மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 நவம்பர், 2022

தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார்

 அகரமுதல





இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார்.

தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்
இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம்,

இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ்,

தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்
தெரிவிக்கிறோம்.

அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி


எந்தையும் இலமே !

ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மசிரீ முனைவர்
ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களைத் தத்தளிக்க விட்டு (21.11.2022)
வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!

எந்தையே !
நந்தா விளக்கனைய நாயகனே !!
உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …

எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
நாங்கள் சென்று உங்கள்
திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆற்றொணாத் துயருடன்

கண்ணன்
அருள்
பரதன்.

21.11.2022 திங்கட்கிழமை. மாலை 7.50 மணிக்கு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீள்பதிவு

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்      23 March 2020      No Comment

நானிலம் புகழும்

நாவரசர் ஒளவை நடராசன்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர்.  இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.

குடும்பம்:   

 தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய  திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன்  என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.

கல்வி

தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.

நாநலம்

நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஞ்சிராமச்சந்திரன் முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.

பணி

மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.

அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது.

மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழகஅரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன் இவரை அமர்த்தி,  தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக  இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.

வழிகாட்டி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக  இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.

விருதுகள்

அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு

  1. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
  2. இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
  4. தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
  5. கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
  6. தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)

நூல்கள்

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும்  ஆய்வுக் கட்டுரைகளை  எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது  பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
  8. அருளுக்கு ஔவை சொன்னது
  9. Self Confidence
  10. Saying of Stalwart
  11. Art Panaroma of Tamils
  12. Thirukkovaiyar

மொழிபெயர்ப்புத் திறன்    .

மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கங்களிலும் இவரது பணி சிறப்பானதாகும். அரசின் ஆணைய அறிக்கைகள் முதலானவற்றில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்திப் படிப்போரை மிரளச் செய்து கொண்டிருந்தனர். அப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்து, எளிய சிறிய சொற்கள் மூலம் மொழிபெயர்ப்புகளை வழங்கித் தமிழின் சிறப்பைப் புரியச் செய்தார். 

பணிப்பாங்கும் பழகும் பண்பும் 

            இவரது செயல் திறனும் சொற்றிறனும்  புரட்சித்தலைவர் எம்ஞ்சிஇராமச்சந்திரன், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித் தலைவி செ.செயலலிதா ஆகிய  மூன்று முதல்வர்களின் அன்பிற்கு இவரை ஆட்படச் செய்தன.

இவர் உயர்பணிகளில் இருந்த பொழுதிலும் இவரை நாடி இருபால் இளைஞர்களும் குழுமி இவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். அதனால் இளம் பேச்சாளர்கள் பலரை உருவாக்கினார். அத்தகையோர்தான் பிற்காலத்தில் – அஃதாவது இக்காலத்தில் – மேடைப் பேச்சாளர்களாகவும் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர்.  இன்றைக்கு மேடையில் முழங்கும் பலரும் இவரது வழிகாட்டுதலால் உருவானவர்களே!

   எந்தப் பணியில் இருந்தாலும் கூட்டங்களுக்கான அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் செல்லத் தவறுவதில்லை. நகைச்சுவையுடனும் புதிய புதிய தகவல்களுடனும்  இலக்கியச் சுவையுடனும் ஆற்றும் இவரது உரைகள் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பாரையும் மகிழ்விக்கின்றன. பட்டிமன்றங்களில் இவர் பாங்குடன் ஆற்றும் உரைகள் துணுக்குத் தோரணங்களாக அமையாமல் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் அமைந்தன. எனவே, பொதுமக்களிடையே இவருக்கென ஓர் அன்பர் கூட்டம் இன்றும் இருக்கிறது.

வாழ்க வாழ்கவே

தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கத்தையே வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படும்,  

தந்தையார் உரைவேந்தர் வழியில் உரையாளராக உலகத்தமிழர்கள் போற்ற வாழும், 

நாவரசர் ஒளவை நடரசானார்  நானிறலம் சிறக்க நூறாண்டுகள் கடந்தும் நற்றமிழ்த் தொண்டாற்றி வாழ்வாராக!

இலக்குவனார் திருவள்ளுவன்



திங்கள், 24 அக்டோபர், 2022

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!

 அகரமுதல





1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி

தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது.

ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மார்க்குசிய – இலெனினிய மெய்யியல் – அரசியலில் ஈடுபாடு கொண்டு மா.இலெ. அமைப்பொன்றின் (TNOC) ஆதரவாளராக இருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிக் களச் செயல்பாடுகளில் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு 1967இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக பதவிகள் – மாவட்டங்களில் வழங்கியது. அதன் வழியாக மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார் சே.பி. (செயப்பிரகாசம் அவர்கள் அன்புடன் சே.பி./J.P. என்று அழைக்கப்பட்டார்).

சிறுகதை படைப்பதில் இயல்பான ஆர்வம் கொண்டு, ஆற்றலுடன் கதைகள் வழங்கினார். நான் பா.செ.வின் சிறுகதை இரசிகன். நெல்லைச் சீமை மொழியில் மிகமிக உயிரோட்டமாக எழுதுவார்!

மார்க்குசிய – இலெனினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் “மனஓசை”, “கேடயம்” போன்ற இதழ்களில் அரசியல் திறனாய்வுகள், படைப்பிலக்கியங்கள் எழுதி வந்தார்.

தஞ்சை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக பா.செ. பணியாற்றியபோது, அவருடன் நேரில் சந்தித்து நான் உரையாடுவது வழக்கம். மக்கள் செய்தித் தொடர்புத் துறையில் பதவி உயர்வு பெற்று துணை இயக்குநர் பொறுப்பில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தார். ஆனால், அதிகார வருக்கத் தோரணை எதுவுமின்றி அப்போதும் தோழராகவே பழகினார். அப்பதவி உயர்வும் அவருக்கு மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது.

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைத் தோழமை அமைப்பாகக் கருதி அன்புடன் அணுகுவார். நாம் அழைக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவார். எமது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழிலும், அதன் மலர்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒரு செய்தியை முழுமையாகத் தெரிந்து கொண்டு, ஆற்றோட்டம் போல் அழகாக உரையாற்றுவார். அவசரப்பட்டு சொற்களைக் கொட்டாமல், அளந்து பேசுவார். அது சே.பி.பாணி என்று சொல்லலாம்.

தோழர் சே.பி.யின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம். சே.பி.யின் இழப்பு – தமிழ்த்தேசியத்திற்கும், இடதுசாரிக் கருத்தியலுக்கும் தோழர்களுக்கும் பேரிழப்பு!

நாளை மறுநாள் (25.10.2022) பகல் 12 மணி அளவில் அவரது விருப்பப்படி அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அளிக்கிறார்கள்.

விளாத்திக்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்கள், தம் பொறுப்பில் தோழர் சே.பி. அவர்களை நோயுற்ற நிலையில் பேணிப் பாதுகாத்து வந்துள்ளார்.

தோழர் பா.செ. அவர்கட்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

சனி, 1 பிப்ரவரி, 2020

செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் மறைவு – பிரித்தானிய அமைப்பின் இரங்கல் செய்தி


எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்  செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாகச் செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனத்தில் வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.
திட்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திட்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உள்ளுயிர்ப்புடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!

அந்தோ, வள்ளுவராக வாழ்ந்த தமிழர் பெருமகனார் சிகாகோ இராம்மோகன் அவர்கள் மறைந்தாரே!
சிகாகோவில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழார்வலரும், புரவலருமான நண்பர் இராம்மோகன் அவர்கள் 12.12.2019 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.
வள்ளுவர் தம் குறளை உலகெங்கும் பரப்பிட வேண் டும் என்ற பெரு நோக்கோடு, அதற்கெனத் தனது வாழ்நாளில் பிற்பகுதியைப் பெரிதும் செலவிட்ட தொண்டறச் செம்மல் அவர்!
செட்டி நாடு கானாடுகாத்தான் பகுதியைச் சார்ந்த அவர் ஒரு தலைசிறந்தபண்பாளர்; மனிதநேயர். எவரிடத்திலும் பான்மையோடு பழகுபவர்.
திருக்குறளை மற்றவர்கள் வாசிப்பார்கள்; இராம்மோகன் அவர்களோ சுவாசிப்பார்கள் – தான் மட்டுமல்ல; உலகமே வள்ளுவரின் வாய்மை மொழிப் படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, தனது உழைப்பு, பொருள் அத்துணையையும் செலவழித்த செந்தமிழ்ச் செல்வர் அப்பெருந்தகை!
6.11.2019 சிகாகோவில் நடந்த பெரியார் – அண்ணா விழாவினை முடித்து, உடல் நலம் குன்றி, வீட்டில் இருந்த இராம்மோகன் (அழகப்பன்) அவர்களை மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுடன் சென்று, நானும், எனது வாழ்விணையர் மோகனா,  அருள், அசோக்கு ஆகியவர்களுடன் நலம் விசாரித்தபோது, ஏறத்தாழ 30 மணித் துளிகளுக்கு மேல் எங்களிடத்தில் உரையாடினார். பிறகு அவரிடமும், அவரது வாழ்விணையர் திருமதி மீனா இராம்மோகன் அவர்களிடமும் விடை பெற்றுத் திரும்பினோம்.
எப்படியும் மீண்டும் தொண்டறத்தைத் தொடர்வார் என்று நம்பித் திரும்பினோம்.
பெருத்த ஏமாற்றம்தான். எனினும் இயற்கையை எண்ணி ஆறுதல் பெறுவதைத் தவிர வேறு வழி என்ன?
தனக்குப் பிறகும் தனது செல்வத்தில் ஒரு பகுதி தமிழ்த் தொண்டுக்குப் பயன்பட வேண்டும் என்ற திட்டத்தைப் பெரிதும் எங்களிடம் விளக்கினார்.
நான் முதன் முதலில் சிகாகோ சென்றபோது (1986இல்) அவரது இல்லத்தில் தங்கியதை நினைவு கூர்ந்து நன்றி சொன்னபோது, மிகவும் வியந்தார்!
அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி மீனா, அவரது பிள்ளைகள், குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்  ஆறுதல் கூறுகிறோம்.
அந்த தமிழ்த் தொண்டறச் செம்மலுக்கு நமது இயக்கச் சார்பில் வீர வணக்கம்.
– கி.வீரமணி, ஆசிரியர், விடுதலை
தமிழ் ஆர்வலர்  முனைவர் பொறியாளர்  அழகப்பா இராம்மோகன் 2000 ஆண்டு திருக்குறள் பொதுமறை என்ற பெயரில் திருக்குறள் நூலை 1,824 பக்கங்களுடன் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நான்கு பக்கங்களில் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் போன்றவற்றுடன் உயர்ந்த தரத்தில் விவிலியத் தாளில் அச்சிட்டுச் சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின் கருத்துகளை 108 மந்திரங்களாக்கி அதையும் பத்து நிமிடம் ஓடக்கூடிய குறுந்தகடு, ஒலியிழையாக வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் – தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு(2000), தொழில் முனைப்பாற்றலும் தமிழர்களும்(2005), நினைக்கப்பட வேண்டியவர்கள்(2002) முதலிய நூல்களின் ஆசிரியரும்கூட.
அழகப்பா இராம்மோகன் (பிறப்பு 1939) பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கானாடுகாத்தான்.ஆனால், பிறந்தது மலேசியாவின் பினாங்கு. எனினும் ஐக்கிய அமெரிக்காவின், இல்லினாய்சு மாநிலத்தில்  சிகாகோ நகரில் வாழ்ந்து தொண்டாற்றியவர். இவர்   தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவுவதற்காகவும் உலகத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் இயக்குநராகச் செயல்பட்டவர்.
 அத்தகைய பெருந்தகை அவர்கள் இன்று(கார்த்திகை 29, 2050/15.12.2019)  அமெரிக்காவில் காலமானார். அன்னாருக்கு எனது இறுதி அஞ்சலிகள்!
கரூரில் உள்ள வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரியில் அழகப்பா இராம்மோகன் அவர்களை நேரில் சந்தித்து அவரிடத்தில் ஆயிரம் உரூபாய் கொடுத்து அவர் வெளியிட்ட திருக்குறள் நூலை பெற்றுக் கொண்ட நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. இனிய இயல்பு கொண்ட அன்னாரது புகழ் வாழ்க!
– தமிழ்நல வழக்குரைஞர் இராசேந்திரன், 9787933344

புதன், 5 செப்டம்பர், 2018

நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!

அகரமுதல


    (ஆடி 29, 1974 /13.08.1943 – ஆவணி 19, 2049/04.09.2018)

நலிவிலும் உழைத்த கண்ணியம்

குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு

  கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.
நிகழ்விடம்:
2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம்
(Tower 2 B, Prestige Bella Vista)
ஐயப்பன்தாங்கல், சென்னை 600056
(ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்)
தொடர்பிற்கு:
மகன் குகன் : 9677277113
மருமகன் பார்த்திபன் : 9488514067
மருமகன் சிவா:  9840098618
  உழைப்பாளி, எளியவர், தமிழன்பர், இதழாசிரியர், படைப்பாளி, தொழிலாளர் தோழன், கண்ணியம் மிகுந்தவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கண்ணியம் குலோத்துங்கன். அவர் பணிகளை நினைவுகூரும் வகையில் ‘கண்ணியக் காவலர் குலோத்துங்கன் எனச் செட்டம்பர் 2015 இல் எழுதிய கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.
  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அதனால் அவர்களின் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டு பழகினார். எனவே, மதிப்பிற்குரிய அப்பெருந்தகை என் மீதும் அன்பு கொண்டிருந்ததில் வியப்பில்லை.
 “தமிழறிஞர்கள் கணிணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் அறிவதற்காகக்கணிணி குறித்துத் தொடர் ஒன்று எழுதித் தாருங்கள்” என வேண்டினார். ‘கணிணியும் கைப்பழக்கம்’ என்னும் தொடர் அதனால் வந்தது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட மின்னஞ்சல் சிக்கல், கணிணிப்பாழ் முதலியவற்றால் அனுப்பிய கட்டுரைகள் அவரிடமும் சென்று சேரவில்லை. என்னிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. புதியதாக மீண்டும் எழுத நேரமின்றி அத் தொடரை முடிக்காதது உறுத்தலாகவே உள்ளது.
 அவர் நலமாக இருந்த பொழுது திங்கள் இருமுறையேனும் நாங்கள் அலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் உழைப்பிற்கேற் மதிப்பைத் தி.மு.க.வும் அரசும் தரவில்லை என்பது என்னைப்போன்ற பலரின் வருத்தம். தன் உழைப்பிற்கேற்ற மதிப்பை வழங்கவில்லை என்ற வருத்தம் அவருக்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் “தன் கடன் உழைப்பதே” என வாழ்ந்தார்.
 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவையும் பிற ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழறிஞர்கள் குவிய வேண்டும் எனத் தணியா ஆர்வம் கொண்டவர். அவ்வாறு தம் சொந்தச் செலவில் மிகச் சிறப்பாகத் தமிழறிஞர்கள் கூடும் விழா நடத்தியும்  அமைதி கொள்ளவில்லை. அங்கு வராதவர் யாருமில்லை என்னும் அளவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுவந்தார். அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
 தமிழறிஞர்களைப்பற்றி அட்டைப்படத்தில் படம் வெளியிட்டுக் கட்டுரை எழுதி வந்த அவர், என்னைப்பற்றியும் எழுதிப் பெருமைப்படுத்தினார். மேலும் ‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர் விருது’ வழங்கிச்சிறப்பித்தார்.
  யாரையும் ஊக்கப்படுத்திச்சிறப்பிப்பது அவர் பண்பாடு. எனவே, எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் அவரது இதழ்த் தொடர்பான பணிகளில் உதவியதாலும் இதுபோல் பிறருக்கும் உதவுவது அறிந்ததாலும் நட்பு, அகரமுதல இதழ்கள் சிறப்பாக வருவதற்குத் தொண்டாற்றியமையாலும் ‘கண்ணிய இதழியல் செம்மல் விருது’ அளித்து ஊக்கப்படுத்தினார். ‘செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பேராசிரியர் இலக்குவனார் மீதுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்தினார். இத்தகைய ஆன்றோர் மறைவு தனிப்பட்டமுறையிலும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
 அகரமுதல இதழ், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பில் அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

அகரமுதல

(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 –  ஆடி 22,  2049 / ஆகத்து 07, 2018)

தி.மு.க.வரலாற்றின்  பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும்
 ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.
 அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும்
  ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 
துயரத்தில் பங்கேற்கும்
அகரமுதல மின்னிதழ்
தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
தமிழ்க்காப்புக்கழகம்
 இலக்குவனார் இலக்கிய இணையம்
 இலக்குவனார் இலக்கியப்பேரவை