ஞாயிறு, 18 அக்டோபர், 2009

"ஹலோ...' என்று மழலைகூட கொஞ்சி பேசும் அளவிற்கு மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நல்லதோ, கெட்டதோ எந்த விஷயம் என்றாலும், உடனுக்குடன் தொடர்புக் கொள்ள உதவும் "மீடியேட்டராக' உள்ளது. இன்று ரோட்டில் குப்பை பொறுக்குபவர் கூட மொபைல் வைத்துள்ளார். இது அந்தஸ்தின் அடையாளம் அல்ல. இன்றைய வாழ்வின் அவசியம். ஆனால் மொபைல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்ன பாதிப்புகள்?



மதுரை மூளை நரம்பியல் டாக்டர் வி.நாகராஜன் கூறுகிறார் :மொபைல் போன் நல்லதா, கெட்டதா என விவாதங்கள் நடந்தாலும், அதன் பலன் முழுமையாக இதுவரை தெரியவில்லை. விஞ்ஞான ரீதியாக மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது என எவரும் கூறவில்லை. ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டால், அது மொபைல் போனால்தான் வந்ததாக கருதுகின்றனர். உண்மையில் மூளைக்கும், மொபைல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நரம்புகள் பாதிக்கும் என்கின்றனர். அதுவும் ஆதாரப்பூர்வமாக இல்லை. தினமும் 20 மணி நேரமும் மொபைல் போனுடன் பேசும் 150 பேரை நான் ஆய்வு செய்ததில், மூளையில் இருந்து வரும் சக்தி எந்தவிதத்திலும் மாறுபடவில்லை. மொபைல் போனிலிருந்து வரும் மின்காந்த அலைகள் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. தரமற்ற மொபைல் போன்களால் பாதிப்பு வரலாம்.



மொபைல் போனை இடுப்பில் வைத்தால் உயிரணுக்கள் குறையும், சட்டையில் வைத்தால் மாரடைப்பு வரும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் என்ற தகவல்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் மொபைல் போன் டவர்களின் மின்காந்த அலைகளால் பாதிப்பு வரலாம். அருகில் உள்ள பசுமைகள் பாதிக்கலாம். இந்த மின்காந்த அலைகளுக்கு சர்வதேச கட்டுப்பாடு உண்டு. சில மொபைல் போன் நிறுவனங்கள் இதை மதிப்பதில்லை. மொபைல் போனில் எந்த நேரத்தில் என்ன தகவல்கள் வரும் என்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதே சிந்தனையுடன் இருப்பதால் மூளைக்கு ஓய்வு ஏற்படுவதில்லை. இதுவே மனநோய்க்கு காரணமாகிறது. அளவுடன் பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை.சிலர் மொபைல் போன் சூடாகும் வரை பேசுகிறார்கள். இது காதினுள் தூசி செல்வதை தடுக்கும் நுண்ணிய ரோமகால்கள் கருக காரணமாகிறது. பின் காது கருப்பாக மாறி அரிப்பு ஏற்படுவதோடு, ஜவ்வும் பாதிக்கும்.



மொபைல் போன் மூலம் ஏற்படும் மனஉளைச்சலிருந்து காத்துக்கொள்ள சில "டிப்ஸ்' :எப்போதும் போனும், கையுமாக இருப்பதை தவிர்க்கவும். மொபைல் போன் ஸ்பீக்கர் போட்டு காதில் வைக்காமல் பேசவும். தேவையில்லாத நேரங்களில் "சுவிட்ச் ஆப்' செய்யவும். வெளியூர் அல்லது தனிமையை நாடிச் செல்லும்போது, குடும்பத்தினர் அவசரம் கருதி தொடர்புக் கொள்ள புதிய சிம் கார்டு எண்ணை கொடுக்கலாம். பள்ளி மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.



தேவையெனில் பள்ளிக்கே போன் செய்து பெற்றோர் பேசலாம். மொபைல் போனில் திரைக்காட்சி பார்ப்பதால் கண் தசைகள் பாரமாகி, கண் வலி ஏற்படுகிறது. கழுத்திற்கும், தோள்பட்டைக்கும் இடையே மொபைல் போனை சொருகி பேசுவதால், கழுத்து நரம்பு பாதிப்பதோடு, குருத்தெலும்பும் விலகி விடுகிறது. மொபைல் போனை இடுப்பில் வைத்து தூங்கினால், திரும்பி படுக்கும்போது விலா எலும்பு பாதிக்கும். குறிப்பாக மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டிருக்கும்போதே பேசினால், "ஷாக்' ஏற்பட்டோ, வெடித்தோ உயிரிழப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக