புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 நவம்பர், 2019

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


அகரமுதல

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே!

 சங்கத்தமிழ் வேந்தர்கள் புலவர்களை ஆதரித்ததுடன் தாங்களும் பெரும் புலவர்களாக இருந்தனர். அதுபோல், சோழவேந்தன் கரிகாலனின் தாய்மாமாவான இரும்பிடர்த்தலையார் சிறந்த புலவராக இருந்துள்ளார். இவர் பாடிய 26 அடிகள் கொண்ட பாடல் ஒன்று புறநானூற்றில் 3ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் 11ஆவது அடி
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
என்பதாகும்.
இரும்பிடர்த்தலை:  இரும்பிடர் = பெரிய கழுத்து; பிடர்த் தலை இருந்து = கழுத்திடத்தே இருந்து; அஃதாவது யானையின் பெரிய கழுத்தருகே அமர்ந்து போரிட்டவன். இவ்வாறு புலவர் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் இவர் இயற் பெயர் அறியாமையால் ‘இரும்பிடர்த்தலையார்’ என்றனர்.
இப்புலவர் பெருந்தகை ‘கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி’ என்னும் மன்னனைப் பாராட்டி வாழ்த்துவதே இப்பாடல். இந்த அடியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளதே! பாண்டியனின் குடிப்பெயரில் ஒன்றான வழுதி என அழைக்கப்பெறும் வேந்தனின் முழுப்பெயர் தெரியவில்லை. வலிமையான கையில் ஒளிவீசும் வாளினை ஏந்திய பெருமைக்குரிய பெயர் பெற்ற வழுதி என இவனைப் புலவர் பாராட்டுகிறார்.
பாடப்படுபவரது வெற்றி, புகழ், வீரம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணை எனப்படும். இப்பாடல் பாடான் திணையைச் சேர்ந்தது. செவியில் அறிவுரை கூறுவதைக் குறிப்பிடும் செவியறிவுறூஉ என்னும் துறையைச் சேர்ந்தது இப்பாடல். இப்பாடலில் வேந்தனைப் பாராட்டுவதுடன் வாழ்த்தி அறிவுரையும் கூறுகிறார். இவ்வறிவுரைகள் எக்காலமும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்துவன.
 உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற (அடிகள் 1-2)
என இப்பாடலைத் தொடங்குகிறார்.
உவவு மதி என்பது முழுமதியை-பெளர்ணமியை-க் குறிப்பதாகும். முழுமதி போலும் வட்டவடிவிலான உயர்ந்த வெண் கொற்றக் குடை நிலைபெற்ற கடலை எல்லையாகக் கொண்ட மண்ணகத்தை -நாட்டை- நிழல் உடையதாக ஆக்கும் பெருமைக்குரியவர்களின் வழித்தோன்றல் எனப் பாராட்டியுள்ளார். வேந்தர்களின் வெண்கொற்றக் குடை அவர்களுக்கு நிழல் தருவதற்கல்ல. மக்களைத் துன்பங்களில் இருந்து காப்பதற்கே என்கிறார். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தத்தம் வீட்டு மக்களுக்குக் குடையாக விளங்குகிறார்களே தவிர, நாட்டு மக்களுக்கு அல்ல.
அடுத்து,
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக! (அடிகள் 3-5)
என்கிறார்.
பாதுகாப்பான முரசு(ஏம முரசம்) ஒலி எழுப்பி முழங்க, ஆட்சிச் சக்கரத்தைச் சிறப்பாகச் செலுத்தும், பிறர்க்கு உதவும் ஈர நெஞ்சம் கொண்ட கொடை உள்ளம் மிக்க பாண்டியர்களின் மரபினர் எனப் பாண்டியர்களின் கொடைச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறுகிறார். நேமி என்பது சக்கரம். இங்கே ஆட்சிச்சக்கரம். நேஅ என்பதிலிருந்துதான் நேயம் பிறந்து நேசமாகியது.
அரசனைப்போல் சிறப்புடைய அரசியையும் பாராட்ட வேண்டுமல்லவா? எனவே,
 செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (அடி 6)
என்பதன் மூலம் குற்றமற்ற கல்போன்ற உறுதியான உள்ளங் கொண்ட சேயிழையின் தலைவன் எனக் கூறி பாண்டியப் பேரரசியின் சிறப்பைப் பாராட்டுகிறார். செயிர் தீர்=குற்றம் நீங்கிய; சேயிழை = அழகிய அணிகலன்களை அணிந்த பெண்ணாகிய அரசி. எனவே, தரத்திலும் வடிவிலும் தோற்றத்திலும் செய்முறையிலும் குறைபாடு எதுவும் இல்லாத அணிகலன்களைச் செய்துள்ள சிறப்பை இதன் மூலம் அறியலாம். கற்பு என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலைப்பாட்டிலிருந்து மாறா உறவுநிலைத் தன்மையை மட்டும் கருதக்கூடாது. கல்போன்ற மன உறுதி; இல்லறத்திலும் அரசறத்திலும் இடையூறுகள் வரும் பொழுது எதிர்த்து நின்று நீக்கும் கல்போன்ற வினை உறுதி எனக் கொள்ள வேண்டும். மன உறுதியும் வினை உறுதியும் மிக்க அரசி எனப் போற்றுகிறார்.
தொடர்ந்து வேந்தன் அமர்ந்திருக்கும் யானையின் சிறப்பைக் கூறுகிறார்.
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! (அடிகள் 7-13)
பொன்னால் ஆக்கப்பட்ட நெற்றிப்பட்டத்தையும் (பொன்னோடை) புள்ளியையும்(புகர்)நெற்றியில் (நுதல்) உடைய செறிவான வலிமை(துன்னருந் திறல்) மிக்க, மதநீரால் மணக்கும் (கமழ்தல்=மணத்தல், கடாஅம்=மதம்)யானை என யானையைச் சிறப்பிக்கிறார். மணிகள் கோக்கப்பட்ட கயிற்றால் பிணிக்கப்பட்ட யானை என யானைக்கு அழகுபடுத்தும் நிலையைப் புலவர் குறிப்பிடுகிறார்.
எயிறு என்றால் பல் எனப் பொருள். இங்கே மருப்பை – தந்தத்தை-க் குறிக்கிறது. எயில்=மதில். பகைவர் மதிலில் உள்ள கதவை யானை, தன் கொம்பாகிய மருப்பினால் – தந்தத்தினால் குத்தி வீழ்த்தும் செயல் வலிமை கூறப்படுகிறது.
‘மருந்தில் கூற்றம்’ என்பதை நிலப்பகுதியாகக் குறிப்பிட்டு அதனை வென்ற வேந்தன் என்று பொதுவாகக் கூறுகின்றனர். ஆனால், சிலர் ஏற்படப்போகும் சாவிற்கு மருந்து இல்லாத – வழியில்லாத வகையில் எதிரிகளை அழிக்கும் வேந்தன் என்கின்றனர். தனக்கு மாற்று இல்லாத கூற்றுவனைப் போன்றவன் என்கின்றனர் சிலர். எல்லாப் பொருளும் வேந்தனைச் சிறப்பிப்பனவே!
பாடலின் மையக் கருத்தாக வேந்தனிடம் புலவர் இரும்பிடர்த்தலையார்
நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்(அடி 14)
என வேண்டுகிறார்.
நிலப் பகுதி, நடுக்கத்தால், அதிர்ச்சியால் இடம் மாறுவதும் நிலத்திற்குள் மறைவதும் உண்டு.  இவ்வாறான இயற்கைப் பேரிடரைக் குறிப்பிட்டு அறிவுரை வழங்குகிறார். “நிலம் மறையும் சூழல் எழுந்தாலும் சொன்ன சொல் தவறாதே!” என்கிறார். அஃதாவது நிலப்பெயர்வு போன்று ஆட்சி மாறும் சூழல் ஏற்பட்டாலும் வாக்கு தவறாதே என்கிறார். நாளொரு வேளையும் புதுப்புது உறுதி தந்து மறக்கும் இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரை இது.
தமிழ்வேந்தர்களின் சொல் திறம்பாமை குறித்துப் பிற புலவர்களும் பாராட்டியுள்ளனர்.
 நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே;(பதிற்றுப்பத்து 63, அடிகள் 6-7)
என நிலம் பெயர்ந்தாலும் – நில நடுக்கம் ஏற்பட்டாலும் – சொன்ன சொல் பொய்க்கும் படி நடக்காதவன் எனச் சேரலாதன் அந்துவஞ்சேரல் பண்பைக் கபிலர் பாராட்டுகிறார்.
வேந்தனின் தோற்றத்தைக் குறிப்பிடும் பொழுது, பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த காலையுடையவன், சந்தனம்  பூசி உலர்ந்த குறுக்கு(விலங்கு) அகன்ற விரிந்து பரந்த மார்பினை உடையவன் என்கிறார். (மக்களைப்போல் நேர் நிற்காமல் குறுக்காக நிற்கும் உயிரினத்தை மக்கள் விலங்கு என்றனர்.)
 பொலங் கழல் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியன் மார்ப (அடிகள் 15-16)
என்கிறார் புலவர்.
இவ்வரிகள் மூலம் வழுதியின் தோற்றத்தை மட்டுமல்ல தமிழகத்தின் சிறப்பையும் உணரலாம். ஆடவர் காலில் அணிவதன் பெயர் கழல் எனவும் அதனைப் பொன்னால் செய்யும் அளவிற்குப் பொன் விளைந்திருந்தது, நகை செய்யும் நுட்பம் பெருகியிருந்தது, பொன்னை உருக்கிப் பயன்படுத்தும் வினைத்திறன் சிறந்திருந்தது எனவும் நாம் அறியலாம்.
 ஊர்இல்லஉயவுஅரிய,
நீர்இல்லநீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை (அடிகள் 17-23)
என இரவலர் வரும் வழியிடைத் துன்பத்தைக் கூறுகிறார்.
வரும் வழியில் உண்ணவோ, தங்கவோ எந்த ஊரும் இல்லை. நீர் அருந்திப் பிழைக்கலாம் என்றால் நீர் நிலையும் இல்லை. பொறுத்தற்கு இயலாத துன்பம் தரும் நீண்ட பாதையாக உள்ளது. வீரர்கள் அம்பு எய்தி இறந்தவர்களின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள்(பதுக்கை) நடப்பதற்குத் துன்பம் தரும் வகையில் உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் கற் குவியல்களில் உள்ளமையால் அவற்றைத் தின்ன முடியாமல் அழகான சிறகுகளும் வளைவான வாயும் உடைய பருந்துகள் இலவர மரத்தில் இருந்து வருந்துகின்றன. பருந்துகள் அமர்ந்துள்ள இலவர மரங்கள் நிறைந்த பல பிரிவுகளாக உள்ள பாதைகள் வழியாகவே இரவலர்கள் வருகின்றனர். இத்தகைய துன்பங்களைத் தாங்கிக் கொண்டு வேந்தனிடம் கேட்காமலே பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வருகின்றனர்.
இங்கே ‘பார்வல்’ என்ற சொல் சிறப்பிற்குரியது. மேலும் பல பாடல்களில் பார்வல் பாசறை என்பதுபோல் இச்சொல் வருகின்றது.
பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப் (மதுரைக் காஞ்சி அடி 231)
உயரப் பறக்கும் பருந்தும் பறக்க இயலா உயரத்தில் அமைக்கப்பட்ட ‘பார்வல்’ என்கிறார் மாங்குடி மருதனார்.
தொலைக்கண்டுணர்வி(RAdio Direction And Ranging-RADAR), வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளைப் பயன்படுத்தித் தொலைவில் உள்ள போர் விமானங்கள், கப்பல்கள் முதலான நடமாட்டத்தைக் கண்டுணரும் கருவியமைப்பாகும். பருந்துகளும் பறந்து செல்ல இயலா உயரத்தில் இருந்து தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டுணர்ந்துள்ளனர் தமிழர்கள். ‘பார்வல்’ என்றால் தொலை உணர்வுப் பார்வை வல்லமை மிக்க அமைப்பு. எனவே. ‘இராடார்’ என்பதற்கான ஒற்றைச் சொல்லாக இதனைக் கையாளலாம். இன்றைய அறிவியல் நுட்பக் கருவி செய்வதை அன்றைக்கு ஆட்கள் செய்துள்ளனர். எனினும் அதற்குத் துணைக்கருவிகள் இருந்திருக்க வேண்டும். அவை பற்றிய விவரம் தெரியவில்லை.
நிறைவாக,
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.  (அடிகள் 24-26)
என்று புலவர் பாடலை முடிக்கின்றார்.
முகக் குறிப்பை உணர்ந்து அவர்கள் வறுமையைப் போக்கும் வள்ளல் தன்மை உடையவன் என்பதால் வேந்தனிடம் இரவலர்கள் விரும்பி வருவர் என்கிறார். இரவலர்கள் தங்களின் இன்மையைச் சொல்லக்கூட நாணுவர். எனவே,அந்த நிலைக்கு அவர்களைத் தள்ளாத உயர்ந்த உள்ளம் கொண்டவன்; முகக்குறிப்பால் அவர்கள் தேவையை உணரும் உளவியல் அறிந்தவன்; வையகத்தார் நாடி வரும் வகையில் வள்ளண்மை மிக்கவன் என இரும்பிடர்த்தலையார், பாண்டிய வேந்தன் வழுதியைப் பாராட்டுகின்றார்.
அன்றைக்கு ஆள்வோரை வழிநடத்தும் புலவர்கள் இருந்தனர். இன்று வழிநடத்தும் புலவர்களும் இல்லை. யாரும் வழி நடத்தினாலும் கேட்டு நடக்கும் ஆட்சியாளர்களும் இல்லை!
இலக்குவனார் திருவள்ளுவன், தொடர்பிற்கு: thiru2050@gmail.com
தினச்செய்தி

சனி, 6 ஜூலை, 2019

புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்




புறநானூறு சொல்லும் வரி நெறி!
மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா?
புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர் துறந்தவர். இதனால் இருவரும் நட்பிற்கு இலக்கணமாகக் கூறப்படுவர். புறநானூற்றில் நான்கு, அகநானூற்றில் 1, நற்றிணையில் 1 என அவரின் 6 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரிவிதிப்பு எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கூறிப் பாடல் இயற்றினார். இப்பாடல் புறநானூற்றில் 184 ஆவது பாடலாக அமைந்துள்ளது. அப்பாடல் பொருளை நாமும் அறிந்து அகம் மிக மகிழ்வோம்.
அந்தப் பாடலும் விளக்கமும் வருமாறு:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், 10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!
       இதன் பொருளைப் பார்ப்போம்:
காய்ந்து விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால் ‘மா’ என்னும் சிறிய அளவு கூட இல்லாத மிகச் சிறிய நிலத்தில் விளைந்த நெல், அதற்குப் பல நாள் உணவாக வரும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே உண்ணுமாறு மேயவிட்டால் என்ன ஆகும்? யானை தின்னும் நெல்லின் அளவை விட அதன் கால்களில் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவு மிகுதியாகும்.
அரசன் வரி திரட்டும் நெறிக்கேற்ப முறையாக மக்களிடம் வரி பெற்றால், மக்கள் துன்பமில்லாமல் கொடுக்கும் வரியால் கோடிக்கணக்கில் பொருள்களைத் திரட்டுவான். இதனால் நாடும் தழைக்கும் மக்களும் பயனுறுவர்.
