editoriyal pages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
editoriyal pages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஏட்டுச் சுரைக்காய்!

ஏட்டுச் சுரைக்காய்!

First Published : 30 Jul 2012 12:50:32 AM IST


 பிளஸ் 2 தேர்வில் 1,150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த ஒரு மாணவிக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பத் தெரியவில்லை; அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் அந்த மாணவியே சொன்ன தகவல் இது.  சுவரில் ஒரு வட்டத்தை வரைந்து அதில் ஒரு புள்ளியை வைத்து, அந்தப் புள்ளியைப் பார்த்துக்கொண்டே (கவனம் சிதறாமல் இருப்பதற்காகவாம்) படிக்க வேண்டும் என ஆசிரியர் நிர்பந்தம் செய்ததாக அதே நிகழ்ச்சியில் மற்றொரு மாணவர் கூறினார்.  கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர், கல்விக் கட்டணம் தொடர்பாக அந்தப் பள்ளிக்கு எதிராக நியாயம் கேட்டதால், பத்தாம் வகுப்பில் 450-க்கு மேல் மதிப்பெண்கள்பெற்ற அவரது மகனுக்கு பிளஸ் 1 வகுப்பில் சேர அந்தப் பள்ளி அனுமதி மறுத்துவிட்டதாம்.  நண்பர் ஒருவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன், வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் அளிக்காததால், பாதியிலேயே வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.  மதிப்பெண் இலக்கைக் குறிவைத்து, மாணவர்களை வேட்டையாடும் தனியார் பள்ளிகளின் இன்றைய உண்மையான முகம் இதுதான்.  பாடப் புத்தகத்தை மட்டுமே மனனம் செய்யவைத்து, வெளியுலக அறிவைப் போதிக்காமல், ஒரு விண்ணப்பத்தைக்கூட நிரப்பத் தெரியாத அளவுக்குதான் தனியார் பள்ளிகள் மாணவர்களை உருவாக்குகின்றன.  பிளஸ் 2 தேர்வில் 1,150 மதிப்பெண்கள் எடுத்த மாணவியின் அறிவுத்திறமையே இதுதான் என்றால், சராசரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கும் திறன், நல்லது எது, கெட்டது எது என விரைவாக ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்யும் திறமை, பொது அறிவில் சிறந்து விளங்குவது என மாணவர்களை ஆளுமைத்தன்மையுடன் உருவாக்க வேண்டிய பள்ளிகள், அவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகத்தான் உருவாக்குகின்றன.  கவனம் சிதறாமல் இருக்க சுவரில் வட்டத்தை வரைந்து அதில் வைக்கப்பட்ட புள்ளியையே பார்த்துக்கொண்டு படிக்க வேண்டுமாம்; மாணவரின் கவனம் அந்தப் புள்ளியில் இருக்குமா? பாடத்தில் பதியுமா? அந்த ஆசிரியர்தான் பதில் சொல்ல வேண்டும்.  கேள்விக்குச் சரியாக பதில் அளிக்காத மாணவரை வீட்டுக்கு அனுப்பியதால் விடை தெரிந்துவிடுமா? அந்தக் கேள்விக்கான பதிலை வகுப்பு முடிவதற்குள் படித்து, சரியாகச் சொல்ல வேண்டும் என கூறியிருந்தால் அதுதான் சரியான தீர்வாக இருந்திருக்கும்.  இதெல்லாம் பல தனியார் பள்ளிகளில் தவறாமல் நடக்கும் தவறுகள். நூறு சதவீத தேர்ச்சி எனும் வியாபார நோக்கத்துக்காக, பத்தாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு நிர்பந்தங்களை அளித்து, அவர்களைப் பள்ளியைவிட்டே நீக்குவது அல்லது மனரீதியான சித்திரவதைகளால் சம்பந்தப்பட்ட மாணவர்களை மனம்நொந்து பள்ளியைவிட்டு விலகவைப்பது என பெரும் "அரசியலே' செய்கின்றன பல பள்ளிகள்.  பத்தாம் வகுப்பில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டும் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பது, அதே பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 10 வரை படித்திருந்தாலும், நூறு சத தேர்ச்சி, ஸ்டேட் ரேங்க் என்கிற "பள்ளிக்கு நன்மைதரும்' விஷயங்களை மட்டும் கருதி, மனசாட்சியைக் கொன்று அந்த மாணவர்களைச் சேர்க்க மறுப்பது, வகுப்பில் பார்த்தால் குற்றம், பேசினால் தப்பு, சிரித்தால் தண்டனை என எதற்கெடுத்தாலும் அபராதம் மேல் அபராதம் விதிப்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது என தனியார் பள்ளிகளின் "தேர்ச்சி நுணுக்கங்கள்' ஏராளம்.  தமிழகத்தில் கல்விச் சேவையாற்றுவதில் தனியார் பள்ளிகள் பெரும் சேவை ஆற்றுகின்றன என்று புள்ளிவிவரங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், மாணவர்களை ஆளுமைத்திறம் உடையவர்களாக, இரக்க சிந்தனை கொண்டவர்களாக, சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக, சேவை எண்ணம் கொண்டவர்களாக, பொது அறிவில் சிறந்தவர்களாக உருவாக்குவதில் பல தனியார் பள்ளிகள் தவறிவிடுகின்றன.  மதிப்பெண்களை மட்டுமே இலக்காக வைத்து, கல்வியைத் தண்டனையாக்கி ஸ்டேட் ரேங்க் பெற்று, அதை அடுத்த கல்வியாண்டுக்கான வியாபாரத்துக்கு அஸ்திவாரமாகத்தான் பயன்படுத்துகின்றன.  தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லாம் பெரும் சாதனையாளர்களாக மாறுவதில்லையா எனக் கேட்கலாம். அப்படியும் சாதனையாளர்கள் உருவாகத்தான் செய்கிறார்கள். மொத்தத்தில் சில தனியார் பள்ளிகள் கூறிக்கொள்ளும் கல்விச் சாதனை எல்லாம் வெறும் "ஏட்டுச் சுரைக்காய்'தான் என்றே இதையெல்லாம் பார்க்கும்போது தோன்றுகிறது.   
கருத்துகள்

Ondru நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் யாருக்கும் எதை எப்படி எப்போது செய்வது என்பது என்று புரியவில்லை. எதை படித்தால் நமது அறிவும் வளம்பெறும் வாழ்கையும் வளம் பெரும் என்பது விளங்கவில்லை. ஒன்றை படித்து முடிப்பதற்குள் மற்ற புதிய மாற்றம் வந்துவிடுகிறது. நமது வாழ்கையும் எதைசுற்றி சுற்றி வருவது என்பது போல ஆஹிவிடுகிறது. இதில் எதை நோக யாரை வைய?
By மாடிகளை
7/30/2012 11:14:00 AM
இதில் புதுமை ஒன்றும் இல்லை. விண்ணப்பத்தை நிரப்புவது, முக்கியமான காரியம் ஆதலால் பெற்றோர்கள் உதவுவார்கள். நம் கல்வி முறை அப்படி. படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, செயலறிவு இல்லது ஒன்றும் செய்ய முடியாது. முன்பு பொறியியல் கல்லூரியில் க்ளட்ச் என்ன என்று சொல்லி தராமலேயே, பார்முலா மூலம் படிப்போம். கார் மிக குறைவாக இருந்த காலம். தமிழ் நாட்டில் மிக சில பொறியியல் கல்லூரிகள் இருந்த காலம்.படிப்பின் அளவு தான் கூடுதலே தவிர தரம் குறைவு. யார் கவலை படுகிறார்கள்.
By gopalan
7/30/2012 8:56:00 AM
மதிப்பெண்களை மையமாகக் கொண்ட கல்வி முறை இப்பொழுது!அரசின் கையை மீறிய தனியார் பள்ளிகள் !பெற்றோர்களின் மனதை ஈர்த்த கல்வியும் இதுவே!ஒதுக்கீடும் மதிப்பெண்களையே மையம் கொண்டுள்ளது.ஆதலின்,இப்பொழுது இப்படி கூப்பாடு போடுவதில் அர்த்தமுள்ளதா ?வியாபாரம் எனில் பொருளையே தரத்தையே சொல்ல வேண்டும்.உண்மையில்,இப்படி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஊடகங்களிலும் மாணவர்களின் மதிப்பெண்களும் அவர்களின் ஒதுக்கீடும் பிரதனமாயுள்ளன.பிராயசித்தமாக கட்டுரை,கவிதை,ஒப்புவித்தல்,பாடல்,ஓவியம்,விளையாட்டு,வினாடி வினா...இத்யாதிகளில் போட்டிகள் நடத்தலாம்.இப்பொழுது,'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' போட்டியை' புதிய தலை முறை' நடத்துகிறது.ஆனால்,அரசுப்பள்ளிகள்,உதவி பெறும் பள்ளிகளின் பங்களிப்பு வெகு குறைவு!
By பி.ஸ்தனிஸ்லாஸ்
7/30/2012 8:22:00 AM
... உண்மைதான் ! பல்வேறு [ அகில இந்திய ] ] நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தரம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கிறது . ஏன் சென்னையில் உள்ள ஐ .ஐ. டி .-யிலும் & வேல்லூர் காலேஜில் படிக்கும் மாணவர்களில் சுமார் எண்பது சதவிகதம் மாணவர்கள் ஆந்த்ராவை சேர்ந்தவர்களே !! 1197 / 1200 வாங்கும் தமிழக மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அடிமட்டத்தில் இருப்பதற்கு காரணம் பள்ளிகள் மார்க்கு உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலைகள் ஆனதே காரணம் !இதில் சந்தேகமே இல்லை !
By ர.Krishanmurthy
7/30/2012 6:14:00 AM

வியாழன், 31 மார்ச், 2011

Katchatheevu and thamizh fishermen: Nallakannu article: கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!

நல்ல கட்டுரை. எனினும் இந்திய ஆரிய அரசு சிங்களத்திற்கு ஆதரவாக இருக்கும் வரை கட்சத்தீவை மீட்க முடியாது. இதனைத் தமிழ்நாட்டுச் சிக்கலாகக் கருதாமல் அனைத்து  மாநில - அனைத்துக் கட்சி - நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உணர்த்தி ஒன்றுபட்டுப் போராடி வெற்றி காண வேண்டும்.அதற்கான முயற்சியை எளியோர் ஏந்தல் தோழர் தலைவர் நல்லக்கண்ணு மேற்கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!


எண்ணூரிலிருந்து குளச்சல் துறைமுகம் வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை வளமுள்ளது தமிழ்நாடு. 13 மாவட்டங்கள், 591-க்கு மேலான கிராமங்களில் 15 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் இந்தத் தொன்மையான குடிமக்கள், நாட்டின் தென்கோடிக் கடற்கரையின் காவலர்களாகவும் பணியாற்றி வந்த பழங்குடியினர். வங்கக்கடலில் மீன் பிடித்தும், முத்துக் குளித்தும், மேற்கத்திய நாடுகளோடு வணிகத்தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளில், கடந்த பத்தாண்டுகளில்தான் கடலில் மீன் பிடிக்க முடியாமலும் கரையில் அமைதியாக வாழ முடியாமலும், இவர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் பயணித்துச் சேர்த்துவரும் கடல் பொருள்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியாகும்! ஆனால், இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு! கரையோரங்களில் குடியிருப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்களான மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு எல்லை விதிக்கப்படுகிறது. ஆழ்கடலில் பிடித்துவரும் மீனுக்கும் அளவு எல்லை போடப்படுகிறது. ஆனால், 15 பெரிய டிராலர்கள், மீன்பிடிக் கப்பல்களின் உரிமையாளர்களுக்கோ, ஆழ்கடலில் மீன் குஞ்சுகளைக்கூடப் பறித்து அள்ளிச் செல்லும் உரிமை வழங்கப்படுகிறது. வியாபாரிகளான கப்பல் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை மீன்பிடித் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் காலங்காலமாகச் செய்துவரும் மீனவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.உலகமயமாக்கல் கொள்கையால், மண்ணின் மைந்தர்களான மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. கப்பல் உரிமையாளர்களுக்குக் கடலே சொந்தமாக்கப்பட்டுள்ளது; கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், உயர்தரப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் வணிக வளாகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு, மீன்பிடித் தொழிலையே அன்றாட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள் மீனவர்கள். வேறு வழி? அவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாதே.1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். வலைகள் அறுத்தெறியப்படுகின்றன. படகுகளை வெட்டி அழிக்கிறார்கள். மீன்களை மீண்டும் கடலில் வீசிவிடுகிறார்கள். நிர்வாணப்படுத்தி தலைமன்னார் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள்.2010 முடிய - தமிழக மீனவர்கள் 571 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் 1,200 பேர், அழிக்கப்பட்ட விசைப்படகுகள் 300, சேதப்படுத்தப்பட்டவை 600. காணாமல் போனவர்களும் உண்டு; தலைமன்னார் சிறைகளில், கைதிகளாகச் சிலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பொருள் சேதமும், மீனவர்கள் அடைந்த பொருள் இழப்பும் ரூ. 25,000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நொந்து வேதனைப்படும், தமிழக மீனவர்களைப் பற்றி மத்திய அரசும், அமைச்சர்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தமிழக அரசும் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தமிழக மீனவர்களின் மீது ஒப்புக்குக் கண்ணீர்விட்டு ஆதரவைத் தெரியப்படுத்துவதோடு சரி.டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது.தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது -""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன். இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது.ஸ்ரீலங்கா - இந்தியக் கப்பல்கள் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இதுவரை என்னென்ன உரிமைகள் இருந்து வந்ததோ நம்முடைய படகுகள் அந்தப்பக்கம் செல்வதற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வருவதற்கும் கச்சத்தீவு பயன்படுத்தப்படுவதற்குரிய அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது.''ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டுவதோடு விட்டுவிடாமல், உயிரையும் பறிக்கும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு விரோதமான செயலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார்.பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது.இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு அறிவித்த பிறகும், தமிழக மீனவர்களை வேட்டையாடும் செயலை இலங்கைக் கடற்படை நிறுத்தியபாடில்லை. ஜெகதாப்பட்டினம் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று மீனவர் பிரச்னை குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோதும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்த்துக்கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளன. சில நாள்களுக்கு முன்னர்கூட ராமேஸ்வரம் மீனவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்தன.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ""இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.இந்திய மீனவர்களைக் கைது செய்யலாம் என இலங்கை அரசுக்குப் பிரதமரே பச்சைக்கொடி காட்டுவது வேதனை அளிக்கிறது. மேலும், பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், ""சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும் போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதேவேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன்பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இலங்கை மீனவர்களும், மீன்பிடித் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பது நியாயம்'' எனக் கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கூறுவதைக் கவனிக்கிறபோது, அவர்கள் இலங்கை ராஜபட்ச அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இருக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அப்படியானால், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி, உரிமைகள் பற்றிக் கவலைப்பட யாருமே கிடையாதா? அவர்கள் நாடில்லா அனாதைகளா? அந்நிய தேசத்துப் பிரஜைகளா?1987-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒருங்கிணைக்க அடிகோலியது. இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் இல்லை என்பதைப் பறைசாற்றியது. அந்த ஒப்பந்தத்தை இனவாத ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் காரணமாக இலங்கை நீதிமன்றம் ரத்து செய்தது.இலங்கை அரசு, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாயமாகுமா?எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத்தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இந்தியா வல்லரசாக வளர்கிறதா?

கொலைவெறிமிக்க இந்திய அரசு நல்லரசும்  ஆகாது; வல்லரசும் ஆகாது என்பதை உதயை நன்றாகத் தெரிவித்துள்ளார். தன் நாட்டு மக்களையே காவு கொடுத்து அண்டை நாட்டின் கைக்கூலியாக நடந்து கொள்ளும் ஓர் அரசை எந்த நாட்டு மக்களும் நல்லரசாகவோ வல்லரவாகவோ எக்காலததிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


Tuesday, February 08, 2011 7:26 AM IST


இந்தியா வல்லரசாக வளர்கிறதா?


அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.  ÷எந்த ஒரு துறையிலும் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்; மற்றவர்களை விடக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி காண வேண்டும்; எல்லாத் துறையிலும் நம்முடைய கட்டமைப்பே தலைசிறந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  ÷இதிலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?  ÷இந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?  ÷""2020-ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல; இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குகூட அல்ல; அது ஒரு பணி இலக்கு. இதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவோம்; வெற்றி காண்போம்...'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறார்.  ÷இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.  ÷அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை; ஆண்டானுக்கு அடிமையின் பணிவிடைபோல் இருக்கிறதே என்று கேட்கத் தோன்றியது.  ÷ஆனால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?  ÷அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள திரிவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முடியும் வரை மாணவர்களின் நடமாட்டத்தை அறிவதற்காக அவர்களின் காலில் ரேடியோ அதிர்வலை கொண்ட கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு ஏற்பட்டதும் இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.  ÷""போலி விசாவில் தங்கிப் படித்த மாணவர்களை முறைப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கருவி பொருத்தப்பட்டது...'' என்று ஹைதராபாதில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜூலியட் உர் குறிப்பிட்டுள்ளார்.  ÷இவ்வாறு இந்தியர்களை அவமானப்படுத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அந்த நாட்டில் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டபோது, மக்கள் ஆத்திரப்பட்டனர்; ஆனால் அரசு அமைதி காத்தது. இதேபோல அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களை இந்தியா சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா அதைச் சகித்துக் கொள்ளுமா?  ÷அப்போதே இதுபற்றிப் பேசி முடிவெடுத்திருக்க வேண்டாமா? அப்படிச் செய்திருந்தால் இந்த அவமதிப்பும், அவமானமும் தொடருமா?  ÷அண்மையில் மறுபடியும் இரண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரால் அவமதிக்கப்பட்டனர். ஐ.நா.வில் இந்தியாவில் நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கும் ஹர்தீப் சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர், தாம் ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக மதிப்புப் பெற்றவர் என்று எடுத்துக் கூறியும் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.  ÷இதையடுத்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் மிஸிஸிப்பி விமான நிலையத்தில் சேலை கட்டியிருந்த காரணத்துக்காக சேலையை அவிழ்த்துக் காட்டும்படி கேட்டுள்ளனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேள்வி மேல் கேள்வி கேட்டு கேவலப்படுத்தியுள்ளதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?  ÷அண்மையில் பாகிஸ்தான் லாகூரில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தொழில்நுட்ப அதிகாரி டேவிஸ், தன்னை வழிமறித்தவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டதால் 3 பேர் இறந்துள்ளனர். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், இச்செயல் வியன்னா தீர்மானத்தை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.  ÷இதே அமெரிக்காவின் அடியொற்றிவரும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இளைஞர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். 2010 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வே அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர்.  ÷அப்போது நமது வெளியுறவுத் துறை என்ன செய்தது தெரியுமா? ஆஸ்திரேலிய அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கே அறிவுரை கூறியது.  ÷""ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு நாடுகளில் உள்ள பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்...'' என்று நமது வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கூறினார்.  ÷இப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? வளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.  ÷இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ÷இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.  ÷ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.  ÷இங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?  ÷இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.  ÷1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.  ÷பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.