புதன், 31 ஜூலை, 2013

மார்பில் குண்டு பாய்ந்த நிலையிலும் திருடர்களிடம் போராடிய இளம்பெண்

மார்பில் குண்டு பாய்ந்த நிலையிலும் திருடர்களிடம் போராடிய இளம்பெண்

புதுதில்லி:டில்லியில், பக்கத்து வீட்டு ப் பெண்ணின்  சங்கிலியை த் திருடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிய திருடர்களை, துணிச்சலாக மடக்கி பிடித்த இளம்பெண், துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனாலும், துப்பாக்கியை பார்த்து பயப்படாமல், திருடர்களிடம் இருந்து செயினை மீட்ட, அந்த இளம் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடை ப் பயிற்சி:

கிழக்கு டில்லி பகுதியில் வசிப்பவர், அன்சு. நேற்று முன் தினம் அதிகாலையில், இவர், நடை பயிற்சியை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளில் வந்த, இரு மர்ம நபர்கள், அவரை பின் தொடர்ந்தனர். பீதியடைந்த அன்சு, வேகமாக நடந்து, தன் வீட்டுக்கு அருகில் வந்தார். அந்த மர்ம நபர்கள், அன்சு அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்தனர்.அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோமல், 26, தன் வீட்டுக்கு வெளியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அன்சுவின் அலறல் சத்தத்தை கேட்ட அவர், மோட்டார் சைக்கிளில், மர்ம நபர்கள் தப்ப முயற்சிப்பதை பார்த்தார்.தன் கையிலிருந்த துடைப்பத்தை, அவர்கள் மீது வீசினார். இதில், திருடர்கள் நிலை குலைந்தனர். உடனடியாக, பாய்ந்து சென்ற கோமல், திருடர்கள் வைத்திருந்த செயினை பறிக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த திருடர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கோமலை நோக்கி சுட்டனர்.
துளைத்த குண்டுகள்:

இதில் ஒரு குண்டு, கோமலின் கை விரலிலும், மற்றொரு குண்டு, அவரது மார்பிலும் பாய்ந்தது. குண்டு பாய்ந்த இடங்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அதை பொருட்படுத்தாது, திருடர்களிடமிருந்து, அன்சுவின் செயினை பறித்தார்.அதற்குள், அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள், திரண்டனர். இரண்டு திருடர்களும் தப்பி ஓடி விட்டனர். அன்சுவிடம், செயினை ஒப்படைத்ததும், கோமல் மயங்கி விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.அவரின் மார்பில் பாய்ந்திருந்த குண்டு, அகற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், திருடர்களிடமிருந்து, செயினை திரும்ப பறித்த, கோமலின் துணிச்சலை, டில்லி போலீசாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக