பெ.மணியரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெ.மணியரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

 

ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!



தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள் எனக்கு வரலாற்றுக் கொடைகள்!

தமிழீழத்தில் வங்கி அதிகாரியாக இருந்த கனகேந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இறங்கி ஈழவேந்தன் ஆனார். வேலையை இழந்தார். இலங்கையில் வாழ முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் நடத்திய தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பாக உரையாற்றினார். நாங்கள் முன்மொழிந்த தன்னுரிமைத் தீர்மானத்தை ஆதரித்தார். பிராமணியம் குறித்து மறக்க முடியாத ஒரு கருத்தைச் சொன்னார். தமிழ்ச் சிவநெறியின் ஆன்மிகச் சான்றோர்களாகத் தடம் பதித்துள்ள திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. இத்தனைக்கும் ஞானசம்பந்தர் வடமா பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் என்றார்.

தமிழீழத்திற்கு சனநாயக வழிமுறைகளில் தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வந்த ஈழவேந்தன் அவர்களை, 2000ஆம் ஆண்டு திசம்பர் 4 அன்று, வாச்பாயி தலைமையிலான பா.ச.க. – தி.மு.க. கூட்டணி ஆட்சி, தமிழ்நாட்டை விட்டு – இலங்கைக்கு நாடு கடத்தியது. அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இலங்கைக்குச் சென்ற ஈழவேந்தன் அவர்கள், விடுதலைப்புலிகள் ஆதரவுடன் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தமிழீழத்தில் இயங்க முடியாத அளவுக்கு சிங்கள ஆதிக்க அரசின் கெடுபிடிகள் அவரை நெருக்கிய நிலையிலும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அவர் கனடா சென்று வாழ்ந்து வந்தார். அங்கு தமிழீழ விடுதலைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அங்கும் தனது இறுதிக் காலம் வரையிலும், முதுமையையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதியின், “பிம்சுடெக் பேரழிவில் தமிழர் தாயகங்கள்” நூலின் அறிமுக நிகழ்வு, 2019இல் கனடாவில் நடந்தபோது, அதில் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

தமிழ்நாட்டின் தனித்தமிழ் – மொழியியல் அறிஞர் – பேராசிரியர் – முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள் ஈழவேந்தன் அவர்களின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் உள்ளார்கள்.

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங்கி வாழாமல் தமிழினம், தமிழ் மொழி, தமிழீழம் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, இறுதிவரை ஈகவேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இல்லத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.  

 பெ. மணியரசன்தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

===============================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam ===============================

வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்


ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்!

வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று

(14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார்.

நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப்

படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை பற்றி உரையாற்றினார். இவ்வுரை 1966-இல் நடந்தது. ஆற்றோட்டமான தெளிவான பேச்சு!

பிற்காலத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை மிக

நுட்பமாகவும், துல்லியமாகவும் விளங்கிக் கொண்டு, மக்களுக்கு விளக்கினார்.

தமிழ்ச் சைவை சித்தாந்தத்திற்கும் வள்ளலாரின் அருட் பெருஞ்சோதி கோட்பாட்டிற்கும்

இடையே உள்ள நுட்பமான வேற்பாடுகளையும் விளக்குவார். அதே போல் வள்ளலாரின்

சன்மார்க்கத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டையும் சிறப்பாக விளக்குவார்.

சிறந்த எழுத்தாளர். பல நூல்கள் எழுதியுள்ளார். சிக்கலான மெய்யியல் கருத்துகளை எளிதல் புரிந்து கொள்ளும் படி விளக்கும் ஆற்றல் பெற்றவர். வள்ளலாரின் மனித சமநிலைக் கோட்பாட்டிற்கும் முதன்மை கொடுப்பார் ஊரன் அடிகள்.

ஊரன் அடிகள் காட்டிய வழியில் வள்ளலாரின் தமிழர் மெய்யியலை மக்களிடம் மேலும்

மேலும் கொண்டு செல்வதே, ஐயா அவர்கட்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்!

தவத்திரு ஊரன் அடிகளாரின் நினைவைப் போற்றுவோம். தெய்வத் தமிழ்ப் பேரவை

சார்பில் ஐயா அவர்களுக்குப் புகழ் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

( பெ. மணியரசன்)

ஒருங்கிணைப்பளார், தெய்வத் தமிழ்ப்பேரவை.

வியாழன், 21 ஜனவரி, 2021

“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

 அகரமுதல




“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

சிதம்பரம் ‘வள்ளலார் பெருவிழா’ வில் தீர்மானம்!


தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார் பெருவிழா”வில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஆகியன இணைந்து நடத்திய “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா, தை 07, 2052 /20.01.2021 மாலை கீரப்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இப்பெருவிழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்க, இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞான. சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பரதூர் செயலாளர் மாணவர் செ. பொன்னிவளவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேட்டுக்குப்பம் திருமதி. பிரேமா திருவருட்பாவை இசைபட ஓதினார். சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம், சிலம்பம், இளவட்டக் கல் தூக்குதல் நிகழ்ச்சி ஆகியன பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இப்பள்ளியின் ஆசிரியர் இரா. எல்லாளன் இவ்விளையாட்டுகளை ஒழுங்கு செய்தார்.

புவனகிரியில் அமைந்துள்ள வள்ளலார் சபையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தொண்டாற்றி வரும் கீரப்பாளையம் திரு. நா. நல்லதம்பி அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. பெருவிழாவின் நோக்க உரையை தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் திரு. வே. சுப்ரமணிய சிவா நிகழ்த்தினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், விழாப் பேருரையாற்றினார். புதுக்கோட்டை மேலை சிவப்புரி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் தா. மணி, ஆவடி – தமிழ்ச் சைவப் பேரவைத் தலைவர் தமிழ்த்திரு. கலையரசி நடராசன், கீரப்பாளையம் கற்ப சித்தர் திரு. நாகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இறைவழி இயற்கை வாழ்வியல் நடுவம் முன்னணிப் பொறுப்பாளர் திரு. வே. இளவரசன் நன்றி நவின்றார். வள்ளலார் பெருவிழாவைத் தமிழ்த்தேசியப் பேரியக்க காட்டுமன்னார்குடி நகரச் செயலாளர் திரு. சிவ. அருளமுதன் மற்றும் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ. குபேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பெருவிழாவில், பின்வரும் இரண்டு தீர்மானங்களும் பங்கேற்பாளர்களின் பலத்த கையொலிகளுடன் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1 : வள்ளலார் இராமலிங்க அடிகள் சிந்தனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துக!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் உரிமை இயக்கங்களும் ஆன்மிகச் சான்றோர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்று, இந்த ஆண்டு முதல் தைப் பூசத் திருநாளை தமிழ்நாடு தழுவிய அரசு விடுமுறையாக அறிவித்ததற்குத் தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பெருவிழா நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது!

தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது; மெய்யியல் வகையிலும், அறிவியல் முறையிலும் புதிய படிநிலைகளைத் தொட்டுக் காட்டுவது ஆகும்!

நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும்!

அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்பதாகும். அதனால்தான், வள்ளலார் அவர்களைத் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் என்று அழைக்கிறோம்.

வள்ளலார் சிந்தனைகள் குறித்து ஆழமான – விரிவான ஆய்வுகள் வெளிவந்தால், தமிழினத்தின் பெருமையை உலகம் அறிய வாய்ப்பு ஏற்படும். மேலும், உலக மன்பதைக்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமையும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகள் பெயரில் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தி, அவரது பன்முகச் சிந்தனைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தல் வேண்டும் என இப்பெருவிழா தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2 : மல்லர் கம்ப வீரர்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும்!

தமிழர் மரபில் தோன்றிச் சோழப்பேரரசு காலத்தில் தமிழர்களிடையே விரிவாகப் பயிலப்பட்ட வீர விளையாட்டுகளில் மல்லர் கம்பம் முகாமையானது. தாராசுரம் கல்வெட்டு இதற்கு அழுத்தமான சான்றாக விளங்குகிறது.

தமிழ்நாட்டை மராட்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் மல்லர் கம்பம் வீர விளையாட்டை மராட்டியர்கள் தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் சென்று, மராட்டியர்களின் தேசிய விளையாட்டாகவே வளர்த்திருக்கிறார்கள். மகாராட்டிர மாநிலத்தில் மல்லர் கம்பம் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் விளையாட்டுகளின் பட்டியலில் மல்லர் கம்பமும் சேர்க்கப்பட்டு, சிறப்பான முறையில் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இடைக்காலத்தில், தமிழ்நாட்டில் மங்கியிருந்த இந்த வீர விளையாட்டுக் கலையை விழுப்புரத்தைச் சேர்ந்த உலகதுரை என்ற பெருமகனார் மீட்டெடுத்துப் பல மாணாக்கர்களை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மல்லர் கம்பம் வீர விளையாட்டு பொங்கல் விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் பெருமளவில் விளையாடப்படுகின்றன.


ஆயினும், இந்த வீர விளையாட்டுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் தராமல் இருப்பது வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு மராட்டிய மாநில அரசைப் போல மல்லர் கம்பம் வீர விளையாட்டையும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு, மாவட்ட அளவிலும் தமிழ்நாடு அளவிலும் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்குவோருக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்ற விளையாட்டுகளைப் போல மல்லர் கம்பத்தையும் பயிற்றுவிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பெருவிழா கேட்டுக் கொள்கிறது!

விழாவில், வள்ளலார் தொண்டர்களும், இறைநெறிச் சான்றோர்களும், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

 

திங்கள், 30 நவம்பர், 2020

பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! – பெ.மணியரசன்

 அகரமுதல

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக!

கரூர் பசுபதீசுவரர் கோயில், அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் முதலான திருக்கோயில்களுக்கு கார்த்திகை 10, 2051 / 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாகத் திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். மகுடையால்(கொரோனாவால்) தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.

அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அருச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அருச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அருச்சகர்களுக்குத் தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.

எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பெ. மணியரசன்)
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

 

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்? பெ.மணியரசன் கண்டனம்

 அகரமுதல

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில்

கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்த பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம்  ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் மகுடை(கொரோனா) நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான நேர்ச்சியில்(விபத்தில்) 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாய மடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலைக்கு 10 நூறாயிரம் உரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்குத் தலைக்கு 5 நூறாயிரம் உரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. கேரள முதலைமச்சர் கோழிக்கோடு மருத்துவமனைக்குச் சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாற்றில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளைப் பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வருக்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் மா.பொ.க.(சி.பி.எம்.) முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல்  இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விசயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்குச் செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு  25 நூறாயிரம் உரூபாய் வீதம் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற நேர்ச்சிகள்(விபத்துகள்) இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு இடைக்கால மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

 


வியாழன், 28 மே, 2020

தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்! த.தே.பே. தீர்மானம்!


வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!

த.தே.பே. தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051  / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை.செயபால், க. முருகன், முழுநிலவன் முதலான தலைமைச் செயற்குழுத் தோழர்களும், குடந்தை தீந்தமிழன், தமிழ்த்தேசியன், தஞ்சை இலெ. இராமசாமி, பூதலூர் தென்னவன், திருச்சி வே.க. இலக்குவன், மதுரை அருணா, சிவா, கதிர்நிலவன், கோவை இராசேந்திரன், ஓசூர் ப. செம்பரிதி, சுப்பிரமணியன், சென்னை வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், இளங்குமரன், சிதம்பரம் சிவா, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு, புதுச்சேரி இரா. வேல்சாமி, மகளிர் ஆயம் தோழர்கள் அருணா, மேரி முதலான தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்றனர்.
முன்னதாக, அண்மையில் மறைவுற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி செயல்பாட்டாளர் தோழர் மதியழகன், பொதுக்குழு தோழர் குபேரன் அவர்களின் தந்தை புலவர் ஆதிமூலம், குடந்தை தோழர் வளவன் அவர்களின் தாயார் திருவாட்டி கோ. அம்சவல்லி, தஞ்சை ஓவிய ஆசிரியர் இளங்கோ ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்!
தீர்மானம் – 2
வெளிமாநிலத் தொழிலாளிகளை
நிலையாக வெளியேற்ற வேண்டும்
தீர்மானம் – 3
தமிழ்நாடு உரிமை பறிபோவதைத்
தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்க வேண்டும்!
தீர்மானம் – 4
அரசு மதுக் கடைகளை மூடுக!