செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ஈழத் தமிழர் மறுவாழ்வுக்கு விரைவான நடவடிக்கை:
இந்தியா மீண்டும் வலியுறுத்தல்



கொழும்பு, ஆக. 17: ஈழத் தமிழர் மறுவாழ்வுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்குவதற்காக ரூ. 14.4 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பொருள்களை கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் உள்ள பிரதிநிதி புக்கன்னிடம் இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாத் மூலம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அப்போது பேசிய அலோக் பிரசாத், "இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். இந்தியா இதில் உறுதியாக உள்ளது. வடபகுதியில் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள தமிழர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிவாரணப் பொருள்களை இந்தியா அளித்துள்ளது. தற்போது சுமார் 80 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராகவுள்ளது' என்றார். மளிகைப் பொருள்கள், உடைகள், காலணி, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை இந்த முறை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

3 இலட்சம் பேர் முகாம்களில் உள்ளதாக முதலில் கூறிய சிங்கள அரசு தனிப்பட்ட கவனிப்பில் கொல்லப்பட்டவர்களைக் கழித்து 2.50 இலட்சம் எனப் பினன்னர் கூறியது. அறிவாளி இந்தியாவோ இன்னும் உயிரிழக்கப் போகிறவர்களையும் கழித்து 80.000 பேர் என்கின்றது. சிங்கள அரசின் கருணையால் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டடோர்க்கே இந்த உதவிகள என்பதன் மூலம் வதைமுகாம்களில் சிதைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து இருப்பவர்களுக்கு அல்ல என்று சிங்கள அரசுடனான உடன்போக்கு எண்ணத்தையும் வெளியிட்டு விட்டது. தற்போதைய சிங்கள அரசும் காங்.அரசும் இருக்கும்வரை ஈழத்தமிழர்களுக்கு விடிவு ஏது? வாழ்வுதான் ஏது? பாவம் அவர்கள்! மனித நேயமே நீ உலக மக்களிடம் குடி கொள்ள மாட்டாயா? ஈழத்தமிழர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்த மாட்டாயா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/18/2009 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக