இரத்தின புகழேந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்தின புகழேந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காலத்தால் அழியாத தமிழ்நாடன் படைப்புகள்

காலத்தால் அழியாத தமிழ்நாடன் படைப்புகள்

இரத்தின புகழேந்தி
Comment   ·   print   ·   T+  
2
கவிஞர் சேலம் தமிழ்நாடனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர், தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றியப் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை.
சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர், இவரின் பெற்றோர்.
சிறுவயதிலேயே பெரிய வாசகரானவர் தமிழ்நாடன். ஆண்டுக்கு ஆயிரம் நூல்களைப் படித்திருக்கிறார். இவர் பள்ளி செல்லும் வழியில்தான் அவ்வூரின் திராவிடர் கழக அலுவலகம் அமைந்திருந்தது. அங்கு வரும் 'விடுதலை' செய்தித்தாளைப் படித்து விட்டுதான் பள்ளிக்குச் செல்வார். அப்போது அவருக்கு வயது 10. "அவன்கிட்ட முதல்ல குடுங்க படிச்சிட்டு பள்ளிக்கூடம் போகட்டும்" என்று கூறி பெரியவர்கள் இவரின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியிருக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மலரில் வெளியான கவிதைதான் அச்சில் வந்த முதல் படைப்பு. அப்போதே தமிழ்நாடன் என்ற பெயரில்தான் எழுதியிருக்கிறார்.
பள்ளிப் பதிவேடுகளில் பெயரை மாற்ற விரும்பியும் இவரின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காமையால் நேற்று முந்தினம் வரைசுப்பிரமணியன் என்ற பெயரில்தான் ஓய்வூதியம் பெற்றுள்ளார்.
கடந்த 1960இல் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வேளாண் துறையில் ஓர் ஆண்டு பணி, அது பிடிக்காமல் ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்ற முயற்சித்தபோது இவர் மார்க்சியவாதி என்ற காரணத்திற்காக பணிவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.
பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் திராவிட இயக்கங்கள் மீது விமர்சனத்தைக் கூறவும் தயங்காதவர். திராவிடக் கட்சிகள் தமிழ் இலக்கியத்தைப் பிரச்சாரத்திற்கு கையில் எடுத்துக் கொண்டன. ஆனால் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுத்தனவா என்றால் இல்லை என்று கூறிய தமிழ்நாடன், கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரியாரின் வழித்தோன்றலாகவே திகழ்ந்தார்.
கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்ற கருத்துடையவர் வானம்பாடி இயக்கத்தை உருவாக்கியதில் ஒருவர். வானம்பாடி கவிஞராக அறியப்பட்டவர்.
எழுபதுகளில் மார்க்சிய கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 'மாவோ 'என்ற பெயரைச் சொன்னாலே முதுகெலும்பை முறிக்கிற சூழல் நிலவிய ஒரு கால கட்டத்தில் மாவோவின் கவிதைகளை மொழிபெயர்த்தவர் தமிழ்நாடன்.
சேலத்தில் கல்வி அலுவலராகப் பணியாற்றிய 'அனந்த பல்ப்' என்பவருடன் நட்பு ஏற்பட, அவரிடம் மாவோ பற்றிய புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் நம்பூதிரிபாட்டை (அப்போதைய கேரள முதல்வர்) பார்க்கச் சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார் (அனந்தப் பல்ப்பும் நம்பூதிரிபாட்டும் நண்பர்கள்). தமிழ்நாடன் நம்பூதிரிபாட்டை சந்திக்கச் சென்றபோது அவரின் நூலகத்தைத் திறந்து விட்டு "என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்'' என்றாராம்.
தமிழ்நாடனின் மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத் தகுந்தது "மனுதர்மம்' ஆகும். நாம் எவ்வாறு அடக்கி ஆளப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மனுதர்மத்தை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.
"அம்மா அம்மா' என்ற இவரது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டைப் பற்றியது. நூல் வெளிவந்த போது மிகுந்த வரவேற்பினையும் பாராட்டையும் பெற்ற படைப்பு.
தமிழ்நாடன் கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை மட்டுமன்று பொதுவுடைமைப் போராளிகளுக்கு வலுச் சேர்ப்பவையாகவும் அமைந்துள்ளன.
"மண்ணின் மாண்பு' நூலிலுள்ள கவிதைகளைப் போராட்ட காலங்களில் சுவர் எழுத்தாகப் பயன்படுத்தியுள்ளனர் தோழர்கள். அதனால் காவல் துறை நெருக்கடிகளைச் சந்தித்தவர் கவிஞர் தமிழ்நாடன். அதனால் ஏற்பட்ட மனச் சோர்வினால் இலக்கியத்திலிருந்து சற்று காலம் விலகி உள்ளூர் வரலாறுகளை ஆய்வு செய்யத் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை நண்பர்களோடு இணைந்து வெளியிட்டவர். சேலம் மாவட்டத்தைப் பற்றி மூன்று ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசனின் "குமரகுருபரன்' நூலின் கையெழுத்துப் படியைப் பழைய புத்தகக் கடையில்கண்டு பிடித்து பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அதனை நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூல் பெங்களூர் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சேலத்தின் பழமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் 1973ஆம் ஆண்டு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் எழுத்தாளர் ஓவியர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் சேலத்தில் அருங்காட்சியகம் தொடங்கினார்.
இதுதான் இந்திய அளவில் மக்களால் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம். மேலும் இந்த அமைப்பின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகள் நடத்தியதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் வெளியிட்டுள்ளனர். இன்றும் இவ்வமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சியும் அளித்து வருகின்றனர். முப்பத்தைந்து ஆண்டுக்காலம் ஆசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடன் நம் தமிழ்நாட்டு கல்வித்துறை மீதும் பள்ளிப் பாடநூல்கள் குறித்தும் கவனிக்கத்தக்க விமர்சனங்களை வல்லினம் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடனின் 'சாரா' நாவல் ஒரு புதிய மாதிரியில் எழுதப்பட்டது. "சாரா நாவல் உலக அளவில் அங்குமிங்கும் விரிந்து செல்கிறது. தமிழில் உலகளவில் விரிந்த பரப்பைத் தனக்குள் கொண்டுள்ள நாவல் என்று இதைத்தான் சொல்லமுடியும். பல்வேறு வரலாற்று
நிகழ்ச்சிகள், அனுபவங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் எப்படி ஒழித்துக் கொல்லப்பட்டார்கள், நியூயார்க் ஹார்லெம் சேரியில் நடந்த கலவரம் எவ்வளவு பிரம்மாண்டமானது.
அரபு மக்களின் புரட்சிகரப் போராட்டம், தமிழகத்தின் அரசியல், திராவிடர் இயக்கம், சோவியத் புரட்சி, லெனின் காலம் என்றெல்லாம் பலதிசை வரலாற்று அனுபவங்கள் நாவலுக்குள் வந்திருக்கின்றன. தமிழகத்து இளைஞர்கள் இப்படிச் சில வரலாற்று அனுபவங்களை இந்த நாவல் மூல மேனும் கற்றுக் கொள்ள முடியும்'' என்பார் கோவை ஞானி.
தமிழ்நாடனின் "சேலம் திருமணிமுத்தாறு' என்ற நூல், ஓர் ஆற்றைப் பற்றி கூறுவதற்கு இவ்வளவு தகவல்களா என்ற வியப்பில் ஆழ்த்துகிறது. பல்வேறு வரலாற்றுச் சான்றாதாரங் களையும் நூலோடு இணைத்து அளித்திருப்பது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
தமிழின் முதல் அச்சு நூலையும் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியவர் தமிழ்நாடன்தான். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் என்ற நூல் 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமியின் வரலாற்றைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் "சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள், விசாரங்கள்' என்ற நூலை எழுதியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, மொழி பெயர்ப்பு, ஓவியம் எனப் பல தளங்களில் சிறப்பாக இயங்கும் பன்முக ஆளுமை கொண்ட தமிழ்நாடன் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
இரத்தின புகழேந்தி - தொடர்புக்கு rathinapugazhendi@gmail.com