அரசன் அரசியல் அறிவில் குறைந்தவனாக, அறமுறை அறியாச் சுற்றத்துடன் ஆரவாரமாக, மக்கள் அன்பு கெடுமாறு முறையின்றி நாள்தோறும் பெருமளவு வரியை வற்புறுத்திப் பெற முற்பட்டால் என்ன ஆகும்? யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடைய மாட்டான். அவனால் நாடும் கேடுறும்.
இப்பாடல் மூலம், யானைக்கு உணவு வழங்கும் முறையைப் புலவர் பிசிராந்தையார் வேந்தனுக்கு உணர்த்தி அறமுறைப்பட்ட வரி திரட்டலே பெருஞ்செல்வம் தரும் என உணர்த்தினார். பாண்டியன் அறிவுடை நம்பியும் உணர்ந்து அதற்கேற்ப வற்புறுத்தி வரி திரட்டும் முறையைக்கை விட்டு வரி நெறியைப் பின்பற்றினார்.
கணக்கில் ‘மா’ என்பது இருபதில் ஒரு பங்கு (1/20) என்னும் அளவைக் குறிக்கும். நில அளவையில் 100 குழி கொண்ட வயல் பரப்பைக் குறிக்கும். 16 சாண் அளவு 1 கோல் என்றும் 18 கோல் அளவு 1 குழி என்றும் கூறப்பெறும். அஃதாவது சதுர அளவையில் 288 சாண் அளவு 1 குழி.
‘செய்’ என்பது சங்கக்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற நில அளவு. இதனைச் சிலர் 100 சிறுகுழி என்கின்றனர். இது தவறாகும். ‘மா’ என்னும் நில அளவைவிடச் ‘செய்’ என்னும் அளவு பெரிது என்பதை இப்பாடலே உணர்த்துகிறது. அவ்வாறிருக்க 100 குழி அளவு கொண்ட ‘மா’ என்னும் நிலத்தை விட 100 சிறுகுழி கொண்ட ‘செய்’ என்னும் அளவு எப்படிப் பெரிதாக இருக்க முடியும். ‘செய்’ என்பது பெரு நில வயலைக் குறித்திருக்கிறது.
இதன் மூலம் சிறிய அளவான ‘மா’ அளவு நிலத்தில் பயிராவதை முறையாக யானைக்குக் கொடுத்தால் யானைக்குப் பல நாள்களுக்கு உணவாக அமையும்.. மாறாக 100 வயல் பரப்பில் யானை தானே போய் உண்ணும் படி விட்டால் அங்குமிங்குமாகச் சென்று யானை உண்பதால் அதன் காலில் பட்டு அழிவது உண்ணும் அளவை விட மிகுதியாக இருக்கும். இவ்வாறு உவமையைக் கூறி வரி நெறியை உணர்த்துகிறார் புலவர்.
சங்க இலக்கியப் பாடல்கள் திணை என்றும் துறை என்றும் வகுக்கப்பட்டிருக்கும். ஒருவரின் வலிமை, சிறப்பு, புகழ் முதலானவற்றைப் பாடும் ‘பாடாண்திணை’ப் பிரிவில் இப்பாடல் உள்ளது. குறைகளை எடுத்துக்கூறி செய்யவேண்டியனவற்றைச் செவியில் அறிவுறுத்தும் ‘செவியறிவுறூஉ’ என்னும் துறையில் இப்பாடல் அடங்கும். மன்னராட்சியாக இருந்தாலும் மன்னருக்கு அறிவுரை கூறுவதையே ஒரு பிரிவாக வகுத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். மக்களாட்சியில் அதற்கான இடம் எங்கே இருக்கிறது?
இப்பாடல் மூலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழ்நாட்டில் வரிவிதிப்புக் கொள்கைகளும் அவற்றுக்கான நூல்களும் இருந்துள்ளன எனப் புரிந்துகொள்ளலாம். இச்சிறப்பை நாடாளுமன்றம் மூலம் உலகிற்கு உணர்த்திய அமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்!
இலக்குவனார் திருவள்ளுவன்
மின்னம்பலம், 06.07.2019

வியாழன், 18 ஜூலை, 2013

புறநானூற்றில் யானை அறிவியல் : Science of Elephant in Pura Naarnuuru

புறநானூற்றில் யானை அறிவியல் : Science of Elephant in Pura Naarnuuru



புறநானூற்றில் யானை அறிவியல்
  புறநானூறு இலக்கிய நூலாக இருந்தாலும் பல்வகை அறிவியல் செய்திகளும் இடம் பெற்றுள்ள சிறந்த தொகுப்பு நூலாகும்.   புறநானூறு மக்கள் இலக்கியம். எனவே,  மக்களோடு தொடர்புடைய விலங்கினங்கள் பற்றிய குறிப்புகள் இதில் இடம் பெற்றிருப்பதில் வியப்பில்லை. அணில், ஆடு/மறி/ மடங்கல், ஆமை, உடும்பு, எருமை, எலி, எறும்பு, கழுதை, காளை/ ஏறு/ பகடு/ எருது, குதிரை/மா/ பரி/ கலிமா/ கலிமான்/ புரவி/ இவுளி/ குரங்கு/கலை/மந்தி/கடுவன், சிங்கம்/மடங்கல், நத்தை/நந்து/ நரி, நாய்/ஞமலி, நீர்நாய், பசு//ஆன்/நிரை/ கறவை, பல்லி, பன்றி/கேழல், பாம்பு/நாகம்/ அரா/அரவு, புலி/உழுவை/ ஒருத்தல்/வரிவயம், பூனை/வெருகு/ வெருக்கு, மான்/கலை/ கவரி/ பிணை/கடமான்/ மறி/ புல்வாய்/ இரலை, முதலை/கரா/கராம், முயல், முள்ளம்பன்றி/முளவு, யானை/களிறு/பிடி/ வேழம்/பகடு/கைம்மா/கைமான் எனப் பல்வகை விலங்கினங்கள் புறநானூற்றில் குறிக்கப் பெற்றுள்ளன. புறநானூற்றில் பரவலாகக் குறிக்கப்பெறும் விலங்கினம் யானை ஆகும். யானைகளை  வளர்க்கவும் போர்த்தொழிலுக்குப் பழக்கவும் யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பழக்கவும் நன்கு அறிந்திருந்தனர் பழந்தமிழர்கள். உயரமாக இருத்தலால் உம்பல், கரு நிறம் என்பதால் கரி, துதிக்கையுடைய விலங்கு என்பதால் கைம்மா, பெரிய விலங்கு என்பதால்  பெருமா, கையையுடைய மலை போன்ற தோற்றத்தைக் கொண்ட விலங்கு என்பதால் கைம்மலை எனவும் மேலும் இவை போன்ற காரணப் பெயர்களும் தமிழர்களால் யானைக்குச் சூட்டப்பட்டவையாகும். இவ்வகைப்பாட்டு அறிவியலறிவு, யானை முதலான விலங்கறிவியலில் நம் தமிழ் முன்னோர் சிறப்புற்றிருந்தனர் என்பதற்கு    எடுத்துக்காட்டாகும். புறநானூற்றில்  யானைபற்றி வரும் குறிப்புகள், அவற்றின் தன்மை,   உணவுப்  பழக்கம் முதலியனவற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. அத்தகைய குறிப்புகளுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.
யானையின் தோற்றம் பற்றியன
  யானையின் கை பெரியது -  பெருங் கை யானை (இரும்பிடர்த்தலையார் : புறநானூறு 3.11)
  யானையின் கண் சிறியதாக இருக்கும் - சிறுகண் யானை (காரிகிழார்: புறநானூறு 6.13; உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 170.10; மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் : 316.12; மதுரை நக்கீரர் : புறநானூறு 395.18 )
  யானையின் மருப்பு ஒளிரும் வெண்மை மிக்கது - ஒளிறு மருப்பின் களிறு (நெட்டிமையார்: புறநானூறு 15.9); இலங்கு மருப்பு யானை (எருமைவெளியனார் : புறநானூறு 303.9)
  யானையின் மருப்பு நீண்டு வளைந்து இருக்கும்; யானை முகத்தில் புள்ளிகள் இருக்கும் - உயர்மருப்பு யானைப் புகர் முகத்து (மதுரைத் தமிழக்கூத்தனார் : புறநானூறு 334.8)
  யானை மருப்பு சொரசொரப்பாக இருக்கும் - பிணர் மருப்பு யானை: புறநானூறு 387.29)
  நெடியதோற்றம் கொண்டது யானை - நெடுநல் யானை (காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் : புறநானூறு 57. 11 ; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்: புறநானூறு 72.4; இளவெளிமான்: புறநானூறு 162.6)
 மலைபோல் தோற்றமளிக்கும் பெரிய யானை  - மலை .... யானை (குறுங்கோழியூர் கிழார்: புறநானூறு 17.34-35); வரைபோல் யானை (பெருஞ்சித்திரனார்: புறநானூறு 238.9) யானையும் மலையின் தோன்றும் (இடைக்காடனார் : புறநானூறு 42.2)
யானையின் காலடி உரல் போல் இருக்கும் - கறையடி யானை  (மாறோக்கத்து நப்பசலையார் : புறநானூறு 39.1 ; (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 135.12)
யானையின் காலடி பரந்துபட்டிருக்கும்-பாவடியானை (வெள்ளெருக் கிலையார்: புறநானூறு 233.2)
யானையின் செவி, முறம் போல் இருக்கும் -முறஞ்செவி யானை (பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 339.13)
யானையின் கை கரும்பனை போன்று பெரியதாக இருக்கும் -  இரும்பனை யன்ன பெருங்கை யானை (அள்ளூர் நன்முல்லையார்: புறநானூறு 340.7)
யானையின் நெற்றி செந்நிறமாகவும் இருக்கும் - செந்நுதல் யானை (பரணர் : புறநானூறு 348.9)
யானையின் கால்கள் பருத்து இருக்கும்-பணைத் தாள் யானை
(மதுரைப் படைமங்க மன்னியார் : புறநானூறு 351.1)
மதம் கொண்ட யானையின் அடிச்சுவடு தடாரிப்பறையின்   நடுவிலுள்ள கண்பகுதி போன்று இருக்கும்.
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண்  (கழாத் தலையார் : புறநானூறு 368.14-15)
  யானையின் கை பெரியது - கருங்கை யானை (பரணர்: புறநானூறு 369.2)
யானைச்சித்திரம்
புலவர் குறுங்கோழியூர்க்கிழார்,
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க (புறநானூறு 22.1-9)
என  அடுத்தடுத்து யானை பற்றிய காட்சிச்சித்திரத்தை நமக்கு அளிக்கிறார்.
  இப்பாடலில், துதிக்கையை அசைத்து ஆட்டிக்கொண்டு  தலையைத் தூக்கிக் கொண்டு உயர்ந்த நடையுடன், அந்நடைக்கேற்ப அதன்மீது அணியப்பெற்றிருக்கும் இருபுற மணிகளும் மாறி மாறி  ஒலிக்க,  உயர்ந்த மருப்புகளுடன், பிறை போன்ற நெற்றியுடன், சினம் மிகு பார்வையுடன், பரந்த காலால் அடி எடுத்து வைத்து,  பருத்த கழுத்துடன் நடந்து வருகையில் மதநீர் மணத்தால்  மலைத்தேன் எனத் தேனீக்கள் ஆரவாரிக்கும்  வலிமை மிக்க இளங்களிறு, கட்டப்பட்ட கம்பத்தில் தான் நின்ற இடத்திலேயே அசை நடைபோட்டுக்கொண்டுள்ளது என யானையின் முழு உருவத்தை நமக்குப் பல வகையில் புலவர் படம் பிடித்துக்காட்டுகிறார்.
யானையின் திறம் பற்றியன
  போர்க்களத்தைத் தனதாக்கிக்கொள்ளும் திறன் மிக்கது யானை- களங்கொள் யானை (பொருந்தில் இளங்கீரனார் : புறநானூறு 53.5) 
  யானைகள் விரைவாகச் செல்லும்-கடும்பகட்டு யானை (சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்: புறநானூறு 265.8)
  போர்க்களத்தில் தடுத்தாலும் தொடர்ந்து முன்னேறும் யானை - தொடர்கொள் யானை  (ஒரூஉத்தனார் : புறநானூறு 275.7)
  போர்வினைப் பயிற்சி உடைய இனச்சிறப்பு  உடையது யானை – சினப்போர் இனக்களிற்று யானை (ஔவையார்: புறநானூறு290.1-2)
  யானை மதம் பொருந்தி இருக்கும் - களியியல் யானை (வெண்ணிக் குயத்தியார் : புறநானூறு 66.3 ; கடாஅ யானை (பரணர்: புறநானூறு 141.12 ; 142.4; கபிலர் 145.3)
யானைகள் வினைமாட்சியுடன் திகழ்கின்றன - மாண்வினை யானை (மதுரை வேளாசான்: புறநானூறு 305.6)
யானைகளுக்குப் போர்வினைப் பயிற்சி அளித்திருப்பர் - வினை நவில் யானை (கபிலர்: புறநானூறு 347.11)
யானையின் வலிமை பற்றியன
கொல்லும் வலிமை மிகுந்த யானை-கொல் களி(ற்)று (நெட்டிமையார்:புறநானூறு 9.7.)
   வீரத்தன்மையைச் சினம் மிகு கண்ணால் வெளிப்படுத்தும் கொல்லும் யானை-கடுங்கண்ண கொல்களிற்றால் (கபிலர்: புறநானூறு14.1.) கடுங்கண் யானை (கபிலர் : புறநானூறு 337.10)
  முதிர்ந்த  கொம்பினை உடைய கொல்லுங் களிறு - கோடு முற்றியகொல் களிறு (குறுங்கோழியூர் கிழார் : புறநானூறு 17.17)
  யானை வலிமை மிக்கது - மைந்துடை யானை (கூடலூர் கிழார் : புறநானூறு 229.18)
  அங்குசத்திற்கு அடங்காத யானை - நிறப்படைக்கு ஒல்கா யானை (நொச்சிநியமங்கிழார் : புறநானூறு 293.1)
யானையை அழகுபடுத்தல்
  யானைக்கு அணிகலன்கள் அணிவித்து  அழகு செய்வர் - அணி பூண் அணிந்த யானை  (ஒளவையார் : புறநானூறு 101.4 )
  யானையின் நெற்றியில் பொற்பட்டம் அணியப்பெற்றிருக்கும்- பூநுதல் யானை (நெட்டிமையார்:புறநானூறு12.2; யானைப் புகர்முகத்து  அணிந்த பொலம்புனைஓடை (மதுரைத் தமிழக்கூத்தனார்: புறநானூறு 334.9)
  யானையின் மருப்பில் பொற்பூண் அணிவிக்கப்பெற்றிருக்கும் - பொற்கோட்டு யானை (உலோச்சனார்  : புறநானூறு 377.23)
  யானைக்குப் பொன் அணிகலன் அணிவர்-பொன்னணி யானை  (மாங்குடி மருதனார் : புறநானூறு 24.21;  ஆவூர் மூலங்கிழார்: புறநானூறு 177.3;) இழையணி யானை (வண்பரணர் : புறநானூறு 153.2 ; பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 323.6)
  யானைக்குக் கச்சு அணிவிப்பர் - வம்புஅணி யானை  (மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 37.12; பாடியவர் பெயர் தெரிந்திலது: புறநானூறு 333.17)
(வெற்றி பெற்ற புகர் நுதலை உடைய) யானையின் மீது இடப்படும் மணி அதன் இருபுறத்தாள்வரை தாழ்ந்து அமைந்து மணி யோசையை எழுப்பும் -
தாள் தாழ் படு மணி இரட்டும்  பூ  நுதல்   ஆடியல்
யானை (பெருந்தலைச் சாத்தனார்: புறநானூறு 165.6-7)
படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
யானையின் கழுத்தில் மணி கட்டியிருப்பர் - படுமணி யானை (கபிலர்: புறநானூறு 201.4)
மன்னர்களும் வள்ளல்களும் யானைகளைப் பரிசாக வழங்குவர்
  இரவலர்க்கு யானைகளைப் பரிசாக வழங்குவது தமிழ் மன்னர்கள் வழக்கம் - இரவலர்க்கு ஈத்த யானை (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு 129.6)
  கொங்கரைப் போர்க்களத்தில்  எதிர்த்த பொழுது அவர்கள் போட்டு விட்டுப் போன வேல்களின் எண்ணிக்கையை விட மிகுதியான யானைகளை வேள் ஆய் அண்டிரன் பரிசாக அளித்தான்.
அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே
(உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : புறநானூறு  130.5-7)
  பகைவர்களின் யானைகளைக் கொன்று அவற்றின் முகபடாத்தில் உள்ள பொன்னைக் கொண்டு  தாமரைப்பூக்கள் செய்து பாணர்க்குப் பரிசாக வழங்குவதைப் பண்டைத்தமிழர்  மரபாகக்  கொண்டிருந்தனர்.
ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டி
(மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 126.1-3)
  யானை பற்றிய உவமைகள்
  வீரனின் வீரப் பாய்ச்சலை விளக்குவதற்கு, வரிவயம் பொருத வயக் களிறு போல (ஔவையார் : புறநானூறு 100.7) எனப் புலியுடன் சண்டையிட்ட யானையின் வலிமையை ஒப்பிடுகிறார் புலவர் ஔவையார்.
  யானை பற்றிய உவமைகளுள் மேலும் ஒன்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
யானை புக்க  புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே (புறநானூறு 184.10-11)
என அறிவுரை கூறுகிறார் புலவர்  பிசிராந்தையார்
  நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால் ஒரு மா அளவுகூட இல்லாச் சிறுநிலத்தில் விளைந்த நெல் பல நாள்களுக்கு உணவாக வரும். அதே நேரம், நூறு  செய் நிலமாக இருந்தாலும், யானையே புகுந்து உண்டால், அதன் வாயில் புகுவதை விடக் காலில்   மிதிபட்டு அழியும் நெல் மிகுதியாகும். இதைப்போல், வரி நெறிக்கிணங்க வரி பெற்றால், கோடிக்கணக்கில் பொருள்  திரட்ட முடியும்;  அதனால், நாடு  தழைக்கும்.  ஆனால், முறையற்று வரி பெற்றால்  யானை புகுந்தநிலம் போல் தானும் பயன்பெறாமல், மக்கள் அழிவிற்கும் காரணமாகும். இவ்வுவமை மூலம்,  வரி திரட்டுதல் குறித்த பொருளியல் நெறி அக்காலத்தில் இருந்ததை உணரலாம்.
கடந்த நூற்றாண்டு  மேனாட்டுப் பொருளியலறிஞர்கள் கட்டாய வரி  பெறுவதைத் திருட்டாகவும் கொள்ளையாகவும் குறிப்பிடுகின்றனர்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (குறள் 552) என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.  எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நெறிமுறைக்கு உட்பட்டே வரிவிதிப்பு முறை இருந்ததை உணரலாம். இவ்வரி முறை நெறிமுறைக்கிணங்க இருக்க வேண்டும் என்பதைத்தான் புலவர் பிசிராந்தையார்  கூறுகிறார். யானை உண்ணும் முறையைக் கொண்டு அருமையான அறநெறிப்பாடல் நமக்குக் கிடைத்துள்ளது. புறநானூறு தரும் பரிசுகளுள் இதுவும் ஒன்று.
யானை பற்றிய பிற செய்திகள்
  யானை மூங்கிலைத் தின்னும் - கழைதின் யானை (சோழன் நலங்கிள்ளி : புறநானூறு 73.9;  பசித்துப்பணை முயலும் யானை 
(சாத்தந்தையார்  : புறநானூறு  80.7)
துன்பத்தால் வருந்தும்  யானை இடியோசைபோல் பிளிறும்  - அலமரல் யானை உருமென முழங்க (கோவூர் கிழார் : புறநானூறு 44.5)
  பாகர் இல்லாத யானை மதுச் சகதியில் ஆடும் - நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை ( கோவூர்கிழார்  : புறநானூறு 68.16)
யானைகள் நல்லினச்சால்புடையனவாக இருந்தன - இனம் சால் யானை (ஒருசிறைப் பெரியனார் : புறநானூறு 137.1; கழாத்தலையார்: புறநானூறு 270.2)
கட்டப்பட்டுள்ள கம்பத்தை அறுத்துக்கொண்டு ஓட முயன்று பெருமூச்சு விடும் யானை - கந்துமுனிந் துயிர்க்கும் யானை (ஆவூர் மூலங்கிழார் : புறநானூறு 178.1)
யானையின் கழுத்தில் வெற்றி மாலை சூடியிருப்பர் - தார் அணி யானை  (கபிலர்: புறநானூறு 201.13)
படைக்கொடியையும் வெற்றிக்கொடியையும் யானைகள்மீது கட்டுவர் - கொடிநுடங்கு யானை (ஐயூர் முடவனார் : புறநானூறு 228.10)
யானைகள் மீது மரங்களை ஏற்றி வருவர் - யானை தந்த முளிமர விறகில  (மதுரைப் பேராலவாயர் : புறநானூறு 247.1); கான யானை தந்த விறகின் (மாற்பித்தியார்: புறநானூறு 251.5) மதத்தால் யானை மயங்கிப் பெருமூச்சு விடும் - மையல் யானை அயாவுயிர்த்து (ஆவூர் மூலங்கிழார்  : புறநானூறு 261.7)
போர்க்களத்தில் வேந்தர்கள் யானை மீது ஏறிப் போரிடுவர்- வேந்தூர் யானை (ஆவூர் மூலங்கிழார் : புறநானூறு 301.15 ; கோவூர் கிழார்: புறநானூறு 308.5)
கருங்கல் பாறைகளுக்கிடையே மேயும் யானைகள் -  கருங்கல் லிடைதோ, றானிற் பரக்கும்  யானைய (நரிவெரூஉத் தலையார்:  புறநானூறு 5.1-2)
பட்டத்து யானை அல்லது தலைமை யானையை அண்ணல் யானை என்பர் - அண்ணல் யானை (நெடும்பல்லியத்தனார், புறநானூறு 64.8 ; ஔவையார்: புறநானூறு 93.13; கபிலர்: புறநானூறு 115.5; மாறோக்கத்து நப்பசலையார்: புறநானூறு 126.20; உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூறு 130.5; சாத்தந்தையார் புறநானூறு 287.5; தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்: புறநானூறு 326.14; மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்: புறநானூறு 388.15 ; ஔவையார்: புறநானூறு 390.28)
யானையைக் கட்டுப்படுத்துவதற்கான அங்குசம் நூல் இலக்கணத்தின் படியும் அழகு புனைந்தும் உருவாக்கப்பட்டது என்பதை பொன்னியற் புனைதோட்டி (கபிலர்: புறநானூறு 14.3) என்னும் தொடர் குறிப்பிடுகிறது. அங்குசம் நூல் இலக்கணத்தின்படி உருவாக்கப்பட்டது எனில், யானை வளர்ப்பிற்கும் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவற்றுள் என்னென்ன அறிவியல் உண்மைகள் இருந்திருக்குமோ!
 யானை பற்றிய மேலும் பல குறிப்புகள் புறநானூற்றில் உள்ளன. அவை இடம் பெற்றறுள்ள பாடல் எண்கள் வருமாறு :-
வேழம்:  23, 152, 369, 373,  374, 394;  பிடி: 40, 44, 98, 129, 151, 181, 234, 303, 308, 345, 369, 389; களிறு:  7, 15, 16, 17, 22, 23, 26, 30, 31, 40, 41, 46, 55, 69, 94, 98, 100, 103, 104, 114, 125, 131, 135, 140, 159, 220, 227, 239, 240, 277, 301, 302, 306, 312, 325, 335, 336, 341, 342, 345, 368, 394;ஒருத்தல்: 52, 190.
 இவை யாவும் யானையின்  உருவம், இயல்பு,  வீரம், ஆற்றல் முதலான சிறப்புகளைக் குறிப்பன. இவற்றை வெறும் குறிப்புகளாகப் பார்க்கக் கூடாது. சான்றாக, மெல்லிய தலையை உடைய இளமையான பெண்யானையைக் கயந்தலை மடப்பிடி (புறநானூறு 303.8)   எனப் புலவர் எருமை வெளியனார்  குறிப்பிடுகிறார். யானையின் தலை, எலும்புகள் இன்றி மென்மையாக இருக்கும். இந்த அறிவியல் உண்மையையே இச் சொல் குறிப்பிடுகின்றது. அறிவியலில் யானைபற்றிப் படிக்கும் பொழுது தக்கவாறு பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலும் சிறக்கும்! தமிழியலும் சிறக்கும்! 
 இலக்கியக் குறிப்புகளுள் உயர்வு நவிற்சி யாவை, இயல்புரை யாவை எனப் பகுத்து அறிந்து அவற்றுள் தெரிவிக்கப்படும் அறிவியல் உண்மைகளை அடையாளம் காண வேண்டும். மக்கள் இலக்கியங்களில்  அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப் படுகின்றன என்றால், அவை மக்களுக்கு நன்கறிந் தனவாகத்தானே இருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் அக்காலத் தமிழ் அறிவியல் வளத்தை அறிந்து பரப்ப வேண்டும். தமிழ் இலக்கியக் கடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 355)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழியில் ஆராய்ந்தால் தமிழ் கூறும் அறிவியல் வளத்தை உணரலாம்.
அருந்தமிழ் உரைக்கும் அறிவியல் பரப்புவோம்!
அறிவியல் பரப்பி அருந்தமிழ் வளர்ப்போம்!
 
- இலக்குவனார் திருவள்ளுவன்