வியாழன், 14 மார்ச், 2013

இந்தி அரசு வழியில் தமிழக அரசு






http://img.dinamalar.com/data/gallery/gallerye_000041949_666741.jpg

 குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில், அமலில் உள்ள பாடத்திட்டங்களின் தரத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) பாடத் திட்டங்களின் தரமும், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இனி, தேர்வாணைய தேர்வுகள், தேர்வர்களுக்கு, சவாலாக இருக்கும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
12 ஆண்டுகளுக்குப் பின்...:

போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படும். 12 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்கள், மாற்றி, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.கடந்த ஒரு ஆண்டில், தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த நட்ராஜ், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதில், ஆறு மாதங்களாகவே, முனைப்பாக ஈடுபட்டு வந்ததாக, துறை வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்தன. நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டித்தேர்வு பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இல்லாதபடி, புதிய பாடத்திட்டங்கள், தரமாக உருவாக்கப்பட்டு உள்ளன.அரசுப் பணிகளில் சேர்பவர்கள், திறமைசாலிகளாகவும், புத்தி கூர்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, குரூப்-1, குரூப்-2 போன்ற, உயர் அலுவலர் பணிகளில் சேர்பவர்களுக்கு, மேற்கண்ட தகுதிகள் முக்கியமாக இருக்க வேண்டும். முந்தைய பாடத்திட்டங்கள், தரமாக இல்லை என்பதை, தேர்வாணைய வட்டாரங்களே ஒப்புக்கொள்கின்றன.ஒடிசா மாநில தேர்வாணையம், குரூப்-1 தேர்வுக்கு, முதல்நிலைத் தேர்வில், இரு தேர்வுகளையும், முக்கிய தேர்வில், 9 தேர்வுகளையும் நடத்துகிறது. ஆனால், தமிழகத்தில், முதல்நிலைத் தேர்வில், ஒரே ஒரு தேர்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. முக்கியத் தேர்வில் (மெயின் தேர்வு), 2, பொது அறிவு தாள்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது, கூடுதலாக, மேலும் ஒரு பொது அறிவுத்தாள் சேர்க்கப்பட்டு உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் பிரதானம்:

நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண், 80ல் இருந்து, 120ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. உயர் அலுவலர் நிலையிலான தேர்வு முதல், குரூப்-4 நிலையிலான தேர்வுகள் வரை, அனைத்து பாடத் திட்டங்களிலும், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய பாடங்கள், பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், குறைக்கப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ., தேர்வு மாற்றம்:

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த தேர்வுக்குப் பின், வேறு தேர்வுகள் கிடையாது. இன சுழற்சி வாரியாக, மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், 150 கேள்விகள், பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கேட்கப்படும்.மீதம் உள்ள 50 கேள்விகள், கிராம நிர்வாகத்திறன்
குறித்து இடம்பெற்றிருக்கும். 150 கேள்விகளுக்கு, 225 மதிப்பெண்களும், 50 கேள்விகளுக்கு, 75 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. வி.ஏ.ஓ., அல்லாத இதர குரூப்-4 தேர்வுகளில், வழக்கமாக, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில், 100 கேள்விகளும், பொது அறிவில் இருந்து, 100 கேள்விகளும் கேட்கப்படும்.தற்போது, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 50 என, குறைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 150 கேள்விகளும், சிந்தித்து விடை அளித்தல் மற்றும் தேர்வரின் தனிப்பட்ட திறன்கள், புத்தி கூர்மையைஆராயும் வகையில், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பத்து வகை தேர்வுகள் :

குரூப்-1, 2, 3, குரூப்-4, குரூப்-6, குரூப்-7, குரூப்-8, வி.ஏ.ஓ., - எஸ்.எஸ்.எல்.சி., - டிப்ளமோ தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள், இளங்கலை மற்றும் முதுகலை தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள் என, 10 வகை தேர்வுகளுக்கும், தனித்தனியே, விரிவான, முழுமையான பாடத்திட்டங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
நட்ராஜ் சாதனை:
இது குறித்து, தேர்வாணைய வட்டாரங்கள் கூறியதாவது:
பாடத்திட்டங்களை, தரமாக உருவாக்க வேண்டும் என்பதில், ஆறு மாதங்களாக, நட்ராஜ், மும்முரமாக ஈடுபட்டார்.பாட வாரியாக, நீண்ட அனுபவம் பெற்ற பேராசிரியர்கள், அனைத்து துறை உயர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தொழில்துறையைச் சார்ந்த வல்லுனர்கள் என, ஒரு துறை விடாமல், அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து, எப்படிப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கினால், தரமான அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கிடைப்பர் என, ஆய்வு செய்து, அதற்கேற்ப, பாடத்திட்டங்களை உருவாக்கினார்.இனி, மனப்பாடம் செய்து, தேர்வை எழுத முடியாது. பாடத்திட்டங்களை முழுமையாக படித்து, அதனை, பல்வேறு வகைகளில் சிந்தித்து, தீர்வு காணும் வகையில், தேர்வை அணுகினால் தான், வெற்றி பெற முடியும்.அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, "புதிதாக வருபவர்களுக்கு, ஒரு கடிதத்தைக் கூட, "டிராப்ட்' செய்யத் தெரியவில்லை. இப்படிபட்டவர்களை தேர்வு செய்து கொடுத்தால், அரசு நிர்வாகம் எப்படி நடக்கும்?' என, கேட்டனர். இனி, இதுபோன்ற நிலை ஏற்படாது. திறமையானவர்கள் மட்டுமே, அரசுப் பணிகளுக்கு வர முடியும்.
புதிய பாடத்திட்டம், உடனடி அமல் :
புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், உடனடியாக
அமல்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, அனைத்து தேர்வுகளும், புதிய பாடத்திட்டத்தின்படியே நடக்கும்.இவ்வாறு, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம், இனிமேல், தேர்வாணைய தேர்வில், "தேறுவது', குதிரை கொம்பாக இருப்பதுடன், தேர்வர்கள் மத்தியில், போட்டியும் கடுமையாக இருக்கும்.
இது நியாயமா? தேர்வர்கள்கேள்வி :
போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், இப்போதே அமலுக்கு வந்துவிட்டதாக, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, முதலில் நடக்கும் தேர்வுகளுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை, தேர்வாணையம் வழங்கியிருக்க வேண்டும்.அப்படியில்லாமல், உடனே, அமலுக்கு வருகிறது என்றால், எப்படி தயாராக முடியும் என, தேர்வர்கள், கேள்வி எழுப்புகின்றனர். பாடத்திட்டங்களை, பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ற புத்தகங்களை வாங்கி, படிக்க வேண்டும். இதற்கு, போதிய கால அவகாசத்தை, தேர்வாணையம் வழங்கவில்லை என, தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வாணைய இணையதளம் முடங்கியது :
குரூப்-1 முதல், குரூப்-4 வரையில், 10 வகையான போட்டித் தேர்வுகள் மற்றும் அதற்கான புதிய பாடத்திட்டங்கள், மொத்த தேர்வுத்தாள்கள், அதற்கான மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரமும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வெளியானது.இந்த விவரங்களை அறிய, நேற்று ஒரே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை பார்வையிட்டதால், பிற்பகலில், இணையதளம் முடங்கியது. நீண்ட நேரம் வரை, இணையதளம் இயங்கவில்லை. முன்பக்கம் இயங்கிய போதும், பாடத்திட்ட பக்கங்கள், இயங்கவில்லை. இதனால், தேர்வர்கள், கடும் சிரமப்பட்டனர்.
-
தினமலர் செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக