ஊறுகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊறுகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 டிசம்பர், 2012

ஊறுகாய் முதல் புட‌ைவை வரை... வாழைப்பழ கண்காட்சி


சென்னை: தமிழகத்தில் அதிக அளவு வாழைப்பழ உற்பத்தி இருப்பதால், அதன் பயன்பாட்டை விளக்கும் இரண்டு நாள் கண்காட்சி சென்னையில் நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி சென்னையில் நடப்பது இது முதல் தடவை ஆகும்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து, சென்னையில் முதல் வாழைப்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய, இந்த இரண்டு நாள் கண்காட்சியில் தோட்டக்கலை, வேளாண்துறை, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், வேளாண் பல்கலை, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகிய அமைப்புகள் பங்கேற்கின்றன. மேலும், வாழை உற்பத்தி தொடர்பான பல்வேறு தனியார் நிறுவனங்களின் அரங்குகளும் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் விளையும் பூவன், நெய் பூவன், கற்பூரம், செவ்வாழை, , ரஸ்தாலி, ரொபாஸ்டா, அரிச்சல், கிராண்ட் நைன், மொந்தன், விருப்பாட்சி உள்ளிட்ட பல ரக வாழைப்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான சத்துமாவு, சத்து பானங்கள், வாழைத்தண்டு, வாழைப்பூ ஊறுகாய்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஊறுகாய்களை சுவைத்து, அவற்றை வாங்கி செல்வதில் பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். வாழை நாரில் தயாரிக்கப்படும் புடவைகள், கைப்பைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவையும், பார்வையாளர்களைக் கவர்கின்றன. வாழைப்பழத்தை பழுக்க வைக்க பயன்படும் நவீன குளிர்சாதன இயந்திரங்களும், வாழை விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை ஒட்டி, நவீன முறையில் வாழைப்பழங்களை அறுவடை செய்தல், ஏற்றுமதி செய்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில், விவசாயிகள், வேளாண் விஞ்சானிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இக்கண்காட்சி குறித்து இந்திய தொழிற்கூட்டமைப்பின் வேளாண்மை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில், தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தான் வாழைப்பழங்கள் அதிகளவில் விளைகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதவீத வாழைப்பழ விளைச்சல், தமிழகத்தில் தான் உள்ளது. வாழைப்பழ உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தாலும், அவற்றை விற்பனை செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் சில பின்னடைவுகள் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வாழைப் பழங்களை கையாள்வது, ஏற்றுமதி செய்வது குறித்து விளக்கவே, இந்த கண்காட்சி முதல் முறையாக இங்கு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதில், தோட்டக்கலைத்துறை கமிஷனர் சந்தோஷ்பாபு, சி.ஐ.ஐ., நிர்வாகி புருஷோத்துமன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சனி, 29 செப்டம்பர், 2012

ஊறுகாய் உற்பத்தியில் வெற்றி!

சொல்கிறார்கள்


"பிள்ளையார் சுழி போட்டுச்சு!' ஊறுகாய் தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள மீனா: தேனி தான் எங்க ஊர். எங்க வீட்டுக்காரருக்கு, ஓட்டல்ல சப்ளையர் வேலை. ரெண்டு பிள்ளைக. குடும்பம் அவர் வருமானத்தை மட்டும் நம்பி, ஏனோ தானோன்னு ஓடுச்சு. எங்க பக்கத்து வீட்டுல இருந்த அம்மா ஒருத்தவுக, நான் போட்டுத் தந்த ஊறுகாய சாப்பிட்டதும், "உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு; ஊறுகாய் போட்டே கூட பொழச்சுக்கலாம்'னு சொன்னாக. அந்த வார்த்தைங்கதேன், இந்த தொழிலை எடுத்துச் செய்ய, என் மனசுல பிள்ளையார் சுழி போட்டுச்சு! முதன்முதலா, நூறு பாட்டில் பூண்டு ஊறுகாய் போட்டு, "முனீஸ்வரன் ஊறுகாய்'ன்னு லேபிள் ஒட்டி, அக்கம் பக்கத்துல இருக்கறவுகளுக்கு கொடுத்தோம். வாங்குனவுக என்ன சொல்றாகனு கேட்டு, அடுத்து போடலாம்னு காத்திருந்தோம். ஒரு வாரத்துக்குள்ள, "சாப்பிடறதுக்கு எப்பவும் அடம் பிடிக்கற எங்க பிள்ளைக, உங்க ஊறுகாயால, இப்போ மறுசோறு கேக்குதுக... பெரியவுகளுக்கும், ருசி உச்சிக்கு ஏறுது'ன்னு ஒருத்தர் தப்பாம பாராட்ட, எங்களுக்கு சந்தோஷம் தாங்கல. அடுத்த தடவை, எலுமிச்சை ஊறுகாய் போட்டு, கடைகளுக்கு சப்ளை செய்தோம். எங்ககிட்ட ரொம்ப யோசிச்சு சரக்கு எடுத்த கடைக்காரர், "என்னம்மா, ஊறுகாயில ஏதும் மை ஒட்டி வெச்சிட்டீகளா? ஒங்க ஊறுகா பிச்சுக்கிட்டுப் போகுது'னு பாராட்டுனதோட, "உன் கைப் பக்குவத்துல, பிரண்டை ஊறுகா போட்டுக் கொடு... சூப்பரா போகும்'னு ஐடியாவும், ஆர்டரும் கொடுத்தாரு. பகல் முழுக்க சர்வர் வேலை, ராத்திரி ஊறுகாய் போடுறதுக்கு உதவி செய்யிறது, காலைல எட்டு மணி வரைக்கும் கடைகளுக்கு ஊறுகாய் சப்ளை செய்யிறதுன்னு, என்னோட சேர்ந்து உழைச்ச என் வீட்டுக்காரர், ஒரு கட்டத்துல, சர்வர் வேலையை விடுற அளவுக்கு, தொழில் முன்னேற்றம் கண்டது. தக்காளி, மாங்காய், எலுமிச்சை, பூண்டு, பிரண்டை, இஞ்சி, நார்த்தங்காய், மிளகாய் என்று, 14 வகையான ஊறுகாய்களை, மாதத்துக்கு, 1,000 முதல், 1,500 பாட்டில்கள் தயாரிக்கிறோம். தேனி, உசிலம்பட்டி மட்டுமல்லாது, கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், வியாபாரம் விரிந்திருக்கிறது. மாதம் கிட்டத்தட்ட, 15 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.