புதன், 19 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும்


 



(தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை தொடர்ச்சி)

கீழடியும் தென்முடியனூரும்

மதுரையிலிருந்து  12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு நெசவு கைவினைத் தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நுழைய நீண்ட காலமாகவே பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாகவே அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

15 நிமிட ஒலி-ஒளி காட்சியகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி, 2 நிமிட அசைவூட்டக் காணொளி (அனிமேசன் வீடியோ) காட்சி ஆகியவையும் இந்தக் கூடங்களில் இடம்பெற்றுள்ளன.

வட்டார வளர்ச்சி அலுவலர் இருதரப்புச் சார்பாளர்களிடமும் சனவரி 25  அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் சனவரி 30 அன்று பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கீழடி அருங்காட்சியகத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனித்துவமான கலைப் பொருட்கள் உள்ளன. இவை 2018  முதல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழ்வாய்வின் 4ஆம், 8ஆம் கட்டங்களுக்கிடையே தோண்டி எடுக்கப்பட்டவை ஆகும்.

தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயில் நுழைவின் போது மாவட்ட ஆட்சியர் தொடங்கிப் பலரும் மரியாதையுடன் முன்னிறுத்தப்பட்டனர். அனால் அந்நிகழ்வுக்குப் பிந்தைய விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் துணை நின்றார்களா என்பது கேள்விக்கு உரியதாகி விட்டது.

கீழடி அகழாய்வுகள் சங்கக் காலத்தைப் பொது ஊழிக்கு முன் 300க்கும் பொது ஊழி 300க்கும் இடைப்பட்ட காலம் என்பதிலிருந்து பொது ஊழிக்கு முன் 6 ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளி விட்டன.

“ஆதிக்கச் சாதியினர் இந்தக் கோயில் நுழைவை எதிர்க்கின்றார்கள், நாங்கள் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளோம்; அசம்பாவிதம் நடந்தால் சட்டம் தன்கடமையைச் செய்யும்” எனக் காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது.

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்களை வழிநடத்திய கண்காணிப்பு அகழாய்வாளர் கே. அமர்நாத்து இராமகிருட்டிணா அண்மையில் இந்திய அகழாய்வுத் துறைக்கு அளித்துள்ள அறிக்கை சங்கக் காலம் பொது ஊழிக்கு முன் 800 ஆண்டுகள் என்று கூறியுள்ளார்.

கோயில் நுழைவில் பங்கெடுத்த பட்டியலின மக்கள் மிரட்டப்பட்டனர். ஒரு பெண்ணின் பெட்டிக் கடை கொளுத்தப்பட்டது.

அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தொல்பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் நின்று தற்படம்(செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.  

நிகழ்விடத்தைப் பார்வையிட்ட காவல் துறையினர் ‘புகார் தரப்படவில்லை’ எனும் காரணத்தைச் சொல்லி முதலில் வழக்குப் பதிவு செய்யவில்லை. பிறகு பதியப்பட்ட வழக்கு பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யபப்பட வில்லை. இதை விடக் கொடுமையாகப், பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடுக்கும் வகையில் ஆதிக்கச் சாதியினர் தங்கள் கடைகளை மூடியுள்ளனர். பட்டியலின மக்களிடமிருந்து பால் கொள்முதல் போன்ற வருத்தகத் தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். வேளாண் நிலங்களுக்கான தண்ணீரையும் தடுத்துள்ளனர்.  

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 120

தோழர் தியாகு எழுதுகிறார் 149 : அஞ்சலட்டை

      16 July 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார்  148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி)

அஞ்சலட்டை

இனிய அன்பர்களே!

‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்:

“செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.”

இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம் விரித்தெழுதினால் சுசி பிறந்த கதை தெரிய வரும். அப்போது 1992-93 காலம். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘என்சிபிஎச் சு’ தலைமையகத்தில் மூலதனம் தமிழாக்கம் சீர்மைப் பணியில் ஈடுபட்டிருந்தேன். சாந்தாராம், மணிகண்டன் (?), ஆமீனா ஆகியோர் என் உதவியாளர்கள். மாலையில் மட்டும் இரா. கிருட்டிணையா வந்து போவார். அப்போது சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். பாண்டி என் சிறை நண்பர். அது பற்றி சுசி-இல் எழுதியுள்ளேன். பாண்டிக்காகவும் சௌபாவின் ஈர்ப்பான எழுத்துக்காகவும் தொடர்ந்து சூவியில் அந்தத் தொடரைப் படிக்கலானேன். பாண்டி சிறைப்படக் காரணமாய் இருந்த வழக்கு குறித்து எனக்கே தெரியாத செய்திகளையெல்லாம் சௌபா எழுதியிருக்கக் கண்டு வியந்து போனேன். சுவைபடப் போய்க் கொண்டிருந்த கதையில் சிறைக் கட்டம் வரட்டும் என ஆவலாகக் காத்திருந்தேன். பாண்டி சிறையிலிருந்து தப்பிய கதை எனக்கு முழுமையாகத் தெரியும். சௌபாவால் இதை எப்படிச் சொல்ல முடிகிறது? என்று பார்க்க என்று ஆவலாகக் காத்திருந்தேன்.

 திருச்சிராப்பள்ளியிலும் கடலூரிலும் பல்லாண்டுக் காலம் என்னோடு சிறையிலிருந்த ஒரு தோழர் விடுதலைக்குப் பின் சென்னை வந்து ஒரு பாத்திரக் கடையிலும் பாத்திரக் கடை உரிமையாளருக்குச் சொந்தமான திருமண மாளிகையிலும் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் கருணாநிதி. அவர், அண்ணன் சிவப்பிரகாசம், அப்பா ஆகிய மூவரும் ஒரே கொலைவழக்கில் வாழ்நாள் (ஆயுள்) சிறைத்தண்டனை பெற்று வந்தார்கள். அவர்கள் முடிதிருத்தத் தொழிலாளர்கள். சிறையிலும் அதே வேலைதான்.

 கருணாநிதியை நண்பர்கள் “கலைஞர்” என்று அழைப்பது வழக்கமாயிற்று. நான் மட்டும் கருணா என்றுதான் அழைப்பேன். கலைஞர் என்று விளித்து இருவரையும் அவமதிக்க வேண்டாமே என்பேன். கருணா பற்றிச் சொல்ல வேண்டியவை நிறைய உண்டு, சொல்வேன்.

இப்போதைக்கு… 1992-93 காலத்தில் நான் அம்பத்தூரில் ‘என்சிபிஎச்சு’ அலுவலகத்தில் ஒரு புத்தகக் கிடங்கு போன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து மூலதனம் சீர்மைப் பணி செய்து கொண்டிருந்த போது, சூனியர் விகடனில் சௌபா ‘சீவலப்பேரி பாண்டி’ தொடர் எழுதிக் கொண்டிருந்த போது, கலைஞர் என்னும் கருணாநிதி என்னும் கருணா  அடிக்கடி என்னை வந்து பார்த்துப் போய்க்கொண்டிருந்தார். இருவரும் சௌபாவின் தொடர் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்போம். சூவி கடைக்கு வந்ததும் அதை எனக்கு வாங்கி வருவதே கருணாவாகத்தான் இருக்கும்.

சீவலப்பேரி பாண்டி கதையில் அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் செய்தியை சௌபா முழுக்கக் கற்பனையாக எழுதியிருப்பது தெரிந்து விட்டது. இதை நான் கருணாநிதியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர் அஞ்சலட்டையில் இந்தச் செய்தியை சூவிக்கு எழுதிப் போட்டு விட்டார். “பாண்டி பற்றி எங்கள் தோழர் தியாகுவிடம் கேட்டு எழுதுங்கள்” என்றும் எழுதி விட்டார். இதற்கு மேல் எதுவும் நடக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.

அப்போதெல்லாம் இயக்கப் பணிக்காக அடிக்கடி மதுரை போய் வருவதுண்டு. அந்த முறை மு.கருப்பையாவின் அறைக்கே சௌபா வந்து விட்டார்: “பாண்டி தப்பியமை பற்றி நான் எழுதியது கற்பனைதான். வேறு வழியில்லை. அந்தக் காவல் நிலையத்தில் ஏதோ எழுதி வைத்திருந்தான். அதை வைத்து நான் சமாளித்தேன். ஆனால் விகடன் ஆசிரியர் “தியாகுவிடம் கேட்டு உண்மையை எழுதிப் போடு” என்கிறார்.”

“சரி, நான் என்ன செய்யட்டும்?”

சூவியில் இந்தத் தொடர் முடிந்த பின் விரிவான கடிதம் எழுதுங்கள். அவர்கள் அதை அப்படியே வெளியிடுவார்கள்.”

 அப்படியே அப்போது கருணா உடனிருந்து தூண்ட நானும் செய்தேன். அடுத்த இதழில் அது அப்படியே வெளிவந்தது. அத்துடன் இதையெல்லாம் மறந்து விட்டு மற்ற வேலைகளில் மூழ்கி விட்டேன். சில நாள் கழித்து விகடனிலிருந்து எனக்கு ஓர் அஞ்சலட்டை வந்தது: “ஆசிரியர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.”

 அவசரமில்லாமல் மெதுவாக ஒருநாள் போனேன். உதவி ஆசிரியர் இராவு என்னைப் பார்த்தார். “நீங்கள் சூவியில் எழுத வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். சரி என்றால் உங்கள் விருப்பம்போல் ஒரு தலைப்பில் தொடர்ந்து எழுதுங்கள்.” 

 “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? சின்னக் குத்தூசி சொன்னாரா?”

 “இல்லை, நீங்கள் எழுதிய ஒரு கடிதம் போதும் உங்களைத் தெரிந்து கொள்ள. வாசன் அவர்களுக்குப் புதுமைப்பித்தனைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய ஒரே அஞ்சலட்டை போதுமானதாக இருந்தது, தெரியுமா?”

“சரி, நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்கள்?”

“இரண்டு யோசனை உண்டு.”

“இரண்டில் எது வேண்டுமானாலும் எழுதுங்கள். அதற்கு முன் ஆசிரியரைப் பார்த்து விடுங்கள்.”

ஆசிரியர் பாலசுப்பிரமணியம் எனக்கு ஓர் உறுதி கொடுத்தார்.

நாளை சொல்கிறேன்…

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 119

செவ்வாய், 18 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!

 




(தோழர்தியாகுஎழுதுகிறார்  147 : வேண்டும்உரோகித்துசட்டம் –  தொடர்ச்சி)

சுசி, கவெ: அரசியல் உயிர்!

இனிய அன்பர்களே!

அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு உரையாற்றியவர் அன்பு நண்பர் சாம்ராசு. தலைவர் மேடையிலோ எதிரில் முன்வரிசையிலோ உட்கார்ந்து கொண்டு தமக்கான புகழுரைகளை மெய்ம்மறந்து கேட்டு மகிழ்ந்து போவதும், அடுத்தடுத்த புகழுரையாளர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சப் போட்டியிடுவதுமான காட்சி தமிழ்நாட்டில் புதிதோ அரிதோ அன்று. இந்தத் தலைவர்களை “மனநோயாளிகள்” என்றுதான் மற்றத் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். ஒருநாளும் அந்த மன நோயாளிகளில் ஒருவனாகி விடக் கூடாது என்ற எச்ச்சரிக்கை உணர்வு எனக்குண்டு.

நற்றுணை மேடையில் என் அரசியல், இலக்கியம், பேச்சு எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். நானும் மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் எழுதியதாகச் சொல்லி சிலவற்றைப் படித்துக் காட்டினார்கள். இதையெல்லாம் நாம்தான் எழுதினோமா? என்று எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு காரணம்: எழுதி நீண்ட நாளாகி விட்டது. இன்னும் முக்கியமான காரணம்: குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே அப்படி எழுத வரும். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், ஏதோ இடம் பொருள் ஏவலில் உங்களிடமிருந்து இயல்பாக வெளிப்பட்ட சொற்களை வேறொரு சூழலில் செயற்கையாகப் பேச உங்களுக்கு வராது.

சுவருக்குள் சித்திரங்கள்’, ‘கம்பிக்குள் வெளிச்சங்களில்’ அழகு உண்டானால் அது உண்மையின் அழகுதான். அதன் அழகியல் கொள்கை என்பது வாசகருக்காக எழுதுவதுதான்! வாசகரின் கோணத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பார்த்து பழகிய நடைதான்!

நான் தமிழ் நடை பழக எனக்குப் பெரிதும் உதவியவர்களில் ஒருவர் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்பட்டுள்ள இரா. கிருட்டிணையா அவர்கள். அவர்தான் ‘மூலதனம்’ தமிழாக்கத்தின் பதிப்பாசிரியர். ஏழாண்டு காலம் என் அருகில் அமர்ந்து அந்தப் பணியைச் செய்தளித்தவர்.  அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை: “வாய்க்கு வழங்கும் படி எழுதுங்கள்.” மொழிபெயர்த்ததை வாய்விட்டுப் படித்துக் காதிலே கேளுங்கள்; பிசிறில்லாமல் ஒலித்தால் அதுதான் நல்ல மொழிபெயர்ப்பு! இல்லை, நல்ல எழுத்து!

அவர் சொல்வார்: தியாகு, நீங்கள் எழுத எழுத ஒரு வாசகர் எட்டிப் பார்த்துப் படித்துக் கொண்டே இருப்பதாகக் கற்பனையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது புரியா விட்டால் அவர் உங்கள் கையைப் பிடித்து இழுப்பார், உங்களை மேற்கொண்டு எழுத விட மாட்டார். திருத்தி அவருக்கேற்ப எழுதினால்தான் அவர் உங்களை மேற்கொண்டு எழுத விடுவார்! 

சுவருக்குள் சித்திரங்களும் கம்பிக்குள் வெளிச்சங்களும்தான் தமிழ்நாட்டில் எனக்குப் பரவலாக அறிமுகம் பெற்றுத் தந்தன என்பதை நற்றுணை கலந்துரையாடலில் பலரும் சுட்டிக்காட்டினார்கள். உண்மைதான்! அப்படியில்லாமல் என் அரசியல் பணியால் இந்த அறிமுகம் கிட்டியிருந்தால் அதுதான் எனக்குக் கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும் என இப்போதும் நம்புகிறேன். சுவருக்குள் சித்திரங்கள் தோழர் ஏசிகே அவர்களையும், கம்பிக்குள் வெளிச்சங்கள் தோழர் ஏஎம்கே அவர்களையும் வெகுமக்கள் தளத்தில் பரவலாக அறியச் செய்தன என்றால் அதுதான் மகிழ்ச்சிக்குரியது. என் அரசியல்-கருத்தியல் நிலைப்பாடுகளையும் பொதுத்தளத்தில் பதியச் செய்யக் கிடைத்த வாய்ப்பும் மதிக்கத்தக்கது. எனக்கு எல்லாவற்றையும் விட அதுதான் முதன்மை! என்னை நேசித்தாலும் வெறுத்தாலும் அது என் அரசியலுக்காகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் அணுகுமுறையில் எரிச்சலுற்ற ஒருவர் என்னை “political being” என்று திட்டுவதுண்டு. “Man is a social being, but you are a political being” என்பார். ஆம், social being என்பதை முழுமையாக உணர்ந்து விட்டதால் political being ஆகி விட்டேன். Being என்பதை ‘பிறவி’ என்றோ ‘பிராணி’ என்றோ சொல்வதை விடவும் உயிர் என்றே சொல்லத்தகும். Natural being = இயற்கை உயிர்! Social being = சமூக உயிர் அல்லது குமுக உயிர்! Political being = அரசியல் உயிர்!

நமக்கோர் அரசியல் வாழ்க்கை போதாது, நமக்கு அரசியலே வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் வளர்த்தவர் எங்கள் பேராசிரியர் மருதமுத்து (அக்காலத்தில் இராதாகிருட்டிணன்). எங்கள் கல்லூரிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தவர் எனக்கு அரசியல் ஆசிரியராகிப் போனார். அவர் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் என்று சான் மில்டனைச் சொல்வார். ‘இழந்த சொர்க்கம்’ எழுதிய சான் மில்டன். இதற்கு மில்டனின் அரசியல் துடிப்பைத்தான் காரணமாகச் சொல்வார். அதிலும் விழியிழந்த பின்னும் தன் முடியாட்சிய எதிர்ப்புச் சிந்தனையில் ஊன்றி நின்று காப்பியம் படைத்தவர். ஆகவே இலக்கியமாவது, கலையாவது, எல்லாம் அரசியலுக்காகத்தான்! அரசியல் தனக்காக அல்ல, மக்களுக்காக என்ற தெளிவு மட்டும் சேர்ந்து கொண்டால் போதும்!   

சு.சி., க.வெ. எனும் சிறை எழுத்து ஈர்ப்புப் பெற்றமைக்கு ஒரு காரணம் அது பொது வாசகர் அறியாத ஓர் உலகம் பற்றிப் பேசியது, அந்த உலகத்தின் மனிதர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்தது. அந்த உலகத்திற்கே உரிய மொழியில் பேசியது. நாடு – மதில்களால் சூழப்படாத சிறை; சிறை – மதில்களால் சூழப்பட்ட நாடு என்பார் ஏசிகே. அந்த நாட்டுக்குப் போய் வராதவர்களுக்கு அது பற்றி என்ன சொன்னாலும் அதிசயமாகத்தான் இருக்கும்! ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறை தெரிந்திருக்க வேண்டும். சிறை வாழ்க்கை இல்லாமல் பொது வாழ்க்கை நிறைவு பெறாது. இப்போதுள்ள அரசியல் சூழலில் மக்களுக்காகப் போராட விரும்பினால் சிறையச்சம் கூடாது. நற்றுணை கலந்துரையாடலில் என் ஏற்புரையில் இதைத்தான் சொன்னேன்.

ஆனால் இசை, இலிபி ஆரண்யா, கவின்மலர், சாம்ராசு இவர்களைத் தவிர கலந்துரையாடலில் பங்கேற்ற நண்பர்கள் சிலரும் சில எதிர்பார்ப்புகள் வெளியிட்டனர், சில வினாக்களும் தொடுத்தனர். சில குற்றாய்வுகளும் இருந்தன. என் ஏற்புரை முழு நீதி செய்யவில்லை என்பதை உணர்கிறேன். 

சில வினாக்களுக்கு நான் தந்த விடைகள் என் அன்புக்குரியவர்களிடமிருந்து புதிய வினாக்கள் எழச் செய்துள்ளன. அவற்றையும் நான் சந்திக்கத்தான் வேண்டும். தொடர்ந்து எழுதுகிறேன். இதற்கிடையில் எப்படி சூனியர் விகடனில்  சுவருக்குள் சித்திரங்கள் எழுத வந்தேன் என்ற கதையை நாளை சொல்கிறேன்.

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல்  118

தோழர் தியாகு எழுதுகிறார் 147 : வேண்டும் உரோகித்து சட்டம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார்  146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி)

வேண்டும் உரோகித்து சட்டம்!

இனிய அன்பர்களே!

தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது .

நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின் தேவை பற்றியும் பேசினேன்.

இன்று காலை நாளேடுகளில் வந்துள்ள ஒரு செய்தி உரோகித்து வேமுலா பேரில் சட்டம் இயற்றும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளது. இந்தக் கோரிக்கை எதிர்பாராத ஓரிடத்திலிருந்து வந்திருப்பது இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாலையில் தோழர் அரி பரந்தாமன் அழைத்துச் சொன்னார்: “காங்கிரசு பேரவைக் கூட்டத் தீர்மானங்கள் எல்லா நாளேடுகளிலும் வந்துள்ளன. பாருங்கள்.” உடனே இந்துவைப் புரட்டினேன்.

“Rohit Vemula Act, quota in higher judiciary in Cong. promises for social justice” என்ற தலைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

மெய்யாலுமே நல்ல செய்திங்கோ! மாறி வரும் காலத்தின் அறிகுறிகள்! நாளை விரிவாகப் பேசுவோம்!

 தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113

வியாழன், 13 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 




 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)

 பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது.

“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும் வகையில் திமுக அரசின் காவல்துறை பாதிக்கப்பட்ட பட்டியலினச் சாதி  மக்களையே விசாரணை என்ற பெயரில் அழைத்து குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக ஒப்புக் கொள்ளுமாறு ஆசை காட்டியும் மிரட்டியும் அடித்து அச்சுறுத்தியும் அலைபேசிகளை(செல்போன்களை)ப் பறிமுதல் செய்தும் வருகின்றது. ஏற்கெனவே சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு வேங்கைவயல் மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலரின் மீதே பொய்யாகப் பழிசுமத்த முயல்வது அரசே நிகழ்த்தும் சாதிய வன்கொடுமையாகும், அரசும், அதிகாரிகளும், ஆதிக்க சாதி அதிகார வருக்கமும் சேர்ந்துகொண்டு நடத்தும்  சாதிய ஒடுக்குமுறையாகும். இது மிகுந்த கண்டனத்திற்கும் உரியதாகும்.

இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களை அரசு தரப்பில் எந்தவொரு அமைச்சரும் நேரடியாகச் சென்று பார்க்கவில்லை என்ற விமரிசனம் நீடித்துவருகிறது. அதுமட்டுமின்றி, எந்த கோவிலுக்குள் பட்டியலினச் சாதி மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்றாரோ அதே கோயிலுக்குள் மீண்டும் அம்மக்களை நுழைய விடாமல் தடுக்கும் செய்தியும் வந்துள்ளது. பட்டியலினச் சாதி மக்கள் கோயிலுக்குச் சென்று வந்த பிறகு சாதி ஆதிக்க ஆற்றல்கள் கோயிலுக்கு தீட்டுக் கழித்துள்ளனர். ஏற்கெனவே, கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர், இரட்டைக் குவளை முறையைக் கடைபிடித்தவர் ஆகிய இருவரும் சிறைப்படுத்தப்பட்டாலும் அவர்கள் மீது ப.சா., ப.இ.(S.C., S.T.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்படவில்லை. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று சாதிவெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தமிழக அரசு சாதி  வெறியர்களைப் பாதுகாக்க முயல்வதை அறிய முடிகிறது.  

இம்மாவட்டத்தில்  ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள்   பட்டியலினச் சாதி மக்கள் மீது தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இறையூரிலும்  அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்  கோயிலில் நுழையத் தடை, இரட்டை குவளை முறை, கடைகளில் பொருட்களைக் கொடுக்க மறுப்பது,  கல்விக் கூடத்தில் பாகுபாடு காட்டுவது என  வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அங்கு மட்டுமின்றித்  தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் மேற்படி கூற்றுக்குச் சான்றாகத்,  தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கேட்ட பொழுது   தமிழகம் முழுவதும் 341 ஊர்களிலும் பட்டியலின சாதி மக்கள்  மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசே பதிலளித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். எனவே, இறையூர் கொடுமை என்பதை  ஏதோ சில விசமிகள் தெரியாமல் செய்துவிட்டது போலவும், இதை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாற்றுவதற்கு திமுக அரசு முயலக்கூடாது.

பாசிச பாசக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இந்தியா முழுவதும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஆர்எசுஎசு சங் பரிவார அமைப்புகள் தமிழகத்தி்ல் வேரூன்ற,  சாதிக் கட்சிகளோடு கூட்டு வைத்து செயல்படுவதைத் தனது செயல்தந்திரமாக வகுத்துச் செயல்படுகிறது. இது சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு அரசியல் பலத்தை அளித்திருக்கிறது. 

சாதிய  வன்கொடுமையில் ஈடுபட்ட  சாதி ஆதிக்கச் சக்திகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யவும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் தமிழக அரசைக் கோருகிறோம்.  மேலும், கடந்த ஒராண்டில் தமிழகம் எங்கும் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் புலனாய்வு செய்வதற்கு சனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகள்,  நேர்மையான நீதிபதிகள்,  அனைத்துச் சாதி உழைக்கும் மக்கள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை  அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

[இதுதான் அந்த அறிக்கை, சனவரி 15 நாளிட்ட அறிக்கை. நானும் சேர்ந்து எழுதிய அறிக்கை. இந்த அறிக்கையில் திமுக ஆட்சியின் அணுகுமுறை குறித்தும் காவல் துறையின் புலனாய்வு குறித்தும் தெளிவாகச் சொல்லியிருப்பதைத் தோழர் புளியந்தோப்பு மோகன் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.]

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113

புதன், 12 ஜூலை, 2023

11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. 

மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?

கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ?

முன்பே குறிப்பிட்டுள்ளதைப் போலத் தமிழ்மாநாடுகளை ஆர்வமுள்ள யாரும் நடத்தலாம்.   ஆனால், ஒரே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆட்கள் நடத்துவது எப்படிச் சட்டப்படி முறையாகும்?

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்(பு) [IATR-N] என்றாவது பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்றாவது பெயரை மாற்றிக் கொண்டு அதன் சார்பில் நடத்தலாம். அப்படி நடத்தும் பொழுது இது முதல் மாநாடுதான். அப்படித்தான் குறிப்பிட வேண்டும்.

10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் இம்மாநாட்டை நடத்துகையில் முந்தைய தலைவர் இதை நடத்துவதாகக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்? குறைந்தது இக்குழுவைக் கூட்டச்செய்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான இம்மன்ற ஆட்சிக் குழுவை அகற்றிப் புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடத்தியிருந்தால் பொன்னவைக்கோ அமைப்பினர் விலகியிருப்பர். சென்னையில் 11ஆவது மாநாடு நடந்திருக்காது. அப்படியில்லாமல் முறைப்படியான அமைப்பின் பெயரைப் பிறர் பயன்படுத்துவது எங்ஙனம் முறையாகும்?

உ.த.ஆ.மன்றத்தின் புதிய பொறுப்பாளர்களாகப் பொறி.அரசர் அருளாளர் தலைவராகவும், முனைவர் ப.மருதநாயகம் செயலராகவும்(இந்தியா) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களது ஒப்புதல் இன்றி இதே மன்றத்தின் பெயரை எவ்வாறு பிறர் பயன்படுத்த முடியும்?

புதிய பொறுப்பாளர்கள் உடன் நீதிமன்றத்தை நாடி, மாநாடு நடத்தத் தடையில்லை என்றும் ஆனால், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றப்பெயரைப் பயன்படுத்தி மாநாடு நடத்துவது தவறு என்றும் முறையிட்டு வெற்றி காண வேண்டும். அப்பொழுதுதான் பெயர்க் குழப்பம் ஏற்படாது. நாளை இதே போல், மற்றொருவர் இதே பெயரில் செயற்படும் நிலையும் வராது.

தமிழின் பெயரால் ஒற்றுமை மேலோங்க வேண்டுமே தவிரப் பிளவுகள் ஏற்படக் கூடாது.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” (குறள் 735) கூடாது எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.

தமிழ், தமிழ்நாட்டிலும் தன் அரசியமைப்புக் கட்டுப்பாட்டிலான இந்தியாவிலும் தனக்குரிய இடத்தைப் பெறவில்லை. உலகில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிப்பிழந்தே வாழ்கின்றனர். ஒரு புறம்  தமிழின் சிறப்பு உலகில் பரவிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் தமிழ் வழங்கும் பகுதிகள் தேய்ந்து கொண்டே உள்ளன. இவற்றில் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழர்களையும் வாழ வைக்க வேண்டிய தமிழ் அமைப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டு தமிழுக்கு இழிவு தேடித் தரலாமா? எனவே, ஒன்றுபடுங்கள்! உயர்வு காணுங்கள்!

ஆதலின் புதிய பொறுப்பாளர்கள் விரைந்து செயற்பட வேண்டும். மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

தோழர் தியாகு எழுதுகிறார் 145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு



(தோழர் தியாகு எழுதுகிறார்  144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி)

வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு

வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும்.

திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைச் சட்ட நோக்கிலும் சமூக நோக்கிலும் ஆய்வு செய்து அந்தக் கட்டுரையை எழுதினேன். வேங்கைவயல் தொடர்பாகவும் இப்படி ஓர் ஆய்வை முன்வைப்பதற்கு எனக்குக் கிடைத்துள்ள தரவுகள் போதுமானவையாக இல்லை. உங்களிடம் இருக்கும் தரவுகளை எனக்குத் தந்துதவ வேண்டுகிறேன். அல்லது நீங்களே அப்படி ஓர் ஆய்வை எழுதினால் தாழியிலேயே வெளியிடலாம்.  

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காப்பது உங்களுக்கு வியப்பை அளிப்பதாகச் சொல்வதுதான் எனக்கு வியப்பாய் உள்ளது. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?

வேங்கைவயலில் திமிறி வழியும் சாதியத்தைக் கண்டிக்கவில்லை என்றும், வேங்கைவயல் புலன்விசாரணை முறையை ஆதரித்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றும் வருத்தப்பட்டுள்ளீர்கள். அவர்கள் யாரானாலும் கண்டிக்க வேண்டியதே. நானும் உங்களோடு சேர்ந்து அவர்களைக் கண்டிக்கிறேன். கள்ள மௌனம் சாதிப்பவர்களும் கண்டனத்துக்குரியவர்களே. பாசக கூட திமுக ஆட்சி மீது களங்கம் கற்பிப்பதற்காக ஒடுங்கியர்(தலித்து)களுக்குக் காசு கொடுத்து அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களையே மலம் கலக்கச் செய்திருப்பார்கள் என்று கூறியது யார்? நானும் இதை நம்பவில்லை. தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கும் சாதிக் கொடுமைகள், இந்தியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அலட்சியம், ஆளுநர் ஆர் என். இரவி, பாசக போக்குகள், சாதி இந்துக்களின் கூட்டு மனசாட்சி இந்த ஒவ்வொன்று குறித்தும் நீங்கள் எழுதியிருப்பதை அட்டியின்றி ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறான போக்குகள் குறித்து நானும் எமதியக்கம் சார்பில் பல தருணங்களில் பேசியுள்ளேன்.

நான் இந்தச் சாதிய விசாரணை குறித்து மௌனம் காக்கிறேனா? உரக்கப் பேசுகிறேனா? என்று நீங்களும் தாழி அன்பர்களும் முடிவு செய்யுமுன் சில செய்திகளைக் கவனப்படுத்துகிறேன்.  

1)    சென்ற சனவரி 23ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்வுக் கருத்தரங்கில் நான் பேசியது:+

https://youtu.be/Mlj66zApuus

இந்த உரையில் இறையூர் வேங்கைவயல் பற்றி நான் பேசியுள்ள  ஒவ்வொரு பகுதியையும் எடுத்து எழுதி வைத்துக் கொண்டு அதில் என்ன சிக்கல் என்று சொல்லுங்கள். பேசுவோம்.

2)    கடந்த சனவரி 7ஆம் நாள் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் பொதுக்குழு வேங்கைவயல் கொடுமையைக் கண்டித்தது மட்டுமல்ல, முன்னணி சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தது. அன்று மாலை செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நான் வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவாகப் பேசினேன். புதுக்கோட்டையில் சனவரி 11ஆம் நாள் தோழர் பாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3)    வேங்கைவயல் கொடுமை குறித்து விரிவான ஆய்வுகள் செய்த தோழர் கரிகாலன் ((உ)ரூட்சு வலையொளி) அவர்களை அழைத்து, சனவரி 23ஆம் நாள் செய்தி அரசியல் அணுக்க(‘சூம்‘) நிகழ்வில் பேசச் செய்தோம்.

4)    பாசிச எதிரப்பு மக்கள் முன்னணியின் பொதுக் குழுவிலும் செயற்குழுவிலும் வேங்கைவயல் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. பிறகு முன்னணி சார்பில் சனவரி 15ஆம் நாள் வேங்கைவயல் அறிக்கை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டோம். இந்த அறிக்கையை வரைந்து ஒவ்வொரு கட்டமாகத் திருத்தம் செய்து இறுதியாக்கியதில் என் பங்கு முகன்மையானது என்று நான் சொல்வதை நம்புவீர்கள் அல்லவா?

இதோ அந்த அறிக்கை (முழுமையாக):

திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!

தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடுக!

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113