தே, அது வாழும் மனிதர்களுக்கான மொழியல்ல என்பது தெளிவாகிறது.   உலக வழக்கிலிருந்து அழிந்து ஒழிந்து சிதைந்தது சமக்கிருதம் – என்பதைத் தன்னுடைய தமிழ்த் தாய் வாழ்த்தில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இந்தி எதிர்ப்பைக் காட்டியே ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம் அந்த வரியை நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தது. சமக்கிருதத்துக்கு சாமரம் வீசும் அப்படியொரு வேலையில் இனிமேல் எவரும் இறங்கவேண்டாம், தமிழைக் கலப்பு மொழியாக்க முயலவேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். வேதங்களைத் தமிழில் படிக்க விரும்புவோருக்காக தனி எழுத்துரு தேவை என்று வாதிடுவது அபத்தமானது. சமக்கிருத மொழி வேதங்களைப் படிக்க விரும்புபவர்கள் அந்த மொழியைக் கற்று அவற்றைப் படிப்பதுதான், அந்த மொழிக்கு செய்கிற மரியாதையாகவும் இருக்கும்.
தனித்த சில ஆங்கில ஒலிகளுக்கு நிகராக தமிழில் சிறப்பு எழுத்து வடிவம் தேவை என்கிற வாதம், 60 ஆண்டுகளுக்கு முன், எழுந்த வேகத்திலேயே அடங்கிவிட்டது. இப்போது கணினியை முன்னிறுத்தி வைக்கப்படும் இந்த வரட்டு வாதமும் விரைவில் அடங்கிவிடும் என்று நம்புகிறோம். முன் வாயில் வழியாக முறைப்படி நுழைய முடியாத நிலையில், பின்வாயில் வழியாக அதை நுழைக்க எவர் முயன்றாலும் நாம் தமிழர் கட்சி உறுதியுடன் எதிர்த்துப் போராடும். ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை முதலில் அழித்துவிடு – என்பது இனவெறியர்களின் கொள்கையாகக் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழருக்கோ இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது. கண்ணெதிரில் இனமும் அழிக்கப் படுகிறது, மறைமுகமாக மொழியையும் அழிக்க முயற்சி நடக்கிறது. இதை எல்லா நிலையிலும் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
சீமான்
நாம்தமிழர் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக