வெள்ளி, 14 ஜனவரி, 2011

andrei sonnaargal: புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் & சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி

natpu பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது    அறிவியலாளர்கள்  சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர்.
1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543)  செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler,   Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன. இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642),  கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து  நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப்பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642இல் வீட்டுச்  சிறையிலேயே உயிரிழந்தார்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி சுற்றுவதை அறிந்து அதன் கால அளவை நாள் என்றும் பூமியைத் திங்கள் (நிலா) சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவைத் திங்கள் (மாதம்) என்றும் பூமி சூரியனைச் சுற்ற ஆகும் கால அளவை ஆண்டு என்றும் குறிப்பிட்டுப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.
சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் வாழ்வு, உழவர்களைச் சுற்றி உள்ளதாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை                               (திருக்குறள் 1031)
என்கிறார். உலவும் பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிடுள்ளனர்!
அறிவியல் வளத்தில் சிறந்திருந்த முன்னோர் வழியில்  (தாய் மொழியாம் தமிழில் கற்று) அறிவியல் வளங்களைக் கண்டறிய இப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்! பொங்கல் சிறக்கட்டும்! அறிவியல் பெருகட்டும்!



சுற்றுப்புற அறிவியலின் முன்னோடி
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் வளர்ந்த துறை சுற்றுப்புற அறிவியல் அல்லது சூழமைவியல் எனலாம். இதன் அடிப்படையே மாசுக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்திச் சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்துவதுதான்.
பழந்தமிழர்கள் சுற்றுப்புறத் தூய்மையில் கருத்து செலுத்தி வந்துள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். புறந்தூய்மை நீரான்அமையும் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதில் இருந்தே புறந்தூய்மை பற்றிய விழிப்புணர்வு அன்றே இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு விழாவே எடுத்துள்ளார்கள் என்பது வியப்பிற்குரிய செய்தியன்றோ? ஆம்! போகித் திருநாளைத்தான் கூறுகிறேன். போகி என்பது போக்கியில் இருந்து வந்தது என்பர். பழைய ஆண்டைப் போக்கிப் புது ஆண்டை வரவேற்க ஆயத்தம் ஆவதாகச சிலர் கூறுவர். பயனற்றவற்றைக் கழித்துப் போக்கிப் புதுப்பூச்சு வீட்டிற்கு ஏற்றி மிகுதியான பயன்பாடில்லாமல் இருந்தவற்றைத் தூய்மையாக்கி,  வீட்டை மெழுகிப் புதிய நலமான சூழலை உருவாக்குவதற்கென்றே விழா எடுத்துக் குடும்பம் குடும்பமாகக் கூட்டம் கூட்டமாக அனைவரும் கொண்டாடியுள்ளனர் என்னும்பொழுது சுற்றுப்புறத் தூய்மையை மரபு வழியில் வழியாக வழியாகப் போற்றியுள்ளனர் என்பதுதானே உண்மை.
அறுவடைத் திருநாளைப் பல நாடுகள் கொண்டாடுகின்றன. ஆனால், அவை யாவும் முந்தைய நாளை அல்லது ஆண்டின் இறுதியை முதன்மையாகக் கருதி போகி அல்லது போக்கி போல் விழாவாகக் கொண்டாடவில்லை என்னும் பொழுதே நம் திருநாள் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புறத் தூய்மையைக் கடைப்பிடிக்க ஏற்பட்ட, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், போகித் திருநாளில் இன்று அதன் அடிப்படை நோக்கத்திற்கு மாறாகத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தும் பொருள்களை எரித்து வருவது முறையற்ற செயலன்றோ?
நம்மில் சிலரோ மாசுக் கட்டுப்பாட்டை மீறும் வகையில்தான் நச்சுப்புகை ஏற்படும் பொருள்களை எரியூட்டுகின்றனர். தண்டித்தேனும் இவர்களைத் திருத்த வேண்டும். ஆனால் ஈழத்திலோ நச்சுக்குண்டுகளால் நம் அருமைத் தமிழ் மக்களையல்லவா எரியூட்டிய கொடுமை நடந்துள்ளது. இவர்களுக்கு யார், எப்பொழுது  தண்டனை தரப்போகிறார்கள்? பழையன போக்கித் திருநாள் கொண்டாடும் பழைய இனத்தைப் போக்கியவர்கள் ஆட்சி உரிமையில் இருந்து போகப்போவது எந்நாளோ?
  • இலக்குவனார் திருவள்ளுவன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக