ஏன் இந்தப் புத்தகம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏன் இந்தப் புத்தகம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி)

ஏன் இந்தப் புத்தகம்? 2/2

1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு எதிரானது எனக் கருதினர்.

இத்தகைய இடஒதுக்கீட்டு ஆதரவு – எதிர்ப்புப் போராட்டங்களுடன், பொருளாதார அடிப்படையிலான 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களை ஒப்பிட்டால், நடந்த போராட்டங்கள் மிகச் சொற்பமே.

போதிய புரிதல் இன்மையா? நாட்டின் பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்பைக், கல்வி உரிமையைப் பாதிக்கும் சட்டத் திருத்தத்தைப் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டதேன்? இடஒதுக்கீடு பற்றிப் போதிய விழிப்புணர்வு சமூகத்தில் இல்லையா? ஏன் இந்த அமைதி?

எப்படியாகினும், அந்த அமைதி குலைக்கப்பட வேண்டிய அமைதி
இந்தியாவின் பெரும்பான்மை மக்களான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிலவும் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற போராட்ட உணர்வின் வெளிப்பாடே இந்தப் புத்தகம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், இந்நூலின் பதிப்பாளர் தோழர் பிரபாகரன் அழகர்சாமி, பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடிகளைத் தொகுத்து, ஒரு வெளியீடு கொண்டுவருவோம் என்றார். அதுவே ஆரம்பம். அவரின் எண்ணமே இந்நூலிற்கு மூலவித்து. அவரே முழு முதற்காரணம். அழகாகவும் செறிவாகவும் நூலைப் பதிப்பித்துள்ளார்.

நூலின்உள்ளடக்கம்

ஆங்கிலத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்திருந்த அறிஞர்களின் கட்டுரைகள், சட்டத் திருத்தத்தை எதிர்த்த நாடாளுமன்ற உரைகள், பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்த நீதிபதி இரவீந்தர் பட்டின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை எதிர்த்து வழக்காடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற வாதம், தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் உள்ளிட்ட பல தலைவர்களின் அறிக்கைகள், கருத்தரங்க உரைகள் பலவற்றின் தொகுப்பாக இந்த வெளியீடு அமைந்துள்ளது.

உயர்சாதி ஏழைகள் எனும் பெயரில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டில் எவ்வித நியாயமும் இல்லை என்பதைத் தரவுகளின் மூலமும், தருக்கத்தின் மூலமும், வரலாற்று உண்மைகள் மூலமும் வாசகர்களுக்கு உணர்த்தவே இந்நூல். மேலும், இந்த இடஒதுக்கீடு உயர்சாதி ஏழைகளுக்குப் பயனளிக்கும் என இந்த இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள் சொன்னாலும், அவர்களுக்கும் இது எதிரானது என்பதையும் தரவுகள் மூலம் சுட்டிக்காட்டும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பெரியாரிய-அம்பேத்துகரியப் பார்வையில் பொருளாதார இடஒதுக்கீட்டின் கேட்டைக் காத்திரமாக விமர்சிக்கும் கட்டுரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டைத் தீவிரமாகக் கொள்கைரீதியாகச் சாடும் திமுக, இராசத(RJD), அமஇமுக(AIMIM), இஒமுகூ(IUML) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட, ஆனால் அதிலிருந்து ப.சா, ப.ம.,பி.பி.வ.(SC, ST, OBC) மக்களை விலக்கி வைத்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மைத் தீர்ப்பை விதந்தோதும் கட்டுரை, தாராளமய-உலகமய-தனியார்மயத்திற்குப் பின்னர் உருவாகி வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் பின்னணியில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டாலும், அதன் நோக்கத்தை, நாடாளுமன்றங்களில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட முறையைக் கண்டித்த மார்க்குசியப் பொதுவுடைமை, பிசு ஜனதா தளம், தெலங்கானா இராட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஊடகங்களிலும் பொருளாதார இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான அல்லது நடுநிலையான கருத்துகளை வெளியிட்ட போதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைத் தீவிரமாக எதிர்த்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், ஏழைப் பார்ப்பனர் எனும் கட்டுக்கதையை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் தகர்த்தெறிந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் சமத்துவ உணர்வை மையமாகக் கொண்டு பொருளாதார இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் கட்டுரைகள், நீதிமன்றங்களில் நிலவும் பிரதிநிதித்துவத்தைச் சுட்டிக்காட்டி, அதன் பின்னணியில் பொருளாதார இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகள், நேரடி அரசு வேலைகள் குறைக்கப்பட்டுக் கூடுதலான ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்தும் சூழலில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், மேனாள் நீதிபதிகளின் கட்டுரைகள், இந்தியாவின் முன்னணி சமூகவியல், பொருளாதார அறிஞர்களின் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வகைக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

சில கட்டுரைகள் வெளிப்படுத்தும் கருத்துகளில் எங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், பொருளாதார இடஒதுக்கீட்டைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த பார்வைகளை வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துள்ளோம்.

செண்பகம் துரைராசன் வழக்கு (1951) தொடங்கி, எம். ஆர். பாலாசி வழக்கு (1962), இந்திரா சஃகானி வழக்கு (1992), எம். நாகராசு வழக்கு (2006), சருனெயில் சிங்கு வழக்கு (2018) முதல் தற்போதைய பொ.ந.பி. (EWS) வழக்கு (2022) வரை இடஒதுக்கீட்டின் போக்கைத் தீர்மானிப்பதில் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு வரரையறை அவை, அதன் பின்னர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பங்களிப்பு பல கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளன.

காகா கலேல்கர் குழு அறிக்கை, மண்டல் குழு அறிக்கை, அவானூர் குழு அறிக்கை, சட்டநாதன் அறிக்கை, மாநாயகர் சின்ஃகோ குழு அறிக்கை, அசய் பூசன் பாண்டே குழு அறிக்கை எனப் பல குழுக்களின் அறிக்கைகளின் ஊடாக இடஒதுக்கீட்டின் வரலாறு பேசப்பட்டுள்ளது. பி.வி.வ.,ப.சா.,ப.ம.,(OBC, SC, ST) இடஒதுக்கீட்டைச் சீரழிக்கச் செய்யப்பட்ட முயற்சிகளும், பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட சூழ்ச்சிகளும் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. பழங்குடியினரான உத்திராகண்டு பார்ப்பனர்களின் கதையும் இடம்பெற்றுள்ளது.


நூலமைப்பு
இடஒதுக்கீடு வரலாறு பற்றிய நான்கு அறிமுகக் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூலின் அடுத்த பகுதியில், ஐந்தாவது கட்டுரை முதல் 95ஆவது கட்டுரை வரை, பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டையும், இடஒதுக்கீட்டை ஆதரித்த நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2019 சனவரி 8ஆம் நாள் அன்று எழுதப்பட்ட கட்டுரையில் தொடங்கி, நாள் வாரியாகப் பயணித்து, வழக்கறிஞர்களின் உச்சநீதிமன்ற வாதங்கள், நீதிபதி இரவீந்தர் பட்டு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு, அதன் பின் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான விமர்சனக் கட்டுரைகள் எனப் பரிணமித்து, 2023 மார்ச்சு மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் வரை ஏறுவரிசையில் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதிப் பகுதியில், 96ஆவது கட்டுரை முதல் 105ஆவது கட்டுரை வரை, 10% கொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்த அமைப்புகள், தலைவர்களின் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலினின் வீரியமான உரைகளோடு நூல் முடிகிறது.


பங்களித்தோர்:
பெரும்பான்மை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், பலரின் பங்களிப்போடு வெளிவந்துள்ளது. ஏழைகளுக்கான இடஒதுக்கீடு என்றால் அனைவருக்கும் உண்டுதானே என்ற கேள்வி கேட்டவரின் பங்களிப்பும் உள்ளது. நூல் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களின் பட்டியல் நூலின் இறுதிப் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது. நூல் உருவாக்கத்தில் பங்குபெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் உள்ளிட்ட, இந்நூலுக்காக உழைத்த அனைவருக்கும், மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தேவைப்பட்ட நேரத்தில் எல்லாம் வழங்கிய தோழர் நலங்கிள்ளிக்கும் நன்றி.

பொருளாதார இடஒதுக்கீடு எனும் சமூக அநீதிக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை ஒன்றுதிரட்டும் ஒரு கருத்தாயுதமாக இப்புத்தகம் விளங்கும் என்ற நம்பிக்கையில்.
தோழமையுடன்,
சு. விசயபாசுகர்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன்.

இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல் குறித்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளும் தொகுக்கப்பெற்று
“உயர்சாதியினருக்கு 10%
பொ.ந.பி.(EWS) இட ஒதுக்கீடு சரியா? தவறா?”
என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர்:
சு. விசயபாசுகர்.

ஏன் இந்தப் புத்தகம்? என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை ஈண்டு பகிர்கிறேன்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அன்பர் விசயபாசுகர் எழுதுகிறார்…

ஏன் இந்தப் புத்தகம்?

2022 நவம்பர் 7ஆம் நாள் நண்பருடன் அமர்ந்திருந்தேன். பெரியாரிய, அம்பேத்துகரிய, மார்க்குசிய அறிமுகம் கொண்டவர் அவர். தேர்ந்த வாசகரும் கூட. உயர் சாதி ஏழைகளுக்குப் பொருளாதார வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒன்றியப் பாசக 2019 சனவரி மாதம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் நாள் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் முன்னரே வந்து விட்டன.

விடுதலை இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான சிக்கான இடஒதுக்கீடு குறித்த மிக முக்கியமான வழக்கு இது, பாசக அரசின் சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்குமா என இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். 10% பொ.ந.பி. (Economically Weaker Sections) இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவிக்குமாயின், இந்தியாவின் பெரும்பான்மை மக்களாகிய ஒடுக்கப்பட்ட (SC, ST, OBC) மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக இருக்கும் என உரையாடினோம்.

அனைத்து ஏழைகளுக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு உண்டுதானே? அதில் என்ன பிரச்சினை? இதனால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன தீங்கு வந்து விடும்? இனி ப.சா., ப.ம., பி.பி.வ.( SC, ST, OBC) வகுப்பு மக்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இது நல்லதுதானே? என்று பதில் கேள்வி கேட்டார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, அன்று மதியம் 12 மணிவாக்கில் 10% பொருளாதார இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தீர்ப்பை எதிர்த்துச் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள், அரசியல், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் தவிர்த்து, பொதுமக்கள் தரப்பில் எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லை. எதுவுமே நடக்காதது போல், நாடெங்கும் பரிபூரண அமைதி நிலவியது. வழக்கமான முறையில் மக்கள் இயங்கினர். அமைப்பு முறையிலான எதிர்ப்பு தவிர, வெகுமக்களை உள்ளடக்கிய தன்னெழுச்சியான சிறு சிறு எதிர்ப்புகள் கூட இல்லை.

100 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமை இடஒதுக்கீடு. இந்தியாவின் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய வழக்கு. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கக் கூடியது. 2019 சனவரியில் மூன்றே நாட்களில், 10% பொ.ந.பி(EWS) இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரிய எதிர்ப்பின்றி, ஒன்றிய பாசக அரசால் நிறைவேற்றப்பட்டது. அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாசக பெருவெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் சார்பாண்மை கொண்ட திமுக, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலல்லு பிரசாத்து யாதவின் இராட்டிரிய சனதா தளம், ஒவைசியின் ஏஐஎம்எம்(AIMIM), இந்திய ஒன்றிய முசுலீம் லீக்கு உள்ளிட்ட மிகச் சில கட்சிகளே நாடாளுமன்றத்திற்கு உள்ளே இச்சமூக அநீதியை காத்திரமாக எதிர்த்தன.

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் அப்போது சார்பாண்மை இல்லாத மதிமுக, விசிக முதலான தமிழ்நாட்டின் பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்தன. பாமகவின் அன்புமணி இராமதாசு மக்களவை உறுப்பினராக இருந்த போதும், சட்டத் திருத்தம் இயற்றப்பட்ட நாளில் அவையில் இல்லை. அவர் சார்ந்த பாமக பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்தது. அதிமுக கலவையான நிலைப்பாட்டை எடுத்தது.

தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பலவும் பொருளாதார இடஒதுக்கீட்டையும், அதைச் செல்லும் என அறிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்தன. திமுக, விசிக முதலான கட்சிகள் சட்ட முறையாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடியான தன்மையை அம்பலப்படுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் அவர்களின் அறிக்கை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. மேலும் 10% பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என திமுக அரசு தெரிவித்து விட்டது. ஆனால் இந்த எதிர்ப்பு வெகுமக்கள் இயக்கமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றதா?

பொருளாதார இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். வெகுமக்களிடம் இந்த எதிர்ப்புணர்வு சென்று சேரவில்லை என்பதே உண்மை. மேற்குறிப்பிட்ட நண்பர் கேட்ட கேள்வி போல், ஏழைகள் இருக்கும் நாட்டில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் என்ன தவறு உள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இடஒதுக்கீட்டு மண்ணான தமிழ்நாட்டிலேயே பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீடு போதுமான அளவு எதிர்க்கப்படவில்லை என்ற நிலையில், ஏனைய இந்திய மாநிலங்களின் நிலவரம் இன்னும் மோசம். பல மாநிலங்களில் எதிர்ப்பே இல்லை.

மாறாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னே பல மாநிலங்கள் உயர்சாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

வரலாற்றின் முந்தைய ஆண்டுகளுக்குப் பின்சென்றால், இடஒதுக்கீட்டிற்குச் சிக்கல் வரும் போதெல்லாம் கட்சிகள் மட்டுமல்ல, அக்கட்சிகளின் பின்னால் பெருவாரியான மக்களும் நின்று இடஒதுக்கீட்டைக் காத்த மண் தமிழ்நாடு. இந்தியாவிற்கே வழிகாட்டியாய்த் திகழ்ந்த மண் இது.

நீதிக்கட்சி அரசு இயற்றிச் செயல்படுத்திய Communal GO என்றழைக்கப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், வகுப்புவாரி இடஒதுக்கீடு செல்லாது என 1950 சூலை 27ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனே பெரியார் கொதித்தெழுந்தார். பெரியாரிடம் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்திருந்த அண்ணாவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அன்றைய ஆளும்கட்சியாக இருந்த காங்கிரசும் இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்ததை எதிர்த்தது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, இடஒதுக்கீட்டு உரிமை காக்க முழங்கினார் பெரியார். வெகுமக்களை நோக்கிப் பிரசாரம் செய்தார். பெரியார் திடலில் வகுப்புரிமை மாநாடு ஒன்றை நடத்தி, “மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைப் புறக்கணிக்கும் விதமாக கறுப்புக் கொடி காட்டுவோம்” என அறிவித்தார்.

இடஒதுக்கீடு செல்லாதென அறிவித்த உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து, சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தினர். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

குமாரசாமிராசா தலைமையிலான அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, 1951 ஏப்பிரல் 9ஆம் நாள், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியது.

விளைவு, 1951 சூன் 1 ஆம் நாள் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, 15(4) எனும் புதிய பிரிவைச் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செல்லாக் காசாக்கியது. அன்றிருந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக 50 நாட்களில் மாற்றம் சாத்தியமானது. சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்துகரும் சட்டத் திருத்தத்தை ஆதரித்தார். நீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக நாடாளுமன்றத்திலேயே விமர்சித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னைமாகாணத்தில்நடந்த போராட்டங்களே திருத்தம் வரக் காரணம் எனத் தலைமையமைச்சர் நேரு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகஅறிவித்தார்.

1979 சூலை 2ஆம் நாள், அன்றைய முதலமைச்சர் எம்ஞ்சி இராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார். அதன்படி ஆண்டுக்கு 9,000 உரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுகவும், திராவிடர் கழகமும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தின. எம்ஞ்சியார் வெளியிட்ட அரசாணையை எரித்து அதன் சாம்பலைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பினார்கள். இருப்பினும் எம்ஞ்சியார் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. கட்சிகளின் போராட்டத்திற்கு அசைந்து கொடுக்காத எம்ஞ்சியாருக்கு மக்கள் பாடம் புகட்டினர். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மொத்தமுள்ள 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

தன் தவற்றை உணர்ந்த எம்ஞ்சியார் பொருளாதார அளவுகோலை நீக்கியதுடன் 31 விழுக்காடாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். ஆறே மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு எனும் மோசடி வீழ்த்தப்பட்டது.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374