திங்கள், 14 மார்ச், 2011
demant for separate dept, for palm leaves: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
திங்கள், 3 ஜனவரி, 2011
borders of thamizh naadu: vengadam and kumari: வடவேங்கடமும் தென்குமரியும்
ஞாயிறு, 31 மே, 2009
புதன், 27 மே, 2009
தமிழ் எனும் சேயைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த புலவர்களும் அரசர்களும் பலராவர். தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறியச் செய்த உயர்ந்தோர் சிலராவர். அவர்களுள் ஒப்பற்ற ஒருவராயிருந்து செந்தமிழ்க் காவலராய் விளங்கியவர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார். கும்பகோணம் இவரைப் பெற்றெடுத்த திருத்தலமாகும். அமிர்தலிங்கம்-பார்வதி அம்மையார் தம்பதிக்கு மகவாக 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி பிறந்தார்.
இவர் குடந்தை "நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி'யில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்காக "டாக்டர் ஜி.யு.போப் நினைவு' தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
1933-ஆம் ஆண்டு முதல் 1935 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் 1943-ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையையும் பெற்றார்.
வடசொல் நீக்கி, செந்தமிழிலேயே பேசவும், எழுதவும் கூடிய ஆற்றலைப் பெற்றதைப் போன்று ஆங்கிலத்திலும் திறன்மிக்கவராகத் திகழ்ந்தார் சிதம்பரநாதன்.
சென்னை புதுக்கல்லூரி மற்றும் பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1948-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராகவும் பொறுப்பேற்றார். தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் முதன் முதலில் துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவருக்குச் சிலப்பதிகாரமே உயிர் மூச்சாய் அமைந்தது. அந்நூலை மாணவர்களுக்கு அவர் எடுத்தியம்பும் பாங்கே தனி பாண்டித்யம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்களுக்குக் கருத்துரைகளைச் சொல்வதைக் காட்டிலும் ஆய்வு முறையில் அவர்கள் அறிந்து உணருமாறு செய்வதையே கொள்கையாகக் கொண்டார்.
இவர் எழுதிய நூல்கள் ஏராளம். அவற்றுள் தமிழோசை, முன்பனிக்காலம், இளங்கோவின் இன்கவி, தமிழ் காட்டும் உலகு, செங்கோல் வேந்தர், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், கட்டுரைக்கொத்து ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உலக அரங்கில் தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்ட ‘An Introduction To Tamil Poetry'
1956-ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தி நம் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தார். 1960-ஆம் ஆண்டு ரஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார். 1961-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழின் சிறப்பைப் பறைசாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்' எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றினார். 1959-ஆம் ஆண்டு முதல் 1965 வரை ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டார். அதன் பயனாய் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியத்தைத் தமிழுலகுக்கு அர்ப்பணித்தார்.
தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவராகவும், தமிழகப் புலவர்குழுத் தலைவராகவும் செயல்பட்டார் சிதம்பரநாதன். பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழகச் செனட்டிற்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே. 1964-ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது. ஆசிரியர் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளைக் களைய இவரது செயல்பாடு பேருதவியாக இருந்தது.
இவ்வாறு வேறு பல பொறுப்புகளையும் ஏற்று அந்தந்த காலகட்டங்களில் செய்த அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்' எனும் சிறப்புப் பட்டம் தந்து கெüரவித்தது. இவர் எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும் தம் இறுதிக் காலத்தில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியின் முதல்வராக 1965-ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார். மிகச்சிறந்த தமிழ்ச் சான்றோர்களான வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், ஞானியாரடிகள் போன்றவர்களால் பெரிதும் பாராட்டிப் புகழப்பட்டார்.
""கிராமப்புற மக்களே நம் மொழியை இயல்பாகப் பேசித் தமிழைப் பேணி, பாதுகாத்து வருகின்றனர்; நகர்ப்புறங்களில் வாழ்வோர் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளனர்; இவர்களால் தமிழ் சீரழிந்து வருகிறது என்பது உண்மை'' என டாக்டர் சிதம்பரனார் அழுத்தமாகக் கூறியுள்ள கருத்து அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்னைத் தமிழை அகிலமெங்கும் பரப்பித் தமிழுலகுக்குப் பெருமை சேர்த்த இவரது மணிவிழா 1967-ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவருக்குக் கிடைத்த இத்தகு பெருமைகளைக் காலதேவனால் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல், அதே ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி தமிழ் மக்களுக்கு ஆறாத்துயரை அளித்துவிட்டு இவ்வுலகை விட்டே அவரை ஈர்த்துச் சென்றுவிட்டான். அவர்தம் மறைவு தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ்மொழி ஆகிய அனைத்துக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது தூய தமிழ்த்தொண்டினை என்றும் மறவாது பேணிக் காக்க வேண்டியது தமிழ் நெஞ்சங்களின் தலையாய கடமையாகும்.

தமிழகத்தில் 1812-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை கல்விச் சங்கம் என்பது தமிழ்நாட்டில் ஆங்கிலமும் தமிழும் அறிந்த ஒரு புதிய மாணவத் தலைமுறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்கள் நிறைய பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி, ஆங்கிலமும் தமிழும் கிறிஸ்தவ மதத் தத்துவங்களும் அறிந்த மாணவர்களைப் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலிருந்து வெளிவந்த மாணவர்களில் பலருக்குத் தமிழ்மொழியின் பழைமையையும் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றையும் ஐரோப்பியப் புலவர்களின் வரலாறு போன்று உலகத்தினருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர்தான் சைமன் காசிச் செட்டி என்ற பல்துறை அறிஞர்.
இவர் 1859-இல் "தமிழ் புளூராக்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் அவர்களின் வரலாறு குறித்தும் ஒரு நூல் எழுதினார்.
புராண மயமாகச் சொல்லப்பட்டு வந்த தமிழ்ப் புலவர்களின் கதைகளை ஒரு வரலாற்று நூலாக்கும் முதல் முயற்சி இதுதான். கி.பி. 45-இல் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த புளூராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகளுக்கெல்லாம் மூலமாக அமைந்து பெயர் பெற்றவரான புளூராக்கை தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் நூலுக்குப் பெயராக இட்டு மகிழ்ந்தார் சைமன் காசிச் செட்டி. இவர் 1807-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஈழவளநாட்டில் கற்பிட்டி என்னும் ஊரில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். கற்பிட்டி வடமேல் மாகாணத்தில் உள்ளது. புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் மணியக்காரராகவும் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் முதலியாராகவும் கடமை செய்தார். 1838-ஆம் ஆண்டு முதல் 1845-ஆம் ஆண்டுவரை இலங்கைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். அரசியலில் ஈடுபட்டுப் பல பணிகளில் உழைத்தபோதும் காசிச் செட்டி, தமது மொழிக்கும் நாட்டுக்கும் தம் எழுத்துகள் மூலம் சிறப்புத் தேடித் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ்த்தொண்டை அவர் வாழ்ந்த காலத்துத் தமிழறிஞர்கள் போற்றியுள்ளனர். பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் குறித்தும் அறிவியல் பூர்வமான தகவல்களைத் தரவேண்டும் என்பதே தமது விருப்பம் என்று புளூராக் நூலின் ஆங்கில முகவுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அத்தகைய ஆய்வுக்குத் தேவையான நாட்டு வரலாறுகளோ புலவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளோ தமிழ்மொழியில் இல்லை. எனவே, புராணமயமான செய்திகள், செவிவழிச் செய்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவற்றிலுள்ள மிகையான புனைவுகளை நீக்கிவிட்டுத்தான் இந்த வரலாற்றை உருவாக்கியதாகக் கூறுகிறார். எனவே, தாம் எழுதிய வரலாறு குறைபாடுகள் நிறைந்ததாக இருக்கும் என்று எழுதுகிறார். ஆயினும் வருங்காலத் தலைமுறையினர் எதிர்காலத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சரியான வரலாற்றை உருவாக்க இந்நூல் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். "ஆசியா ஆய்வுகள்' என்னும் பத்திரிகை திருவள்ளுவர் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்று கூறியது. இதைக் காசிச் செட்டி மறுக்கிறார். சிவவாக்கியர், திருமழிசையாழ்வார் வாழ்ந்த காலமான 8-ஆம் நூற்றாண்டு என்றனர். சிவவாக்கியர் பாடலில் முகம்மதியரைப் பற்றிய குறிப்பு வருவதால் தமிழ்நாட்டில் முகம்மதியர் படையெடுப்புக்குப் பிந்தைய காலத்தவராகத்தான் வாழ்ந்திருக்க முடியும் என்று கருத்துரைக்கிறார். மண்டலபுருடரின் காலத்தைப் பற்றிக் கூறுமிடத்து, தமது நிகண்டின் ஒன்பதாம் தொகுதியில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டுவதால் கி.பி. 1508 முதல் கி.பி.1530 வரை ஆட்சி புரிந்த ராயரின் காலமே மண்டலபுருடரின் காலம் என்கிறார். இதேபோன்று "ஞானவெட்டியான்' என்ற நூலைத் திருவள்ளுவர் எழுதினார் என்று கூறுவதும், "அல்லி அரசாணிமாலை' புகழேந்திப் புலவர் எழுதியது என்று கூறுவதும் அவ்விரு பெரும் புலவர்களை இழிவுபடுத்தியதாகும் என்று கருத்துரைக்கிறார். 1848-ஆம் ஆண்டில் "தமிழ்நூற் பட்டியல்' என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வீரசோழியம், மாறனலங்காரம், சீறாபுராணம் போன்ற நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூலின் ஆசிரியர்களைப் பற்றி இவருக்கு எந்தச் செய்தியும் தெரிந்திருக்கவில்லை. 1876-ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் புகார் காண்டத்தை உரையுடன் வெளியிட்ட தி.ஈ.இராகவாச்சாரியார், "சேரமான் பெருமாணாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்' என்று அச்சிட்டார். 1929-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரையை பேராசிரியர் உரை என்று அச்சிட்டுவிட்டுப் பின்னர் திருத்தி அமைத்து வெளியிட்டனர். 1920-இல் உ.வே.சா. பரிபாடல் நூலைப் பதிப்பித்தபோது அதன் உரையாசிரியர் யாரென்று அறியாமல் இருந்தார். ரா.ராகவையங்கார்தான், பரிபாடலின் உரையாசிரியர் பரிமேலழகர் என்பதை நிறுவுகிறார். அதனை உ.வே.சா.வும் ஏற்றுக்கொள்கிறார். இத்தகைய வரலாற்றையெல்லாம் நோக்கும்போது காசிச் செட்டிக்கு மேற்கூறிய நூல்களின் ஆசிரியர்கள் பெயர் தெரியாமலிருந்தது வியப்பானதல்ல. வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகளிலும் புலமையாளராகத் திகழ்ந்தார். "கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள்' "பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு' ரேணர் எழுதிய இலங்கை வரலாறு பற்றிய நூலின் மொழிபெயர்ப்பு போன்ற கட்டுரைகளும் நூலும் அவருடைய வரலாற்று ஆர்வத்தைக் காட்டுகின்றன. "முக்குவர் வரலாறு' "இலங்கை இசுலாமியரின் பழக்கவழக்கங்கள்', "சிலோன் கெஸட்டியர்' போன்ற நூல்கள் இவருடைய சமூகவியல் அறிவை வெளிக்காட்டுவன. மாலத்தீவு மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும் வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, மலையகராதி (1840) என்னும் அகராதி ஆகியன இவருடைய மொழியியல் அறிவை விளக்குகின்றன. காசிச் செட்டி, 1860-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். இத்தகைய வலுவான அறிவியல் துறைகளின் துணையுடன் இவர் ஆக்கித் தந்த தமிழ்ப் புலவர் வரலாறான "புளூராக்' பிற்காலத்தில் அறிவியல் பூர்வமாகத் தமிழ் ஆய்ந்த அறிஞர்களுக்கெல்லாம் ஒளிவிளக்காக இருந்தது என்று சொன்னால் அது மிகையன்று.