திங்கள், 15 பிப்ரவரி, 2010

நெருங்கி இருக்கவும் மாட்டேன்;​ விலகி இருக்கவும் மாட்டேன்: ரஜினிகாந்த்



சென்னை, ​​ பிப்.​ 14: முதல்வர் கருணாநிதியிடம் நெருங்கி ​ இருக்கவும் மாட்டேன்;​ விலகி இருக்கவும் மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது.திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள்."மாயாபஜார்', ​ "ஜெகன்மோகனி' போன்ற படங்களில் வரும் "செட்'களை விட பிரமாண்டமான "செட்' அமைத்து இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார்.16}ம் நூற்றாண்டில் வாழ்ந்த சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி மறுப்பு,​​ ஆண்}பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதை அறியலாம்.சில இடங்களில் பெரியார் சொல்வதைப் போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​ குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​ அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​ அந்தக் குதிரை போல பயம் அறியாமல் "எங்கள் விழா' என்ற உரிமையுடன் பாராட்டியிருக்கிறோம்.​ ​ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில் முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது.ஜெகத்ரட்சகன் பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்.சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(செüந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.அப்போது என் குடும்பத்தாரிடம் "நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்' என்றேன்.​ "நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?' என வீட்டில் கேட்டனர்.​ தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை கொடுக்கும்போது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என் வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் "அரசன் என்பவன் நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும் கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும் இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றார்.கமல்ஹாசன்இந்த விழாவுக்கு வருவதற்கான அருகதையைப் பற்றி நான் யோசிக்கவில்லை.​ வரவேண்டும் என்ற ஆசை மட்டும்தான் என்னிடம் இருக்கிறது.​ எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை முதல்வர் கருணாநிதியை வியந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்.இதே மேடையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.​ அப்போது அந்தப் படத்தில் நடித்த "அப்பு' வேடத்திலேயே வந்து முதல்வரிடம் பரிசுக் கேடயம் பெற்றேன்.அதைப் பார்த்தவுடன் தான் முதல்வர் என்பதையும் மறந்து "எப்படி இங்கு அப்பு போல வந்தாய்' எனக் கேட்டு ஓர் ஆர்வமுள்ள ரசிகனாக மாறிவிட்டார்.இதற்கு முன்பு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு காட்சி திரையிடப்பட்டது.​ அதைப் பார்த்து குழந்தை போல் அழுதார் முதல்வர்.​ இத்தனை சோதனை,​​ சாதனைக்கு பிறகும் அவருடைய கண்ணீர் வற்றிவிடவில்லை என்பது வியப்பளிக்கிறது.​ முதல்வரின் பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்தில் "நிதி'யும் இருக்கிறது "நதி'யும் இருக்கிறது.​ அந்த அளவுக்குப் பன்முகத்தன்மை கொண்டவர்.தமிழ்ச் சமுதாயம் உள்ளவரை முதல்வர் வாழவேண்டும் என்றார்.மம்முட்டிஞாயிற்றுக்கிழமை ​(பிப்ரவரி 14) உலக காதலர் தினம்.​ தன் வாழ்க்கை முழுவதும் தமிழையே காதலித்த இந்த இனிய தமிழனுக்கு வாழ்த்துகள்.​ தமிழ்,​​ தமிழ்நாடு,​​ மனிதநேயம்,​​ காதல் இவை இருக்கும்வரை முதல்வர் கருணாநிதி நலமாக வாழ வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

இரசினி நன்றாகவே பேசுகிறார். திருக்குறள் எடுத்துக்காட்டு, இனப்பற்றுடன் சர்வக்ஞர் சிலை திறப்பு, எனப் பலவற்றை மனப் பக்குவத்துடன் பேசுகிறார். அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்கள் என நகைச்சுவையாகவும் பேசுகிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/15/2010 2:37:00 AM

அடப்போங்கப்பா!

By ray
2/15/2010 1:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக