திங்கள், 15 பிப்ரவரி, 2010

ரஷ்யாவின் இலங்கையுடனான ஒப்பந்தம்: அடுத்த குளிர்கால போருக்கான ஒத்திகையா?

பதிந்தவர்_வன்னியன் on February 14, 2010
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்

உலகையே தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்ஸியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது. அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது.

சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசு உலகின் பரப்பளவில் கணிசமானதைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய நாடு. இது ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களுடன் கடல் மற்றும் நிலத் தொடர்பை கொண்டது. கனடாவுக்குச் சொந்தமான அலாஸ்கா என்ற மாநிலம் அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. காரணம் சோவியத் ஒன்றியம் அலாஸ்காவைக் கைப்பற்றி பின்னர் அமெரிக்கா மற்றும் கனடாவை தமது பிடியின் கீழ் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற அச்சமே. இப்படியானதொரு வல்லரசு குளிர்காலப் போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்க மற்றும் அதன் தோழமை நாடுகளின் ஆதரவோடு சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசை பிளவுபடுத்தி பல நாடுகளாக பிரிய வைத்து சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசு ரஷ்யா என்ற பெயருடன் அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்தைய நாடுகளிடம் தமது வாழ்வுக்காக கை நீட்ட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

ரஷ்யா இன்னும் பாடம் படிக்கவில்லை போலும்!

ஐரோப்பிய ஏகாதிபத்தியத் தலைவர்கள் குறிப்பாக இத்தாலியை சேர்ந்த முசோலினி, பிரான்சைச் சேர்ந்த நெப்போலியன் மற்றும் யேர்மனியை சேர்ந்த ஹிட்லர் போன்ற தலைவர்கள் முழு ஐரோப்பாவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமது தேசத்தின் ஆளுமையை மற்றவர்க்கு காண்பிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மற்றும் தமது தேசம் மற்றும் தமது நாடுகளை உலகின் எந்த நாட்டிலும் விட உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கும் எடுத்த போர் நடவடிக்கைகள் பல கோடி மக்களை ஐரோப்பா இழந்து பல நாடுகள் அழிக்கப்பட்டன. முசோலினி, நெப்போலியன், ஹிட்லர் போன்ற தலைவர்கள் தமது போர் வெறி முரசை தமது மக்களுடன் பரப்பி ஏகோபித்த ஆதரவைப் பெற்று முடிசூடா மன்னர்களாகவே பார்க்கப்பட்டார்கள். இறுதியில் தமது உயிரை மாய்த்து கொண்டார்கள். தமிழில் முருகன் அரக்கனை அழிக்க சூர சம்ஹாரம் எடுத்து சூரனை பல முனை போர் யுக்தியின் பின்னர் கொலை செய்து தர்மத்தை நிலைநாட்டினார். அதைப் போன்றே ஐரோப்பாவிலும் இடம்பெற்றது.

சோவியத் ஒன்றியம் தர்மத்தின் வழி நின்று போராடி உதவி புரிந்தார்கள். பின்னர் அவர்களை எப்படி எல்லாம் முசோலினி, நெப்போலியன், ஹிட்லர் போன்ற தலைவர்கள் தமது படைப்பலத்தை உபயோகித்தார்களோ அதைப் போன்றே சோவியத் ஒன்றியம் செய்தது குளிர்கால தசாப்தத்தின் போது. சோவியத் ஒன்றியம் தனது இராணுவ ஆதிக்கத்தை நேரடியாக மத்திய, தென் கிழக்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மறைமுகமாக பல நாடுகளில் பல வேலைத்திட்டங்களை செய்ய அதன் பரம எதிரியான அமெரிக்காவோ சோவியத் ஒன்றியத்தின் இராணுவ ஆதிக்கத்தை தடுக்க பல வேலைத் திட்டங்களைப் போட்டு, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு ஆதரவாக இயங்கிய தலிபான் இயக்கத்தை அழிக்க அமெரிக்காவோ அல்கொய்தாவை ஆதரித்து அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து தலிபானை தோற்கடித்து சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை செயலிழக்கச் செய்து அவர்களை ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேற்ற வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் எங்கெங்கெல்லாம் அவர்களின் ஆதிக்கம் இருந்ததோ அங்கெல்லாம் அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான உளவுத்துறையான சி.ஐ.ஏ. மூலமாக பல வேலைத்திட்டங்களைத் தீட்டி சோவியத் ஒன்றியத்தின் ஆளுமையை அடக்கினார்கள். அத்துடன் நின்றுவிடாமல் மேலும் ஒரு படிமேல் சென்று சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசை துண்டாட வைத்து சோவியத் ஒன்றியம் என்ற இராச்சியம் உடைந்து பல நாடுகள் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியமோ தனது பெயரை ரஷ்யா என்று அங்கீகாரம் பெற்றது.

அதன் பின்னர் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் ஆதரவுடன் பலமிழந்த பொருளாதாரம் மீண்டும் உயிர்ப்பெற்றவுடன் குறிப்பாக கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் ரஷ்யா தனது இராணுவ செல்வாக்கை கிழக்கு ஐரோப்பாவில் காண்பித்து அவற்றிலும் கணிசமான வெற்றியையும் பெற்று அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் சிம்மசொப்பனமாக இன்று விளங்கிக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் இந்த போக்கிற்கு முக்கிய காரணம் ரஷ்யா இன்னும் இராணுவ வலிமையை தக்கவைத்துக் கொண்டிருப்பதுவே.

அத்துடன் ரஷ்யா இனிமேலும் அமெரிக்காவையோ அன்றி மேற்கத்தைய நாடுகளையோ பொருளாதார ரீதியாக நம்பவேண்டியதில்லை. காரணம் சீனா மற்றும் இந்தியா, ரஷ்யாவின் பாரம்பரிய நேச நாடுகள். அத்துடன் ரஷ்யாவின் இராணுவ தளபாடங்கள் இன்னும் இவ் நாடுகளினால் பெருமளவில் கொள்வனவு செய்து ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். அடுத்ததாக சீனாவும், இந்தியாவும் இன்றைய உலகின் முக்கிய பொருளாதார நாடுகளாக வளர்ச்சிபெற்று உலகின் பொருளாதார ஒழுங்கை இந்நாடுகள் தம் வசம் பெற்றுள்ளதானது ரஷ்யாவின் அகங்காரத்தை பலமடங்காக உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. ஆக ரஷ்யா தான் பெற்ற பழைய பாடத்தை திரும்பிப் பார்க்கிறார்கள் போல் தெரியவில்லை.

இலங்கை இன்னொரு குளிர்கால போர்க்களமா?

நான்காம் ஈழப் போர் உக்கிரமடைந்த வேளை தமிழருக்கு எதிரான மனித உரிமை நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்ற போது பல மேற்கத்தைய நாடுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு அந்த யுத்தத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்டு அதில் தோல்வியும் கண்டார்கள். பின்னர் இன்னொரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு குறிப்பாக மனித உரிமை அமைப்பின் சார்பில் இலங்கை மனித உரிமை மீறலை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் இலங்கையை உலக மன்றத்தின் முன்நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தரச் செய்த முயற்சிகள் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அதுவும் தோற்றுப்போக பின்னர் மேற்கத்தைய நாடுகள் மகிந்த ராஜபக்சவை எப்படியும் நடந்து முடிந்த தேர்தலில் தோற்கடிக்க எத்தனித்தும் அதிலும் தோல்வியுற்றார்கள்.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா தமக்கு உள்ள செல்வாக்கினால் பல நடவடிக்கைகளைத் தடுத்தி நிறுத்தினார்கள். இவர்கள் அனைவரினதும் ஆதரவின்றி உலகத்தில் இராணுவத் தலையீட்டை செய்ய முடியாது. உதாரணத்திற்கு, அமெரிக்கா தன்னிச்சையாக இந்த சபையின் ஆதரவின்றியே ஈராக் மீது படையெடுத்தது. இந்த சம்பவமானது ஐக்கிய நாட்டின் ஸ்திரத்தன்மையையே கேள்விக்குறியாக்கியது. அதைப் போன்றதொரு நிகழ்வை நிச்சயம் அமெரிக்கா இலங்கையில் மேற்கொள்ள தயாராகவில்லை. அவர்களுக்கு அவசியமும் இருந்திருக்கவில்லை.

ஆக மேற்கத்தைய நாடுகள் பல தடவைகள் இலங்கை, சீனா, இந்திய மற்றும் ரஷ்யாவினால் மூக்குடைபட்டார்கள் என்பது தான் உண்மை. இவற்றை நிச்சயம் இந்த நாடுகள் எளிதில் மறக்கவும் மாட்டார்கள். இப்படியானதொரு காலகட்டத்தில், குறிப்பாக ஜனவரி 26, 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி சூடிய மகிந்த, இரு வாரத்திற்குள் மூன்று நாள் பயணமாக பெப்ரவரி 6, 2010 அன்று தன் முக்கிய அமைச்சர்களுடன் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோ புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது அவர் ஒரு ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் மேற்கொண்டார். அதாவது இந்த ஒப்பந்த நகலின்படி ரஷ்யாவுடன் 30 கோடி அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுத ஒப்பந்தம்.

இக்காலகட்டத்தில் இந்த ஒப்பந்தமானது ஒரு முக்கியமானதொன்று. காரணம் மகிந்த அரசினால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து விட்டதாகவும் தனது அடுத்த பணி தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் பேசும் மக்களிடம் நல்லதொரு உறவை வளர்த்து சீனாவில் எப்படி பொருளாதாரம் முன்னோக்கியுள்ளதோ அதைப்போன்றதொரு பொருளாதரத்தை இலங்கையிலும் கட்டி எழுப்புவதென்று கூறினார். 2009ம் ஆண்டுக்கான இலங்கையின் பாதுகாப்பு செலவீனங்கள் 175 கோடி டாலர்களாக அதிகரிக்கப்பட்டது. அப்படியானால் 2010ம் ஆண்டின் முற்பகுதியிலே 30 கோடி டாலர்கள் ரஷ்யாவில் நடைபெற்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்படுகின்றது. இன்னும் எத்தனை நூறு கோடி ஆயுதங்களை சீனா, பாகிஸ்தான், இந்தியா, ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பது தான் பலரிடத்தில் உள்ள ஐயம்.

இவ்வளவு முஸ்தீபும் எதற்காக இப்பொழுது என்பது தான் நம்மில் பலரின் கேள்வி. மகிந்தவின் காய் நகர்த்தல்கள் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. முக்கிய சந்தேகங்களில் ஒன்று என்னவென்றால் ரஷ்யா இந்தியப் பெருங்கடலில் அண்மித்திருக்கும் நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்து இருக்கவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த பிராந்தியத்தில் தமது செல்வாக்கை வைத்திருந்தார்கள். காரணம் அவர்கள் இன்றும் தமது கடற்படைகளை பல நாடுகளில் வைத்துள்ளார்கள். அடுத்து அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் இன்று பல நாடுகளில் தமது நேரடி இராணுவ நடவடிக்கைகளையும் மற்றும் மறைமுகமாக பல இராணுவ தந்திரோபாய வேலைகளை இந்த பிராந்தியத்தில் வைத்துள்ளார்கள்.

அத்துடன் சீனாவோ தனது செல்வாக்கை தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால் சென்று குறிப்பாக இந்தியாவை அண்டிய கடற்பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துள்ளார்கள். இந்த நிலையில் ரஷ்யாவும் இலங்கையை நெருங்கிய நட்பு நாடாகத் தேர்ந்தெடுத்து அதற்கு ஆயுத விநியோகங்களை குறிப்பாக புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர் அளித்திருப்பதானது நிச்சயம் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகளின் கசப்புணர்வை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பது மட்டும் திண்ணம். பலரின் சந்தேகம் என்னவென்றால் இந்த நாடுகள் எப்படி இலங்கை, சீனா, ரஷ்ய கூட்டு நடவடிக்கைகளை எதிர்கொண்டு ஒரு சமபலத்தை அந்தப் பிராந்தியத்தில் கொண்டு வருவது என்பது நிச்சயம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ஏற்கனவே சிந்தித்து நடவடிக்கை எடுக்க முனைந்துகொண்டு இருக்கும் என்பது மட்டும் உண்மை.
எப்படி தலிபானை தோற்கடிக்க அல்கொய்தாவை அமெரிக்கா பாவித்து அதிலும் வெற்றி கண்டதோ அதே பாணியிலான வேலைத்திட்டங்களை நிச்சயம் இலங்கையிலும் அமெரிக்காவின் உளவுத்துறை வேலைத்திட்டங்களை தீட்டி அதற்கு உயிர் ஊட்டுவதற்கு ஒன்றும் பல காலம் தேவைப்படாது. ஆனாலும் இது சாத்தியமா என்பது தான் பலரிடையே உள்ள கேள்வி.

விடுதலைப்புலிகளை அழித்து அதன் தலைவரை எரித்து நந்திக்கடலில் சாம்பலை கரைத்துவிட்டதாக மார்தட்டும் சிங்கள தலைமை சிவப்பு துவாய் சாத்தி தன்னை ஒரு மார்க்சிஸ்ட்வாதி என்ற மமதையில் உலா வரும் மகிந்த அந்த கொள்கையுடைய ரஷ்யா மற்றும் சீனாவுடன் உறவை நெருக்கி இரண்டாவது முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ரஷ்யாவிற்கு பயணமாகி திரும்பியிருப்பதானது அவர் மேற்குலகத்தின் மீதும் அமெரிக்கா மீதும் கரி பூசியுள்ளார் என்பது தான் மறைக்கமுடியாத உண்மை.

எது எப்படியாயினும் இலங்கை, ரஷ்யாவின் இராணுவத் தொடர்பைப் பேணுவார்களாயின் நிச்சயம் இலங்கை மற்றொரு குளிர்கால யுத்தக்களமாக மாறி, அமெரிக்காவின் நீண்ட நாள் வியூகமான அதாவது சீனாவை தனது கைவசம் கொண்டு வந்து வட கொரியா சர்வாதிகார ஆட்சியை நடாத்தும் அரசாங்கத்தையும் அதன் அணு ஆயுத செயற்பாடுகளையும் மற்றும் வட கொரியாவின் சவாலையும் அடக்கி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்தியப் பெருங்கடலிலும் அதன் அண்டிய நாடுகளையும் தமக்கு சார்பானதாக கொண்டு வர எந்த விலையும் கொடுக்க முன்வருவார்கள் என்பதை மட்டும் நிராகரிக்க முடியாது. இதற்கு ராஜபக்ச ஒரு உந்துசக்தியாக இருக்கின்றார்.

எதற்கு மகிந்தவிற்கு கலாநிதிப் பட்டம்?

ஒரு வழக்கறிஞரான மகிந்த பல கலாநிதிப் பட்டங்களை தன் வசம் வைத்துள்ளார். இவர் இதனைப் படித்து ஒன்றும் பெறவேயில்லை. இப்படிப்பட்ட கலாச்சாரம் ஆசியாவில் தொடர் நிகழ்ச்சியாகவே இருக்கின்றது. ஒருவர் பொருளாதாரத்திலோ, அரசியலிலோ, பொது வாழ்க்கையிலோ உயர்ந்தால் அல்லது ஏன் பணம் படித்தோர் பல்கலைக் கழகங்களுக்கு பணம் கொடுத்து இப்படிப்பட்ட பட்டங்களை பெற்று தமது பெயரின் முன்னால் தாம் கலாநிதி என்றோ அல்லது டாக்டர் என்றோ சொல்லி சமுகத்தில் தாம் ஏதோ படித்த மேதாவிகள் என்று காண்பித்து தமது கல்வியால் பெற முடியாதென்ற ஆதங்கத்தை தமது வாழ்நாளில் பெறுகின்றார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பல மேற்கத்தைய நாடுகளில் நடைபெற்றாலும் வருடத்தில் ஒரு குறிப்பிட்டவர்களே தெரிவாகின்றார்கள். குறிப்பாக கனடியப் பல்கலைக்கழகம் கடந்த சில வருடம் முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்சிற்கு கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுத்தார்கள். பல எதிர்ப்புகளுக்குப் பின்னர் அவருக்கு அளிக்க இருந்த அந்த கலாநிதி பட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் மகிந்த பெற்ற கலாநிதி பட்டம் ரஷ்யாவின் பலகலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

மகிந்த மொஸ்கோ சென்றவுடன் கிரெம்ளின் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் 50 ஆண்டு விழாவில் வைத்து கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பலரிடையே உள்ள சந்தேகம் என்னவென்றால் மகிந்தவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த கௌரவம் எதற்காக? இவர் தனது ஆட்சியில் மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு யுத்தத்தை நடாத்தி பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று, தமிழரின் சொத்துக்கள், கலாச்சார விழுமியங்களை அழித்து பல லட்சம் தமிழரை தங்களது தாயகத்திலே அகதிகளாக்கி சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தி வரும் இந்த பேரினவாத தலைவருக்கு இந்த பல்கலைக்கழகத்தினால் அளிக்கப்பட்டிருக்கும் கௌரவமானது நிச்சயம் தமிழரின் நெஞ்சில் ஏவிய அம்பு போன்றதான செயல். காரணம் இந்த உலகப் பல்கலைக்கழகம் மகிந்த செய்த அட்டூழியங்களுக்கு அளித்திருக்கும் பரிசாகவே இந்தப் பட்டத்தை நாம் கருத வேண்டும். அத்துடன் இவர்களைப் போன்ற அரச தலைவர்கள் பல அட்டூழியங்களை தொடந்து செய்வதற்கு அங்கீகாரம் அளிப்பது போன்றதாகவே கருத வேண்டிவரும்.

அத்துடன் இப்பட்டமளிப்பானது ரஷ்ய அரச ஆதரவோடு இடம்பெற்றிருப்பது நிச்சயம் ரஷ்யாவின் தமிழர் விரோத கொள்கையை எடுத்தியம்பி நிற்கின்றது. தமிழினம் கண்டிராத பேரவலத்திற்கு ஆயுதத்தை விநியோகம் செய்து தமிழரை அழிக்க உதவிய ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பல நாடுகள் தங்களின் தொடர் ஆதரவினால் நிச்சயம் இலங்கை எஞ்சியிருக்கும் ஈழத் தமிழரின் வாழ்வாதாரத்தையும் அழிக்க வழிகோலும் என்பது தான் உண்மை.

நம் முன்னோர்கள் கூறியது போன்று நாரதரின் கலகச் செயல் நிச்சயம் ஒரு விடிவைத் தரும் என்று கருதி நாளை நமதே என்ற நம்பிக்கையுடம் பயணிப்போமாக. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எப்படி ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான இராணுவ ஒப்பந்தத்தையும் மற்றும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் கையாள்வார்கள் என்பது தான் இப்போ நம் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி.

எது எப்படியாயினும் இப்படியான சம்பவங்கள் நிச்சயம் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகளை விழிப்படையச் செய்யும் என்பது மட்டும் உண்மை. ஆக இலங்கை இன்னொரு குளிர்காலப் போருக்கு வழி வகுத்துக் கொடுக்குமா அல்லது கேந்திர முக்கியத்துவமான இலங்கைத் தீவு குறிப்பாக தமிழ் ஈழத்தின் தலைநகரான திருகோணமலையை யார் வந்து போனாலென்ன நாம் உலக சட்ட வரைமுறையின் கீழ் கரையில் இருந்து 500 மைலுக்கு அப்பால் பயணித்தால் யாவரும் நலம் என்ற பாணியில் அமெரிக்கா மற்றும் உலக சக்திகள் இருக்குமா என்பது தான் நம்மில் பலருக்குள் எழும் சந்தேகம்.

ஈழத் தமிழரின் தாயகப் பூமியையும் அவர்களின் கடல் வளத்தையும் யாராலும் அசட்டை பண்ண முடியாது காரணம் பல ஆயிரம் கப்பல்கள் இந்த பகுதியைத் தாண்டித் தான் செல்கின்றன. உலக சக்திகளின் ஒரே கவலை யாரை நம்பி முதலிடுவதென்பது காரணம் இந்த உலக மக்கள் இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தையே நம்பி வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே ரஷ்யா இலங்கையை நம்பி முதலீடு செய்துள்ளது. ஆக ஈழத் தமிழினம் யாரை நம்பி முதலீடு செய்வது என்பது தெரியாமல் ஒரு திரிசங்கு நிலையிலுள்ளது.

எது எப்படியாயினும் தமிழரின் தாகம் தமிழ் ஈழத் சுதந்திரத் தாயகம் பிறந்தால் எம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

— அனலை நிதிஸ் ச. குமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக