செவ்வாய், 15 ஜூன், 2010

தேசிய மொழிகள் ப்ல உள்ள நாட்டில் ஒரு மொழி மட்டும் அறிந்தால்தான் பதவி உயர்வு என்ற நிலையை மாற்ற வேண்டும். மாறாக அந்த மொழியைக் கற்காதவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை எனவே, அதனைக் கற்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்தியா வலிவும் பொலிவும் மிக்க நாடாகத் திகழ உடனே இந்தித்திணிப்பைக் கைவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++
"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை

ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும். தென்னிந்தியாவிலிருந்து தான் அதிகமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த இளைஞர்களிடம் தான் சரியான வலு மற்றும் உடற்தகுதி உள்ளது. அதனால் தான் ராமநாதபுரத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராணுவத்துக்கு ஏற்ப எல்லா அமைப்புகள் பெற்றிருந்தும், "இந்தி' மொழி தெரியாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் உயர் பதவியைப் பெற முடிவதில்லை.


ஒவ்வொருவரும் ராணுவத்தில் சேர்ந்த பின்னரே இந்தியை கற்றுக்கொள்கின்றனர். ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை சாதகமாக்கி, சில இடைத்தரகர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்; இதை யாரும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த பாரபட்சமுமின்றி, சரியான வழியில் தான் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்களின் எண்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதில் எந்த சாதகமும் செய்ய வாய்ப்பில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ் கூறினார்.


போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில், அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில், திண்டுக்கலைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், போலியான கல்விச் சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த போலி சான்றிதழ் கொண்டு வந்த சிலர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நடையை கட்ட ஆரம்பித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக