foreign tamils லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
foreign tamils லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

foreign tamils welfare board: தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்

பாராட்டுகள். எனினும்  இந்த வாரியம் ஈமச் சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் அமைப்பாக இல்லாமல், அயல்வாழ் தமிழர்கள் முழு உரிமையுடன் வாழவும் வாழ்விட ஆட்சியால் கொடுங்கோன்மைக்கு ஆளாகும் பொழுது காப்பாற்றி உதவவும் தமிழ்க்கல்வி பெறவும் தமிழர் தமிழராகத் தலைநிமிர்ந்து வாழவும் வழி வகை செய்ய வேண்டும். எடு பிடிகளுக்கு வாரியப் பொறுப்புகளைக் கொடுக்காமல்  கட்சி வேறுபாடின்றித் தமிழ் நலம் பேணுநருக்குப்  பொறுப்புகள் வழங்க வேண்டும். பிற வாரிய விதிகளை அப்படியே பின்பற்றியிருப்பதும்  இதற்குப் பொருந்தாது. அகவை வரமபும் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்


சென்னை, பிப். 10: தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனுக்காக ""தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம்'' தொடங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த இந்த வாரியம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அவசியம் பற்றி மசோதாவில் தெரிவித்துள்ள தகவல் :தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள், வேலையில் இருக்கும்போதும், அதன்பின்பும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்னைகளையும் சட்ட பிரச்னைகளையும் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.தமிழகத்தில் குறைந்த வருவாய் பெற்று வந்து, வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை விட்டு, வேலை நாடி செல்வோர் பல பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர்.அவற்றிற்கு தாங்களே தீர்வு கண்டு, மீண்டும் நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறார்கள்.எனவே, தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டியது முக்கியமாகும்.தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் இறந்தால், அவர்களது உடல்களைத் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதியுதவி வழங்குவதோடு, அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தலும், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும்.எனவே இந்த வாரியம் தொடங்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசிப்போர், வெளிநாடுகளில் வசிப்போர் என இரு பிரிவாக இந்த வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம். வெளிநாடுகளில் வாழ்வோர் மாதம் ரூ.300-ம்,வெளி மாநிலங்களில் வாழ்வோர் மாதம் ரூ.100-ம் இந்த வாரியத்துக்குச் செலுத்த வேண்டும்.இந்த இரு பிரிவினரும் திரும்ப தமிழகத்திற்கு வந்துவிட்டால் பிறகு மாதம் ரூ.50 செலுத்த வேண்டும்.வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், இறப்பின் பேரில் குடும்ப ஓய்வூதியம், உடல் ஊனமுற்றால் உதவித் தொகை, நோயுற்றால் நிதி உதவி, பெண் உறுப்பினர்களின் மகள்களுக்கு திருமண உதவி, பெண் உறுப்பினருக்கு பேறுகாலச் சலுகை, வீடு கட்ட, வீடு பராமரிக்க, கல்விக் கடன் முன்பணம் போன்ற உதவிகள், சுயவேலை வாய்ப்பைத் தேட உதவி போன்ற திட்டங்கள் இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் உறுப்பினராகச் சேர பதிவுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்த, 55 வயது நிறைவடையாதோர் இதில் உறுப்பினராகச் சேரலாம்.இந்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா நிறைவேறியது.சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன. பீட்டர் அல்போன்ஸ்: வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்லும் தமிழர்கள் மரணம் அடையும் சமயங்களில் அவர்களின் சடலங்களைக் கொண்டு வருவதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளவும், இறப்புக்கான பணத்தை நிறுவனங்கள் அளிக்கத் தேவையான சட்ட உதவியை வழங்கவும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாமக கொறடா வேல்முருகனும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, வளைகுடா நாட்டில் மரணம் அடைந்த பாஸ்கரனின் குடும்பத்துக்கு உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

variyam for foreign tahmizhar

நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்ற விருக்கும் முதல்வருக்குப் பாராட்டுகள். வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்கள என்று இல்லாமல்  அயல்வாழ்தமிழர்கள் நலன்கள் அனைத்தையும் பேணுவதாக இந்த வாரியம் அமைய வேண்டும். எனவே, துதிபாடிகளுக்கு இடம் தராமல், தமிழ்நலனில் கருத்து செலுத்தும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக அமர்த்தல் வேண்டும்.  இல்லையேல் குடும்பத்தினருக்கும் அண்டிப் பிழைப்பவர்க்கும் சில வசதிகள் செய்து கொடுக்கும்  வாரியமாக மட்டுமே இது திகழும். முதல்வர் நினைத்தால்
 முடியாதது ஒன்றும் இல்லையே! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி நலவாரியம்: முதல்வர்

தாம்பரம், டிச. 11: வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது வழங்கப்பட்டது.விழாவில் அவர் பேசியது:இந்த விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் என்னை பெரியார் வழியில் நடந்த பெரும் தொண்டர், அண்ணாவின் அருமைத் தம்பி என்றெல்லாம் பாராட்டி விட்டு, காயிதே மில்லத் அடியொற்றி நடந்தவன் என்ற வாசகத்தை விட்டுவிட்டது மன்னிக்க முடியாத குற்றம்.தாய்மொழியான உருது மொழியில் பயிலவும், தேர்வு எழுதவும் அரசு உதவ வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்குப் பாடநூல் தயாரித்தல், தேர்வு நடத்துதல் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மதம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். அதை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்ட சிறுகடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்குவதுபற்றி பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்து பேசி தாம்பரம்  நகராட்சி மூலம் கடைகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ""பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் பொறியியல் கல்லூரியில் 4,660 மாணவர்களும், மருத்துக் கல்லூரியில் 129 மாணவர்களும் பயன் அடைந்துள்ளனர்'' என்றார்.மத்திய இணை அமைச்சர் இ.அகமது, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரம்: நெடுமாறன், வீரமணி, கிருஷ்ணசாமி கண்டனம்



சென்னை, ஏப். 17: மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது. ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும்.இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது. இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும், அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அர்ஜுன் சம்பத் கண்டனம்:சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல்.இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.காவல் துறையினர் கருத்துபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
கருத்துக்கள்

செய்திக்குப் பொருத்தமில்லாதவாறு போடப்பட்டுள்ள, புன்னகை பூத்த பழ.நெடுவின் படத்தை அகற்ற தினமணிக்கு வேண்டுகோள்.வேதனையின் வெளிப்பாட்டைப் படம் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:55:00 AM

காவல்துறை மூலம் தமிழக அரசுதெரிவித்துள்ள மழுப்பல் கருத்து ஏற்கக்கூடியது இல்லை. கொலைகாரர்களை அரசு மரியாதையுடன் வரவேற்பார்களாம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல அன்பர்கள் சென்றால் தடுப்பார்களாம். புதுவகையான நீதியாக உள்ளது. வீரமணியே கலைஞர் சினம் கொள்வாரோ என்ற அச்சத்தை மீறி (ஒரு வேளை அவரிடம் இசைவு பெற்று) கலைஞருக்கு அவப் பெயர் ஏற்படுத்த செய்த செயல் என அறிக்கை விட்டிருக்கும்போது (அவரின் முழு அறிக்கை காண்க) முதன்மைக் கட்சிகள் அமைதி காப்பதும் நமக்கு இழுக்கே. புகுவிசைவை (விசா) அளித்த பின்பு வானூர்தியில் இருந்து இறங்கவிடாமல் செய்ததில் இருந்தே மனித நேயமற்ற இச்செயல் அரசியலாக்கப்படட்டுள்ளது தெளிவாகிறது. அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டு அரசு செலவில் அழைத்து முழுப் பண்டுவமும் பார்க்க வேண்டும். இதுவே சரியான கழுவாயாக (பரிகாரமாக) அமையும். ஆள்வோரின் ஈவிரக்கமற்ற செயல் ஆளப்டுவோருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதை உணர வேண்டும். பக்சேவைக் குளிப்பாட்டும் பச்சோந்திகள் விலக வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010


அயல்நாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தர நடவடிக்கை தேவை



வேலூர்,ஏப்.4:அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார். வேலூரில், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தன. அவற்றில் கிரேக்கம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகள் அழிந்துவிட்டன. பழமையான மொழிகளில் தமிழ், சீனம் மட்டுமே நிலைத்துள்ளன. தமிழுக்கு ஆபத்து இல்லாமல் இல்லை.ஆங்கிலம் உலக மொழியாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்டதாலும், அவர்கள் தென்னிந்தியா வழியாக வந்ததாலும் தமிழில் ஆங்கில கலவை அதிகம் உள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசப்படுகிறது. தமிழை முழுமையாக பிழையின்றி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள் தமிழை வளர்க்க வேண்டும். இதுபோன்ற விழாக்கள் நடத்தி ஒரு தமிழனை மற்றொரு தமிழன் பாராட்ட வேண்டும். அப்போதுதான் மேலும் சிறப்பாக செய்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தமிழ் பெயரை வைத்திருக்கின்றனர். தமிழர்களின் விழாக்களை கொண்டாடுகின்றனர். இருந்தாலும் தமிழ் பேசத் தெரிவதில்லை. இந்நிலை மாற வேண்டுமெனில், மேலைநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ் மன்றங்கள் மூலம் இங்குள்ள ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஓரிரு ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ் கற்றுத்தர வேண்டும். அங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. நாம் இங்கிருந்து அனுப்ப வேண்டும். திருக்குறளுக்கு இணையாக இன்னொறு நூல் இல்லை. அனைவரும் திருக்குறளை படித்திருக்க, அறிந்திருக்க வேண்டும். அதன் கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் விஸ்வநாதன். திரைப்பட பாடலாசிரியர் சினேகனுக்கு "கவி இளவரசு' விருதும், இயக்குநர் த.ராஜ்குமாருக்கு "அசத்தல் இமயம்' விருதும், வேலூர் தமிழ்ச்சங்கப் பொருளாளர் வே.பதுமனாருக்கு "தமிழ்ச்சுடர்' விருதும் வழங்கப்பட்டது.
கருத்துக்கள்

உண்மைதான். அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழே தெரியாமல் வாழும் தமிழர்களுக்கும் அயல் மாநிலத்தவர்களுக்கும் தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகப் பொறியியல் கல்லூரிகளும நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களும் நடத்துவோர் தங்கள் நிறுவனங்களில் பயில்வோர் தமிழில் சான்றிதழ், பட்டயம் பெறும் வகையில் தமிழ்ப் பயிற்சி அளிக்க வேண்டும். திரு விசுவநாதன் தன் நிறுவனத்தில் முதலில் இதைத் தொடக்கி வைக்க வேண்டும.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/6/2010 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்