திங்கள், 16 செப்டம்பர், 2013

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் மரச்சிற்பக்கலை!

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் மரச்சிற்பக்கலை!

Comment (1)   ·   print   ·   T+  
தமிழர்கள் தங்களின் அறிவால் விளைந்த கலைப்பொருள்களை அவர்களின் வாரிசுகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே அறிமுகம் செய்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கலைப்பொருள்தான் குழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மை. மரப்பாச்சி தமிழர்களின் மரச்சிற்பக்கலைக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு.
மரச்சிற்பங்கள் தமிழர்களின் வீடுகளில் நுழையும்போதே சூரிய பலகையாக வரவேற்பதை இன்றைக்கும் நாம் காணலாம். மற்ற கலைகளோடு ஒப்பிடுகையில் மரச்சிற்பக் கலை அழிந்து விடாமல் வாழும் கலையாக உள்ளது. அதற்கு சூரிய பலகை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கோயில்களிலும் கடவுள்களின் வாகன்ங்கள் மரச்சிற்பங்களாக செய்யப்படும் வழக்கம் இன்றும் உள்ளது.மரச்சிற்பக்கலைஞர்கள் பல மாவட்டங்களில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தி.
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947-ம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான ராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,ராசாராம் ஆச்சாரி,ராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஹைதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வழுவூர் ராமையாவின் ஆலோசனையோடு ராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார்.
வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.
இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.
- தமிழ் இந்து

சுடுமண் சிற்பக்கலை: கலைப்பேழைகள்!

சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்!

Comment   ·   print   ·   T+  
தமிழர்களின் மரபுக்கலைகளில் பல கலைகள் இன்று மறைந்து வருகின்றன. சில கலைகள் முற்றிலும் வேறு வடிவம் கொள்கின்றன. கிராமக்கோயில்களில் கடவுளர் உருவங்களும் கடவுள்களின் வாகனங்களும் பல ஆண்டுகளுக்கு முன் சுடுமண் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டன. இன்று களிமண்ணின் இடத்தை சிமென்ட் பிடித்துக்கொண்டது. ஆம், எல்லா கிராமக்கோயில்களிலும் இன்று சிமென்ட் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்த மாற்றம் சுடுமண் சிற்பக்கலையை முற்றிலும் அழித்துவிட்டது. பழமையான ஒன்றிரெண்டு கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளன. இது தமிழகத்தின் பெரும்பானமை மாவட்டங்களில் நிலவி வரும் உண்மை.
அப்படி ஒரு பழமையான சுடுமண்சிற்பம் கடலூர் மாவட்டத்தில் காட்சிப்பொருளாக உள்ளது. அனேகமாக ஆசியாவின் பெரிய சுடுமண் சிற்பம் இதுவாக இருக்கலாம் என்று கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறுகிறார். வாருங்கள் அந்த சிற்பத்தைப் பார்த்துவரலாம்.
பண்ருட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது சேமக்கோட்டை எனும் சிற்றூர். ஊருக்கு மேற்கே சாலையின் தென்புறம் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்புறம் பாழடைந்த நிலையில் இரண்டு குதிரை, ஒரு யானை சிலைகள் உள்ளன. அவை மிகவும் பழசு என்பதனால், அதை அப்படியே விட்டுவிட்டு கோயிலின் முன்பு புதிதாக சிமிட்டியினால் குதிரை சிலை செய்து அதற்கு வண்ணமடித்து பராமரித்து வருகின்றனர் அவ்வூர் மக்கள். அந்தப் பழைய சிலைகளுக்கு அருகில்தான் மக்கள் காலைக்கடன்களைக் கழித்து வருகின்றனர், ஆடு மாடுகளை மேய்ப்பதும் அங்குதான். அச்சிலைகளின் அருமையை உணாராத அம்மக்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.
அவை மூன்று தலைமுறைகளுக்கு முன்பு செய்யப்பட்டவை என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
நேரில் பார்த்த பிறகுதான் நம் முன்னோர்கள் சுடுமண் சிற்பக்கலையில் எவ்வளவு வல்லவர்களாக இருந்துள்ளனர் என்பதை உணரமுடிந்தது. அதற்கான இலக்கியச்சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன.
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க. (மணிமேகலை 21:125-6)
நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள் - 407)
சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின்... (பெரும்பாணாற்றுப்படை - 405)
இந்தப் பாடல்கள் மூலம் தமிழர்களிடையே மண், சுடுமண் சிற்பங்கள் செய்யும் வழக்கமிருந்ததை அறிய முடிகிறது. இச்சிற்பங்களில் பல சிறப்பம்சங்களையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் சற்று உற்று நோக்கினால் கண்டுகொள்ளலாம். இவ்வளவு பெரிய சிற்பங்களைச் சுடுவதற்கு நம் முன்னோர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் வியப்புதான் மிஞ்சுகிறது.
குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணி, கயிறு ஆகியவற்றையெல்லாம் மிக நுட்பமாகவும், கவனமாவும் செய்துள்ள சிற்பியின் கைவண்ணம் அவரை பிறப்புக்கலைஞராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.
யானையின் மீது அமர்ந்திருக்கும் இரு மனித உருவங்கள் கீழே தனியே செய்து ஒட்டப்பட்டதா அல்லது யானையோடு சேர்த்தே செய்யப்பட்டதா எனும் அய்யங்களைப் பார்ப்போர் மனதில் நிச்சயம் தோற்றுவிக்கும். குதிரையின் பற்கள், கடிவாளம்,சேணம் ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு சிறப்புமிக்க இச்சிற்பங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களால் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மரபுவழித் தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டவை. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் முற்றிலும் சிதைந்து விடாமல் இயற்கைச்சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு இத்தனையாண்டுகள் நிலைத்து நிற்கின்றன.
இச்சிற்பங்களை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சிததிலமடைந்து அழிந்து போக வாய்ப்புள்ளது. பூமிக்கு அடியில் புதையுண்டுகிடக்கும் தொன்மையான நாகரிகச்சின்னங்களை தோண்டியெடுத்து பாதுகாக்கும் நம் தொல்பொருள் ஆய்வுத்துறையினர், பூமிக்குமேலே நம் கண்ணெதிரே அழிந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கலைப்பேழைகளையும் காப்பாற்ற வேணடும்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சேமக்கோட்டைச் சிற்பங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தெரிவித்து சிற்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஊர்மக்களின் எதிர்பார்ப்பு. ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? அரசு கவனிக்குமா? 

- தமிழ் இந்து