வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

உலகத் தாய்ப்பால் வார விழா

தமிழகத்தில் 60 %  பெண்கள் குழந்தைகளுக்கு த் தாய்ப்பால் கொடுப்பதில்லை
 
 
சென்னை: ""அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில், 60 சதவீத பெண்கள், குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை,'' என, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறினார்.

அரசு மகப்பேறு மருத்துவமனை: உலக தாய்ப்பால் வார விழா, ஆக., 1ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில், சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில், மருத்துவர் உமா சாந்தி துவக்க உரையாற்றினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, துணை இயக்குனர் மீனா உமாசந்தர் வரவேற்புரையாற்றினார்.

170 நாடுகளில்:

விழாவை, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர், கனகசபை, துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த, 1991ம் ஆண்டு முதல், உலக முழுவதும் உள்ள, 170 நாடுகளில், "உலக தாய்ப்பால் வார விழா' கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு, முதலில் கொடுக்கப்படும் சீம்பாலுக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம். சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த, 15 முதல் 30 நிமிடத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இரண்டு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த, ஆறு மாதம் வரை, கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், டீ, சர்க்கரை தண்ணீர் தருவதை தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பின், உருளைக்கிழக்கு, உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கண்டிப்பாக, இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 40 சதவீத பெண்களே, தாய்ப்பால் கொடுக்கின்றனர். அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை.

மார்பக ப் புற்று நோய் வராது:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் வருவது குறைகிறது. குழந்தை பிறப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின், அளவில் பெரியதாக இருக்கும் வயிறு, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சிறியதாகி விடும். இந்திய அளவில், ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும், 1,000 குழந்தைகளில், 48 குழந்தைகள் இறந்து விடுகின்றன; இதில், தமிழகத்தில், 24 குழந்தைகள் அடங்கும். தமிழகத்தில், பிறந்த ஒரு மாதத்தில், 1,000 குழந்தைகளில், 12 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதை, 10ஆக குறைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, கனகசபை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக