tamil development லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil development லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

அடுத்து செய்ய வேண்டியது என்ன?

First Published : 29 Jun 2010 01:43:08 AM IST


உலக அளவில் தமிழின் சிறப்பை அறியச் செய்யவும், தமிழர்களின் பெருமைகளை விளக்கவும் மாபெரும் தமிழ் மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டுப் பலரும் இம் மாநாட்டில் பங்கேற்றுப் பெருமை சேர்த்ததை நன்றியுள்ள தமிழன் மறக்கமாட்டான். இத்தனை சிரமங்களும் எதற்காக? தமிழின் தொன்மையைப் பறைசாற்றுவதற்கும், பிற மொழிகளில் இல்லாத சிறப்புகளை எடுத்துக்கூறவும்தான். இப்படிப்பட்ட நிலையில் தமிழின் வளர்ச்சிக்கும், அதைப் பாதுகாப்பதற்கும் நாம் செய்ய வேண்டிய பணிகள் போதுமானதா என யோசிக்க வேண்டும். இனிமேல்தான் நாம் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். தமிழ் வாழ்கிறதா?  தமிழன் வாழ்கிறானா? இதுவே நம் கேள்வி. இன்று அரசுத் துறைகளாகட்டும், தனியார் துறைகளாகட்டும் 90 சதவிகிதம் பேருக்கு தமிழ் குறித்த அடிப்படை அறிவு இல்லை என்றே கூறலாம். பேச்சு, எழுத்து வழக்குகளில் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பெரும்பாலான படித்தவர்களிடம் காணப்படும் குறை லகரம், ழகரம் எங்கு பயன்படுத்துவது என்பதுதான். இன்னும் சிலரோ ர, ற பயன்படுத்துவதையும், ன, ண பயன்படுத்துவதையும் அறியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை, மருத்துவம், பொறியியல், கணிப்பொறித் துறைகளில் வல்லுநர்களாகத் திகழும் தமிழர்களுக்கு அறவே தமிழ் தெரியாத நிலையை என்னென்பது?  கடந்த திமுக ஆட்சியில், தமிழுக்கென்றே தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டார். அது பின்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது அந்தத் துறைக்கு அவசியம் வந்துள்ளது.  செம்மொழி மாநாடுதான் முடிந்துவிட்டதே, இனி தமிழ் தானாக வளரும் என யாரும் எண்ணி அமைதியாக இருந்துவிடக் கூடாது என்பதே நம் கவலை. எனவே, உடனடியாக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இனி தீவிரம் காட்ட வேண்டும்.  ஒவ்வொரு துறையிலும் ஆவணங்கள், சுற்றறிக்கைகள், வருகைப் பதிவேடு உள்ளிட்டஅனைத்துமே தமிழில் கட்டாயம் இருக்குமாறு உத்தரவிட வேண்டும். தினம் ஒரு குறள் மாதிரி, தினம் ஒரு தமிழ் நூல், காப்பியம், புராணம் என்ற ரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.  இதற்கு ஊடகங்கள், பத்திரிகைகளின் பங்களிப்பைத் தாராளமாக நாடலாம். அனைத்துப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி, நீதிபோதனை, கைத்தொழில் பாடவேளையை ஒதுக்குவது போல, தமிழ் சிறப்பு வகுப்பைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம்.இப்போது ஆங்கிலம், தமிழ் என இரு பாடவேளைகள் உள்ளதைத் தவிர்த்து முழுக்க முழுக்க இலக்கணம், இலக்கியம், தமிழறிவு சார்ந்த பாடங்களைப் போதிக்கும்படிச் செய்யலாம். இதற்கு மதிப்பெண் தர வேண்டியதில்லை.  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் என்ற கோஷத்தை மட்டுமே அறிந்துள்ளோம். அதை நிஜமாக்கும் வகையில் தமிழ் நூலகத்தைத் தீவிரமாக்கி, அங்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள், தமிழறிஞர்களை வைத்து வகுப்புகள், போட்டிகள் நடத்தச் செய்யலாம்.  இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச பரிசுகள், அன்பளிப்புகள் ஆகியவற்றை நல்ல தமிழ் நூல்களாக மலிவு விலையில் அச்சிட்டு வழங்கலாம். தங்கள் நிறுவன விளம்பரப் பைகளை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே அச்சிட்டு வழங்கலாம். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் குறள்களை மட்டுமே எழுதிவைப்பதைத் தவிர்த்து இலக்கியம் தொடர்பான வாசகங்களை எழுதச் செய்யலாம்.  விடுமுறை நாள்களில் பைபிள் வகுப்புகள், கணினி, விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதைப்போல தமிழ் இலக்கணம், தமிழ்க் காப்பிய அறிமுகம், தமிழ் பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிகளை நடத்தலாம். இதற்காக அரசே நிதி உதவி செய்யலாம் அல்லது வியாபார நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடலாம்.  பிரபல தலைவர்களுக்குப் பாராட்டு விழா, நன்றியறிவிப்பு விழா என்றெல்லாம் வீணாகச்  செலவழிப்பவர்கள் அதைத் தமிழுக்காகச் செலவிடலாம். இலவசமாகத் தமிழ் நூல்களை வழங்கலாம். அன்னதானம் வழங்குவதைப்போல நூல்தானம் வழங்கலாம்.  முன்பெல்லாம் தமிழ் வளர்க்க உதவியவை திருமண, பிறந்தநாள் விழாக்கள்தான். அன்று  திராவிட இயக்கத்தின் இளம் பேச்சாளர்கள் தமிழில் சொற்சிலம்பம் விளையாடுவார்கள். இன்று அவை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டன.  பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் என்றெல்லாம் தமிழ் மணந்தது. வளர்ந்தது. இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னேதான் அனைவருடைய முக்கால்வாசி ஆயுளும் வீணாகிறது.  இன்றைக்கு 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் தமிழில் சரளமாக முழுமையாக பேச, எழுத அறிந்தவர்கள். இன்றைக்கு 40 வயதானவர்களை எடுத்துக் கொண்டால் பலர் தமிழில் வெற்றிடமாக இருக்கிறார்கள். எனவே, மலிவு விலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களை அச்சடித்து விநியோகிக்கலாம். ஊடகங்கள் வழியே நாடகம், சித்திரங்களாகத் தமிழ்க் காப்பியங்களை மீண்டும் வெளிக்கொணரலாம். ஆங்காங்கே தமிழ் மன்றங்களைத் தொடங்கி கவியரங்கம், தமிழ் இலக்கிய அரங்கம் போன்றவற்றை நடத்த வேண்டும்.    முன்பெல்லாம் கோயில் விழாவாகட்டும், பள்ளி விழாவாகட்டும் இலக்கிய நாடகங்கள் நடைபெறும். இன்று அனைத்தும் பழங்கதையாகி விட்டது. எனவே, தமிழை வளர்க்க மறுமலர்ச்சி அவசியம்.
கருத்துக்கள்


தமிழை வளர்க்க வலியுறுத்தும் கட்டுரையிலேயே கோசம், நிசம் என்றுஎ ல்லாம் எழுதினால் தமிழ் எவ்வாறு வளரும்? தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழில் பேசுங்கள்; தமிழில் பயிலுங்கள்; தமிழ் தானாக வளரும். கட்டுரையாளர்கள் எப்படி எழுதியிருந்தாலும் பிற மொழிச் சொற்களைத் திணிக்கும் போக்கு ஊடகங்களில் உண்டு.தினமணியாவது அதற்கு மாறாகப் பிற மொழிச் சொற்களைக் களைந்து நல்ல தமிழில் கட்டுரைவர ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 5 ஜூன், 2010

தமிழ் வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?



புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 1956-ல் நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களின் நிர்வாகம் அந்தந்த மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, சட்டப் பேரவையில் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, 1996-ல் முதல் முறையாக தமிழ் ஆட்சி மொழித் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலியிலும், சேலத்திலும் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில், ஆட்சி மொழிச் சட்டத்தை முழு அளவில் நிறைவேற்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி பெற அரசு வழி வகுத்தது.மாவட்டந்தோறும் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஓர் இயக்குநர் உள்பட 5 ஊழியர்கள் என்ற விகிதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தனி வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 51 அரசுத் துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆட்சி மொழி பயன்படுத்தப்படும் நிலைமையை ஆய்வு செய்து, தமிழ்ச் சொற்களுக்கான விளக்கங்களையும், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட ஆட்சி சொல்லகராதியையும் அளித்து, அனைத்துக் கோப்புகளையும் தமிழ் மொழியில் கொண்டு வரச் செய்வதே இந்த அலுவலகத்தின் அன்றாடப் பணியாகும்.தினமும் ஒன்று அல்லது இரண்டு அரசு அலுவலகம் என்ற விகிதத்தில் மாதம் 40 அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இவற்றில் தேனி, அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், சில மாவட்டங்களில் வாகன வசதியும் இல்லை.இதன் காரணமாக, அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக மாற்றும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கையை தீவிரமாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறையினர் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எதிர்பார்ப்பு, முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் நிறைவேறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்திய முதல்வர், இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி இந்தக் குறையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
கருத்துக்கள்

பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டும் தமிழ் ஆட்சிமொழி முழுமையாக நிறைவேறுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ் ஆட்சிமொழியாகச்சிறக்க வேண்டும் என்றால் உடனே தமிழ் வளர்ச்சித்துறையை மூட வேண்டும். நிதியுதவி, பரிசு வழங்கல் முதலான நலப்பணிகளைத் (தமிழ்நாடு இயல இசை நாடக மன்றத்திலிருந்து இயல் பணிகளைப் பிரித்துத்) தமிழ்நாடு இயல்மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாணைகள் அனைத்தையும் தமிழில் வெளிவரச் செய்து தமிழில் உள்ள பட்டியல்கள், காசோலைகள், ஒப்பந்தங்கள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழறிஞர்களைக் கொண்ட வழிநடத்தும் குழுவை அமைத்து நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும். உயர் நீதிபதி தலைமையில் செயலாக்கக் குழுவை நிறுவி விதி மீறுவோருக்குத் தண்டனை வழங்க வேண்டும். இவற்றைச் செய்வார் யாருமில்லை. எனவே, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் என்பது கானல் நீரே. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 1:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 7 ஏப்ரல், 2010

சரியான, முறையான, செவ்வையான, தேவையான கருத்துகள். ஆனால் ஆட்சிமொழிச் சட்டத்தை மாற்றிப் புதிய சட்டம் பிற்ப்பிக்காமல் எந்தத் துறையாலும் ஒன்றும் செய்ய இயலாது. அதிகாரமற்ற தமிழ் வளர்ச்சித்துறையும் கைகட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எனினும் சிறப்புச் செய்தியாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Front page news and headlines today

செம்மொழித் தமிழ் மாநாட்டுப் பணிகள் தமிழக அரசால், அனல் பறக்கும் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், தமிழக அரசு, தமிழ் மொழியை தனது ஆட்சிப் பணிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, சரியாக கையாள்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.


கடந்த 1956ம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 1957 ஜனவரி 19ல் கவர்னரின் ஒப்புதலைப் பெற்று, அதே மாதம் 23ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின் படி, தமிழகத்தின் ஆட்சி மொழியாக தமிழ், மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். இதைத் தொடர்ந்து, 1978 ஜூன் 21ல் தமிழக அரசாணை எண் 1134ன் படி, 'தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்!' இன்னொரு உத்தரவு, 'அரசு ஊழியர்கள், தங்கள் இனிஷியலையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்' என்கிறது. இந்த உத்தரவுகள் நடைமுறையிலேயே இல்லை என்பது, அரசு அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்காத குழந்தைக்குக் கூட தெரியும். அப்படியானால், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்தாத, அரசுப் பணியாளர்களை கட்டுப்படுத்த எந்த அரசாணையும் இல்லையா? இருக்கிறது.


அதுபற்றி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது: கடந்த 1982 ஜனவரி 6ல் அரசாணை எண் 24ன்படி, தமிழ் ஆட்சி மொழித் திட்டம், சார்நிலை அலுவலகங்களில் செம்மையாக அமல்படுத்தப்படாவிட்டால், அதை, துறைத் தலைவர்களின் கவனத்துக்கு இயக்குனர் கொண்டு வரலாம். நிலைமையைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, துறைத் தலைவர்களைச் சார்ந்தது. துறைத் தலைவர் அலுவலகங்களில் இத்திட்டத்தின் நிலைமை திருப்திகரமாக இல்லாவிட்டால், அதை இயக்குனர், தலைமைச் செயலகத்தில் உள்ள, துறைச் செயலர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, செயலர்களைச் சேரும். இந்த அரசாணை, தற்போது வரை நடைமுறையில் இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை தெரிவிக்கிறது. அப்படியானால், அரசு அலுவலகங்களில் முழுமையாக தமிழைக் கையாளாத ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 'எந்த நடவடிக்கையும் இல்லை' என்று தான் பதில் கிடைக்கிறது.


இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அளித்த பதில்: தமிழை முழுமையாகக் கையாளாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. துறைத் தலைமை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட சார்நிலை அலுவலகங்களில் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்களாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் அடிப்படையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழின் பயன்பாடு குறித்து அந்தந்த துறைத் தலைவர்கள் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி, குறைகள் சரிசெய்யப்பட அறிவுரைகளும், பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்குனர் பதிலளித்துள்ளார்.


அதாவது, தமிழ் மொழி தொடர்பான அரசாணைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழில் மட்டும் தான் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்பட வேண்டும் என்ற உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் செம்மொழி மாநாடு தேவையா; தமிழ் வளர்ச்சிக்கு என ஒரு துறை தேவை தானா எனும் கேள்வி தான் எழுகிறது. தமிழகத்தில் தமிழ்ச் செம்மொழி வளர்ச்சிக்கு கட்டமைப்பு சரியான முறையில் அமைக்கப்படவும் இல்லை; செயல்படவும் இல்லை என்பது, இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறினார்.


'டாஸ்மாக்' தமிழா? ஆங்கிலமா? 'வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தங்கள் பெயரை தமிழ் எழுத்துக்கள் பிரதானமாகத் தெரியும் படி எழுத வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவு உள்ளது. சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தில், சென்னை மாநகராட்சியும் இந்த உத்தரவை மறு உறுதிப்படுத்தி, 'அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் வியாபித்துள்ள அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் பெயர்ப் பலகைகளில், ஆங்கிலம் தான் பிரதானமாக இருக்கிறது என்பது, தமிழ்க் குடிமகன்கள் அனைவரும் அறிந்த விஷயம். ஒருவேளை, இந்த உத்தரவுகள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்குத் தான் பொருந்துமோ; அரசு நிறுவனங்களுக்கு பொருந்தாதோ, என்னவோ!


திருவள்ளுவர் ஆண்டு எங்கே? கோவையில் நடக்க உள்ள செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய விளம்பரங்கள், மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2010' எனக் குறிப்பிடப்படுகிறது. இதில், 2010 என்பது ஆங்கில ஆண்டு கணக்கு தானே. தமிழக அரசு நடத்தும், உலகத் தமிழ் மாநாட்டில் கூட ஆங்கில ஆண்டைத் தான் குறிப்பிட வேண்டுமா? திருவள்ளுவர் ஆண்டு என்ன ஆயிற்று? திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி இது, 2041. நியாயப்படி, 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2041' என்று தானே விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். போதாத குறைக்கு, பஸ்களிலும், பொது இடங்களிலும், செம்மொழி மாநாட்டின் இலச்சினையுடன் கூடிய விளம்பரத்தில், 'சூன் 23 - 27' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிது நேரம் யோசித்த பிறகே, அது, ஜூன் 23 - 27 எனப் புரிகிறது. இந்த காமெடி எப்போது தான் ஓயுமென்றே தெரியவில்லை. ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவதானால், அதை அதன் உச்சரிப்பிலேயே பயன்படுத்துவது தான் நியாயம். அவ்வாறில்லாமல், அதை அப்படியே தமிழ்ப்படுத்தி, தமிழையும் படுத்தி, ஆங்கிலத்தையும் படுத்துவது அநியாயம். தமிழக அரசே, 'ஆனி 9 - 13' என தமிழ்த் தேதியைக் குறிப்பிடாவிட்டால், வேறு யார் தான் அதைப் பயன்படுத்துவது?


- நமது சிறப்பு நிருபர் -